Tuesday, October 20, 2009

தமிழக விவசாயிகளின் இஸ்ரேல் பயணம்



'உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று பாடினர் வள்ளுவர். ஆனால், விவசாய நாடான இந்தியாவில், சீரழிந்துவரும் தொழிலில் முதலிடத்தில் இருக்கிறது விவசாயம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்வத்தை விவசாயத்தின்பக்கம் திருப்பும், வாய்ப்புகளை பெருக்கும் உருப்படியான செயல் திட்டங்கள் எதையும் அரசுகள் ஆலோசிப்பதாக கூட தெரியவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை. ஒருபக்கம் விளை நிலங்களை எல்லாம் விலைநிலங்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன. இன்னொருபக்கம் காவேரி நதி பிரச்சினை முடிவதாக தெரியவில்லை

1924 பிப்.,18ல் சென்னை மாகாணமும், மைசூர் மாகாணமும் செய்த ஒப்பந்தத்தின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே 1929ல் கர்நாடகாவில் 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., (கிருஷ்ணராஜ சாகர்) அணை கட்டப் பட்டது. தமிழகத்தில் காவிரியின் குறுக்கே 1934ல், 93.470 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை கட்டப்பட்டது.

1956ல் மொழிவாரி மாநில சீரமைப்பின் படி, மைசூர், சென்னை ஆகியவை கர்நாடகா, தமிழ்நாடு என்ற இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின், நீர்தேக்கங்களைக் கட்டி அதிகளவில் நீரை சேமித்து பாசனத்துக்குப் பயன்படுத்த முடிவு செய்த கர்நாடக அரசு, பவானி அணைக்கு எதிராக கர்நாடகாவில் கபினியாற்றின் குறுக்கே அணை கட்டியது.
1924 ஒப்பந்தம் 1974ல் காலாவதியானது. காவிரி பாசனப்பகுதியில் 11 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன பரப்பை அதிகரிக்கக் கூடாது என்ற விதியை மீறி கர்நாடகா 40 கோடி ரூபாய் மதிப்பில் 6.6 லட்சம் எக்டேர் கூடுதல் பாசன வசதி ஏற்படுத்தியது.
அதற்கேற்ப கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவை படிப்படியாகக் குறைந்தது.காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பாதித்தது.

பலகோடி ருபாய் மக்களின் வரிப்பணத்தை விழுங்கிகொண்டிருக்கும் காவேரி நதிநீர் விவாகரத்திற்கு என்றைக்கு முடிவு வரும்??

இந்த கேள்விக்கு பதிலே இல்லை இன்று உணர்ந்து கொண்ட நமது தமிழக அரசு, நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாய புரட்சி குறித்து அறிவதற்க்காக விவசாயிகள் குழு ஒன்றை அங்கு அனுப்பிஇருக்கிறது.

வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குழுவை வழியனுப்பி வைத்தார். தோட்ட கலைத் துறை இயக்குனர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் தமிழக விவசாயிகள் நலவாரிய தலைவர் ராமலிங்கம் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 21 விவசாயிகள் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து இஸ்ரேல் சென்று உள்ளனர். .

விவசாயக் குழுவை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியதாவது:

"நீர் ஆதாரம் இல்லாத நாடான இஸ்ரேல், விவசாய துறையில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அங்குள்ள சிறந்த தொழில்நுட்பமும், நீர் சுத்திகரிப்பு முறையும் முக்கிய காரணம். தமிழகத்திலும் இஸ்ரேலை போன்று, விவசாயத் துறையில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முதல்வர் விரும்பினார்.

இதையடுத்து, தமிழக விவசாயிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி அளிக்க உலக வங்கி ஏற்பாடு செய்தது. இந்த ஒருவார பயிற்சி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இஸ்ரேல் நாட்டில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சொட்டுநீர் பாசன முறை, நீர் சுத்திகரிப்பு முறை உள்ளிட்ட பல விஷயங்கள் தமிழக விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளன. பண்ணைகளுக்கும் விவசாயிகள் நேரடியாக சென்று பார்வையிட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்திலும் வறட்சி பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த முடியும் " . இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

விவசாயத்தை மேம்படுத்த இயற்கை வேளாண்மை என்னும் எளிமையான திட்டத்தை நம்மாழ்வார் அறிவித்து, பல பகுதிகளில் நிரூபித்தும் காட்டிஇருக்கிறார்.
"நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றிய இயற்கை விவசாய முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அது ஒன்றுதான் தீர்வாகும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர்களுக்கான சேவை மையம் தொடங்கப்பட வேண்டும். முதலில் உழவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இரசாயன உரம் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெற முடியும் என்கிற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ, விளைநிலம் செத்துவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

பொதுவாகவே உணவுப் பொருள்கள் அதிக தூரம் பயணம் செய்யக் கூடாது. அந்தந்த மாவட்டத் தேவைகளை அங்கேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி செய்பவரும், நுகர்வோரும் அருகிலேயே இருந்தால்தான் விலையேற்றமும் இருக்காது.இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் " என்கிறார் நம்மாழ்வார்.

நதிநீர் சேகரிப்பு, தூர்வாருதல், மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்தல் போன்ற அம்சங்களை நிறைவேற்ற லாயக்கு இல்லாத அரசு, இஸ்ரேல் நாட்டு விவசாய முறைகளை இங்கே எப்படி அமல் படுத்தபோகிறது?

ஏன் எந்த அமைச்சர்களும் நம்மாழ்வார் கூறும் இயற்கை வேளாண்மை திட்டத்தை இதுவரை முன்மொழியவில்லை?


கடைக்காரர் கமெண்ட்:
காவேரிதான் கைய விட்டு போச்சுன்னு பாத்தா....பாலாற்றை ஆந்திராவும், முல்லை பெரியாரை கேரளாவும் எடுத்துக்க போறாங்க.....நம்ம தமிழ்நாடே குடிக்ககூட தண்ணி இல்லாம பாலைவனமாக போகுது..... இதுல இஸ்ரேல் விவசாயத்தை இங்க கொண்டு வராங்களாம் நம்ம அரசியல்வாதிங்க....




பதிவு : இன்பா

1 comments:

velji said...

உலக வங்கி என்றால்...கமிஷன் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதே!

 
Follow @kadaitheru