Sunday, December 11, 2011

குரலைத் திருடியது யாரோ?

நம் நாட்டில் நீதிமன்றம் தரும் சில தீர்ப்புகள் பெரும் விவாததிற்கு உள்ளாகி விடும். அப்படி, கடந்த நவம்பரில் வெளியான ஒரு தீர்ப்பு இஸ்லாமிய சமுகத்தில் விவாதத்திற்கும், கவனத்திற்கும் உரியதாக இருக்கிறது.


கவிஞர் ரசூல் - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த இவர் தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பெரிதும் கவனிக்கபட்டு வருபவர். இஸ்லாமிய சமுகத்தை விமர்சிப்பதாக இவர் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி, இவரது ஊரில் உள்ள முஸ்லீம்களை கட்டுபடுத்தும் ஜமாஅத், இவருக்கு பதவா என்னும் தடை விதித்து ஊர் விளக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து ரசூல் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றம் ஜமாத்தின் தடை மனித உரிமை மீறல் என்று அறிவித்து, அந்த தடையை நீக்கி விட்டது.

இதை குறித்து இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த எழுத்தாளர் களந்தை பீர்முகமது அவர்களின் கருத்துக்களை கிழே கொடுத்துள்ளேன்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நாகர்கோவில் ஏசுசபை குழுவால் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் குடியும் குடிப்பழக்கமும் என்னும் பொதுத் தலைப்பின் கீழ், இஸ்லாத்தில் குடிசார்ந்த இனங்கள் என்று கட்டுரை எழுதப்பட ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, ‘இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்’ என்னும் தலைப்பில் உயிர்மை இதழில் பிரசுரமானது. அந்தக் கட்டுரையை எழுத அவர் இணையதளம் உள்ளிட்ட பலவழிகளிலும் முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகளைத் தேடி வாசித்து, அவற்றின் குறிப்புகளைக் கையாண்டு தன் பணியை நிறைவேற்றியிருந்தார். அக்கட்டுரையை எழுதியதற்காகத் தக்கலை அபீமுஅ ஜமாத் கவிஞர் ரசூலை காஃபிர் (இறை மறுப்பாளர்) ஆக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவரிடம் விளக்கம் கேட்டது.

28.05.2007 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்டுரைக்கான விளக்கத்தை அளித்தார் ரசூல். அந்த விளக்கத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என்று ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார்; அவரும் அவ்வாறே எழுத்துபூர்வமான விளக்கத்தை அளித்தார். முஸ்லிம் சட்டத்திற்கோ இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கோ எதிராக அந்தக் கட்டுரையில் எதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஜமாத்தின் பிடிவாதம் தளரவில்லை. அவர் அந்தக் கட்டுரையை எழுதியதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவே கருதியது. இதைச் சரிசெய்ய அவர் ‘கலிமா’ என்னும் இஸ்லாமிய உறுதியேற்பைச் செய்ய வேண்டுமென்று கூறியது. அவர் அதையும் செய்தார். ஜமாத்தோ தன் நிலையிலிருந்து கீழிறங்க மறுத்தது. ரசூலை காஃபிர் என்று அறிவிப்பதன் மூலமே அவர்களுடைய அதிகாரத்தின் பசி அடங்குவதாக இருந்தது. இஸ்லாத்தின் உள்ளே ஒருவர் நுழைவதற்கான புதிய விதிகளைத் தக்கலை அபீஅமு ஜமாத் தனக்குள் தானாகவே உருவாக்கிக்கொண்டிருந்திருக்கலாம். இவ்வாறாக ரசூல் காஃபிர் ஆனார்.

காஃபிர் என்பது அல்லாஹ்வை மறுப்பவர் அல்லது ஏற்றுக்கொள்ளாதவர் என்ற மேலோட்டமான அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை. ஒருவர் காஃபிர் என்று அறிவிக்கப்படுவதன் மூலம் முதலில் அவருக்கும் அவர் மனைவிக்குமான ‘மணஉறவு’ தானாகவே முறிந்துவிடுகிறது. ‘அவர்’ பெற்றெடுத்த குழந்தைகள் அவருடையவை அல்ல. ‘அவர்’ தன் தந்தைவழிச் சொத்துகளின் மீது உரிமையற்றவர். அவரது ஜமாத் உறவுகள் முழுவதும் துண்டிக்கப்படும். அவர் பிறர் வீட்டு பிறப்பு - இறப்பு வைபவங்களில் கலந்துகொள்ள முடியாது. ஜமாத்தின் எல்லைக்குள் அவர் இருப்பதால் மற்றவர்களும் அவருடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வர உரிமை கிடையாது. (ஆனால் காஃபிர் என்பவர் தன்வீட்டு வைபவமாக எதையும் நடத்த முடியாது என்பதே உண்மை) மகளின் திருமணத்தை நடத்த முடியாதபடி அனைத்துவிதமான தடை நடவடிக்கைகளும் இந்தக் காஃபிர் என்ற அறிவிப்பின் மூலம் வந்துவிடுகின்றன. (கோர்ட் விசாரணையின்போது இதைப் பிரதிவாதிகளின் சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்)

இவ்வளவு பெரிய அடக்குமுறைகளை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாது. சமய ஒற்றுமையையும் சமூக வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ரசூல் கலிமாவைச் சொன்ன பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. ரசூலுடன் அவர் மனைவி மக்களும் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். இதனால் தன் உரிமைகளை நிலைநாட்ட பத்மனாபபுரம் உரிமையியல் கோர்ட்டை ரசூல் அணுகினார்.

ரசூல் காஃபிர் என அறிவிக்கப்பட்டதும் ஊர்விலக்கம் செய்யப்பட்டதும் எழுத்துபூர்வமாக அவருக்குத் தரப்படவில்லை. ரசூல் அபீமுஅ ஜமாத்தின் துணைத் தலைவராக இருந்த நிலையிலேயே இந்த அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜமாத் என்னும் அடிப்படையின் கீழ் ஜமாத் நிர்வாகிகள் அனை வரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் அதன் மேற்பார்வையில் இருப்பவர்கள். வக்ஃப் வாரியத்தின் எந்தவொரு சட்டப் பிரிவும் ஒரு முஸ்லிமைக் காஃபிர் ஆக அறிவிக்க அதிகாரம் அளிக்கவில்லை.

ஆனால் தக்கலை அபீமுஅ ஜமாத் தனக்குத் தானே வெவ்வேறு விதமான அதிகாரங்களைக் கற்பனை செய்து கொண்டு மனித உரிமைகளுக்குப் புறம்பான நிலையில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தனக்கும் ஒரு சமூக வாழ்க்கையும் சமூக உறவும் உள்ளது என்பதையோ தன்னுடைய இஸ்லாமியப் புரிதல் பரிகாசத்திற்கு உள்ளாகும் என்பதையோ உணர மறுத்தபடியே ஜமாத் இருந்தது. ரசூலைத் தண்டிக்க வேண்டும் என்பது அவர்கள் ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிட்ட ‘தீர்ப்பாக’ இருந்திருக்கிறது. பின்பே விசாரணையை நாடகமாக நடித்துள்ளனர்.

அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இப்போது ரசூலுக்குச் சாதகமாக வந்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதமாகியும் அபீமுஅ ஜமாத் ரசூல்மீதான ஊர்விலக்க உத்தரவையும் காஃபிர் என்ற அறிவிப்பையும் ரத்துசெய்யவில்லை. அதற்கான எண்ணங்களும் ஜமாத்திற்கு இல்லை. இருதரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடித்துவிட விரும்பி மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கும் இதுவரையில் பலனெதுவும் கிட்டவில்லை.

ரசூலின் மீதான ஏதோ தனிப்பட்ட பகைமைக்குப் பழிதீர்ப்பதாக இருந்தால், அவரை இஸ்லாமிய விரோதக் கட்டுரையாளர் என்று காட்டுவதன் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்னும் ராஜதந்திரம் தக்கலை அபீமுஅ ஜமாத்திற்கு நிறையவே இருக்கக்கூடும். புகழ்பெற்ற ஜமாத்தின் நிர்வாகிகளாகவே இருப்பதனாலேயே, இஸ்லாத்தில் கற்றுத்துறைபோகிய ஞானிகளாக விளம்பரம்பெற அவர்கள் விரும்புகிறார்கள். ஜமாத் நிர்வாகம் வேறு, இஸ்லாமிய ஞானம் வேறு இரண்டுக்கும் இடையே தொடர்புகள் இல்லை.

வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வெளியுலகம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியப் போர்வையின் கீழே இரும்புக்கரம் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளை ஆண்டுகொண்டிருந்த முஸ்லிம் சர்வாதிகாரிகள் எல்லாம் இன்று இலவம் பஞ்சுகளாக ஊதித் தள்ளப்படும் சூழலில், இஸ்லாமும் முஸ்லிம் ஜமாத்துகளும் எந்தப் புள்ளியில் தங்கள் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எனவே கோர்ட்டின் வாசகங்களின் கீழே தக்கலை அபீமுஅ ஜமாத்தின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பது அவசியமானது.

இந்த வழக்கின் மிகவும் ருசிகரமான அம்சங்களில் ஒன்று, ஜமாத் தான் ஒளிந்துகொள்வதற்குச் சரியான இடமின்றி ஓடியலைந்த கதை. ஜமாத் நடவடிக்கைகளால் ரசூல்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அது அவரின் குடும்பத்தின் மீதும் பாதிப்பை உண்டாக்கியது. எனவே கோர்ட்டை அணுகினார். ஆனால் அபீமுஅ ஜமாத், பை-லாவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தனக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தப் பிரச்சினை வக்ஃப் சம்பந்தப்பட்டுள்ளதால் வக்ஃப் டிரிப்யூனலுக்கு மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டென்றும் இந்தக் கோர்ட்டிற்கு அந்த வழக்கை விசாரிக்க உரிமையில்லை என்பதால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுடென்றும் கோரியது. ஆனால் வக்ஃப் வாரியம் இந்த விசயத்தில் வெகு ஆக்கபூர்வமாகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கருத்தில் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.


வக்ஃப் வாரியத்தின் அதிகாரமே கூடும் என்று குறிப்பிட்டவர்கள் அதற்கும் பணிய மறுத்தது ஏன்? எனவேதான் “பிரதிவாதிகள் செயல்பட்டுள்ளதைப் பார்க்கும்போது வாதியின் மேலுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே வாதிக்கு எதிராகப் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தை மிஞ்சிய இஸ்லாமிய விசுவாசிகள்?

மேலும் ஜமாத் தன் செயலை ஊர்விலக்கம், காஃபிர் என்று சொல்வதைத் தவிர்த்து ஒழுங்கு நடவடிக்கை என்று பசப்பிக்கொள்கிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையால் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் ஜமாத் சொல்கிறது. ஒரே சமுதாயத்தவர்களாக நிறைந்துள்ள தெருவில் ஒருவரின் மீது காஃபிர் பத்வாவும் ஊர்விலக்கமும் செலுத்தப்பட்டால், அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று கூறுவதைப் போன்ற ஒரு மோசடியான பொய் என்ன இருக்க முடியும்? ஒரு பெண்ணின், அவருடைய பிள்ளைகளின் துயரச் சூழலை அபாண்டமான பொய்கூறி மறைப்பதற்கு ஜமாத்திற்கு ஓர் இரும்பு இதயம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அளவற்ற அருளாளனை, நிகரற்ற அன்புடையவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளிலும் எண்ணிக்கையில் அடங்காத தொழுகைகளாகத் தொழுது வருபவர்கட்கு ‘அல்லாஹ்’வின் பெயரை உச்சரிக்க என்ன தகுதி உண்டு?

கலிமா சொல்வது, மன்னிப்புக் கேட்பது, வக்ஃப் வாரியத்திற்குக் கட்டுப்படுவது என்று ஜமாத், வாதிக்கு அடுத்தடுத்துத் தடைகளை உண்டாக்கியபோதும் வாதி எல்லாவற்றையும் செய்தே வந்திருக்கிறார். ஆனால் ஜமாத்திற்குத்தான் தன் கோட்பாடுகளைத் தன்னாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது. எனவே இதில் இருக்கும் காரணம் இஸ்லாமிய விரோதம் அல்ல. ஜமாத்தின் சொந்த மனசாட்சிக்கே எதிரான விரோதம்தான் இப்போது முழுமையாகி நிற்கிறது.

உரிமைகளைப் பறிப்பது, ஊர் விலக்கம் செய்வது என்பதை இந்த நாள்களிலும் ஜமாத் நிர்வாகங்கள் கையிலெடுப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் மென் மேலும் நெருக்கடிகளே. இவற்றில் செயல்படுவது இஸ்லாமியப் பற்று அல்ல. இவையெல்லாம் ஒருவிதமான அதிகாரத்தின் சாமியாட்டம். எந்த ஒரு மதத்தின் வாழ்க்கை நெறியையும் முழுதாகப் பின்பற்றி வாழும்படியாக உலக நடைமுறைகள் இல்லை. முடியக்கூடிய, கடைப் பிடிக்கக் கூடிய கொள்கைகளிலும் மதச் சுத்தவான்களாக இங்கே எவரும் நடமாடவில்லை. அபீமுஅ ஜமாத்தருக்கும் இதுதான் உண்மை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறோம்.

அவர்களின் ஆட்சேபத்திற்குரிய கட்டுரையை ரசூல் தன் கருத்துகளால் நிரப்பவில்லை. மிகத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளையே அவர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். இவர்களின் இஸ்லாமிய அறிவை எந்த ஊன்று கம்பைக் கொண்டு தாண்டிவந்திருக்கிறது தக்கலை அபீமுஅ ஜமாத்? ஒருவேளை இந்த வழக்கைப் பிரதிவாதிகள் மேல்முறையீட்டுக்கும் கொண்டுசென்றால், இன்னும் அதிக அதிகாரங்கள் கொண்ட கோர்ட்டுகளால் அபீமுஅ ஜமாத் கடும்கண்டனங்களுக்கு உள்ளாக நேரிடலாம்.

ரசூல் தன்வாழ்வில் இதுவரை ஒரு துளி மதுவும் அருந்தவில்லை என்கிறார். இதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் முஸ்லிம்கள் காணப்படுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடைமுறையில் செயல்படுத்துவோருக்கு இங்கே தண்டனைகள் இல்லை. ஆனால் ஆய்வுரீதியாக ஒன்றைச் சொன்னால் தண்டனை. முஸ்லிம் சமுதாயம் சுற்றுப்புறங்கள் சூழ வாழ்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சுற்றியும் பல சூழல்கள் உள்ளன. டாஸ்மாக்கை எதிர்க்கிறோம்; டாஸ்மாக்கைக் கொண்டுவந்த ஆட்சியை, கட்சியை ஆதரிக்கிறோம்! இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள முடியாத ஜமாத்கள், சமூகத்தின் சுமைகள். அவர்களைச் சுமந்து வழிநடக்கும் நாமும் கீழே விழுவோம். ஜமாத்காரம் கீழே விழுந்து நொறுங்கும்!

மாநில உலமா சபை இதில் காட்டும் மௌனத்தைப் புரியவழியில்லை. அது உடனே செயல்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்மீதான அதன் அக்கறையே இவ்வழக்குகளின் கைவிளக்கு! கருத்து வெளிப்பாட்டு உரிமையை உணர்ச்சிமயமான மனிதர்கள் எப் போதும் தடுத்தபடியே இருக்கிறார்கள். இனிமேலும் உலமா சபை நேரிய வழிகாட்ட முயற்சி எடுக்கட்டும்; அவ்வாறு நடக்கவில்லையென்றால் தீராப்பழி வரும்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும்! ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாய் இருந்தால் அது அவன் மனத்திற்கும் இறைநிலைக்கும் உள்ள நேரடி உறவாகத்தானே இருக்க முடியும்? அந்த உறவுகளையெல்லாம் தடுத்தவிடக்கூடிய கைவிலங்குகளை - கால்விலங்குகளைத் தக்கலை ஜமாத்தாரால் தயாரித்துவிட முடியுமா, என்ன?

என்கிறார் களந்தை பீர்முகமது.


மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகிவழிய
ஒரு மாயவனத்தின்
வரிகளுக்குள் கடல்.

உன் இசை நதியில் மிதந்துவந்ததொரு
குழந்தை
உடல்சுழி உயிர்தொட்டு
கன்னத்தில் முத்தமிட்டு
பின் திரும்பிச் செல்கிறது
மற்றுமொரு பூவாய்.

குரலைத் திருடியது யாரோ
பாட மறுத்தது பொம்மை ஒன்று.

வீட்டிற்குள் நடந்த பூகம்பத்தை
அக்கறையோடு விசாரிக்கிறது
முற்றத்தில் நட்டுவைத்த ரோஜாச் செடி.

- ஹெச்.ஜி.ரசூல்

ரசூல் அவர்களுக்கு ஆதரவான இந்த சிறப்புமிக்க நீதிமன்ற தீர்ப்பு,இஸ்லாமிய படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதுடன்,ஜமாஅத் போன்று மதத்தின் பெயரால் செயப்படும் கட்ட பஞ்சாயத்துக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது.

-இன்பா

Monday, September 5, 2011

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

இன்று இந்திய ஆசிரியர் தினம்.

ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .

இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.

ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம்.

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.




அனைவருக்கும் நமது இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

-இன்பா

Saturday, September 3, 2011

மாறிவரும் கல்வி முறைகள்


"பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா?"
- இது ஒரு பாடல் வரி.

மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.

பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிகிறார்.

தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது.

காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.

தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

கற்பதில் புதிய அணுகுமுறைகள்

வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரியர்களிடையே கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. வகுப்பறைகளில் அந்த மாற்றத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.

பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.

மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.

முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.

மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முறைகளும் மாறியுள்ளன.

வகுப்பறையில் நான்கரை அடி உயரத்திற்குத் தாழ்மட்டக் கரும் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் மாணவர்கள் சாக்கட்டிகளைக்கொண்டு எழுதிப் பழகுகின்றனர். தாள்களில் எழுதிப் பழகியவர்கள் கரும்பலகையில் எழுதும்போது கையெழுத்து சரியாக வராது. இப்பயிற்சி அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்விமுறையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓவியப் பயிற்சி குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் தமக்குப் பிடித்த படங்களை வெள்ளைத்தாள்களில் வரைகின்றனர். அது ஒரு கிளியாக இருக்கலாம். கரடியாகவோ நாயாகவோ நரியாகவோ நிலவாகவோ இயற்கைக் காட்சியாகவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றாகவோ இருக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு வரைந்த படங்கள் வகுப்பறையின் குறுக்கே கம்பிகளால் அமைக்கப்பட்ட பந்தல்களில் தொங்கவிடப்படுகின்றன. மாணவர்கள் வரையும் படங்களை ஆசிரியர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்கின்றனர். செயல்வழிக் கல்விமுறை என்பது ஒருவகையில் விளையாட்டின் கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. விளையாட்டுகளின் மீது இயல்பான ஆர்வம்கொண்ட குழந்தைகளுக்குக் கற்றல் ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.

கணிதம் பயிற்றுவிக்கும் முறைகள்

தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.

புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தின் கீழ் கதைகள், பாடல்கள், அறிவியல் வினா விடைகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள் முதலான அரிய உள்ளடக்கங்களைக்கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. தனியார் பள்ளிகளில் இந்தப் புத்தகப் பூங் கொத்துத் திட்டம் இல்லை.

இவற்றின் சில தலைப்புகள் யுரேகா- யுரேகா, கோட்டை, ஆவணக் காப்பகம், சித்தன்ன வாசல், இந்திய அறிவியல் அறிஞர்கள், இளம் பருவத்தில் விஞ்ஞானிகள், காலநிலை, கடல்கள், செவ்வாய் கிரகம் முதலானவை. இப்புத்தகங்களின் வண்ணமும் தாளின் தரமும் தற்போது வெளி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்கவை. மாலை நேரக் கற்றல் செயல்பாடுகள் என்பவை மாணவர்களுக்கிடையே நடைபெறும் குழு விளையாட்டுகள்தாம். ஆசிரியர் மேற்பார்வையில் அல்லது அவரும் இணைந்து பிற்பகலில் விளையாட்டுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் உற்சாகம், ஆளுமைப் பண்பு, மகிழ்ச்சி, கூட்டுமுயற்சி, தோல்வியை ஏற்கும் பண்பு ஆகியவை இதன் மூலம் பேணப்படுகின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புகள்வரை பயிலும் குழந்தைகளுக்குப் பாட வாரியாகப் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாட அட்டைப் பயிற்சியை முடித்தவுடன் அந்தப் பயிற்சி ஏட்டை எழுதி முடிக்கின்றனர். அவர்களின் அடைவுத்திறன் மாணவர் வாரியாக அட்டையில் குறிக்கப்படுகிறது. மாதவாரியாகவும் அட்டையில் அடைவுத்திறன் குறிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்திச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.

இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.

கணினிக் கல்வி

மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.

வழக்கமாகத் தரப்படும் கையெ ழுத்துப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி, அறிவியல் செய்முறைப் பயிற்சி முதலானவை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. ஆபரண நகை செய்தல், காளான் வளர்ப்பு, வண்ண ஓவியங்கள் தீட்டுதல், பூக்கூடை, மேட், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (SC, ST) குழந்தைகளுக்குச் சிறப்பு ஆளுமைத்திறன் பயிற்சி தரப்படுவதுடன் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் புத்தகப் பை, கணித உபகணங்கள், அகராதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் உணவுடன் கூடிய உறைவிடப் பயிற்சியாகும். பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் என்னும் முறை செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகப் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டப்பயிற்சி, தையல் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்கின்றனர். இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய பகல் நேரப் பராமரிப்பு மையங்கள், பயிற்றுவிக்க சிறப்புக் கல்வித்தகுதிபெற்ற சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கு வராத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சென்று தசைப்பயிற்சி, புலன் பயிற்சி அளித்துக் கல்வியும் கற்பிக்க வசதி என இந்தத் திட்டம் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி விரியும் ஒன்று. பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூலம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்குக் கல்வியுடன் தசைப்பயிற்சியும் அளிக்கின்றனர். இங்கே குழந்தைகளை விட்டுவிட்டுக் காத்திருக்கும் பெற்றோருக்கும் தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி (ஷிஸிஙிசி) மையங்கள் அமைக்கப்பட்டு உண்டு உறைவிடப் பயிற்சியாகச் சிறப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.

இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு கஸ்தூர்பா காந்தி பாலிக வித்யாலயா (ரிநிஙிக்ஷி) என்னும் சிறப்புப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் 6-8 பெண் குழந்தைகளுக்கு எட்டாவது முடித்து முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ப்பதுவரை கல்வி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ஆம் வகுப்பில் சேர்வது உறுதிப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கற்கும் முறைகள் மாறியுள்ளதால் கற்பிக்கும் முறைகளும் மாறியுள்ளன. அறிவியல் மாற்றம்தான் வாழ்க்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய கல்விச் செயல்பாடுகளை எல்லாம் தனியார் பள்ளிகள் இழந்துவிட்டன. தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்திற்காக வகுப்பறைச் சூழலையோ கல்விச் சூழலையோ மாற்றிக்கொள்ளாமல் மனப்பாட முறைகளைப் பின்பற்றி பழைய மரபு சார்ந்த முறையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில் உயிரோட்டமுள்ள வகுப்பு (Smart Class) என்பது இல்லை. ஆனால் அது (Smart Class) அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ளது.

கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள்

கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியர், ஒரு பிரம்பு, ஒரு சாக்பீஸ், ஒரு பழைய கரும்பலகை, ஒரு புத்தகம் என்பது பழைய நடைமுறை. இப்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பில்லை. வகுப்பு முழுக்க தாழ்மட்டக் கரும்பலகைகள். சாக்பீஸ் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கைகளில் வந்துவிட்டது. வண்ணமிகு பல்வேறு தலைப்புள்ள புத்தகங்கள், கற்பிக்கும் முறைகள் ஆசிரியர் சக மாணவராகக் குழந்தைகளுடன் அமர்ந்து கற்பிக்கிறார். பழைய குருகுலமுறையிலும் குருவுக்கு உட்கார மனைப்பலகை இருந்தது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் பாயில் அமர்ந்து கற்பிக்கின்றனர். நவீன யுக்திகள் ஆசிரியருக்குத் தெரிந்திருப்பதுடன். கணினி இயக்கப் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஜிக்ஷி, ஞிக்ஷிஞி, லிசிஞி இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வசதி ஜிக்ஷி, ஞிக்ஷிஞி உள்ளது. மாணவர்கள் வரைந்த படங்களைத் தனி உற்சாகத்துடன் கம்பிப் பந்தலில் மாட்டி ஆசிரியர்கள் அழகுபடுத்துகிறார்கள். மாணவர்களின் குழு விவாதங்களில் பங்கேற்கின்றனர். கூடி விளையாட்டு என்கிற மாலைச் செயல்பாடுகளில் இவரும் மாணவர்களோடு விளையாடுகிறார்.

ஆசிரியர்களின் கல்வித் திறன்கள் மேம்படப் பல்வேறு பயிற்சிகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவளப் பயிற்சி மையம் மூலம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சிகள், ஆபரண நகை செய்தல், மெழுகுவர்த்தி, சாம் பிராணி, சாக்பீஸ் செய்தல், கண்ணாடி ஒளிகள், முகமூடிகள், பர் பொம்மைகள் செய்யப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் ஆங்கிலம் போதிக்கும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அறிவியல் உபகரணங்கள் கையாளும் பயிற்சியும் மாணவர்கள் உடல் நலம் பேணும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கற்பித்தலை ஓர் இனிமையான செயலாக ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் எதுவும் தனியார் பள்ளிகள் மூலம் அளிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் மனவியல் பற்றிய சிந்தனையை இப்பயிற்சிகள் வளர்க்கிறது. கற்பதை நிறுத்திவிடுபவர்கள் ஆசிரியர்களாகத் தொடர முடியாது என்ற கல்வி மேதை ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு இப்போது பயிற்சிகளின் மூலம் பலன் கிடைத்திருப்பதுடன் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆசிரியர்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. கிராமக் கல்விக் குழு மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு குழந்தைகளின் சிக்கல்களைக் களைய முற்படுகின்றனர். பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்துவருகின்றனர்.

எளிமையான கதைகள், சுவை மிக்க உரையாடல்கள், நல்லொழுக்க மிக்க செயல்பாடுகள், சுகாதாரத்தைப் போற்றும் நடைமுறைகள் ஆகியவை ஆசிரியர்களின் முதல் பணியாக மாறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்க விரும்புவதுபோல் மக்கள் கூறும் நல்ல சொற்களை ஆசிரியர்களும் கேட்க விரும்பத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர்கள் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றனர். கழிப்பிட வசதி, கட்டட வசதி போன்றவற்றை நேரடியாக உயரதிகாரிகளிடம் சென்று கேட்டுப் பெற்றுப் பள்ளியை மேலும் சிறப்பாக வைத்திருக்கும் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் கற்பித்தல் முறையின்மீதும் பயிற்சிகள்மீதும் ஆர்வத்தைக் காட்டுவதில் சுணக்கமாக இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.

மலைப்பகுதி, தொலைதூரப் பகுதிகளுக்குத் தற்போது அவர்களே சொந்த வாகனத்தில் சென்றுவிடுகின்றனர். அந்தியூரில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் ஆசிரியர்களே தனி ஜீப்புகளில் பல குழுக்களாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியர் வராமை குறைந்துள்ளது. பள்ளிகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய உத்திகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உருவாகிவருகின்றனர். அரசுப் பள்ளிகளின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. அரசுப் பள்ளி என்பது நல்ல கட்டடம், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான குடிநீர், கணினிமையம், தொலைக்காட்சிப் பெட்டிகள், புத்தகப் பூங்கொத்துடன் கூடிய நூலகம், பாதுகாப்பான சுற்றுச்சுவர், நவீன வசதிகளுடனான வகுப்பறை என மாறத் தொடங்கிவிட்டது.



தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.

(நன்றி : திரு.பொன்.குமார் மற்றும் காலச்சுவடு பதிப்பகம்).

Monday, July 25, 2011

6-ஆம் அறிவு

அன்பு வாடிக்கையாளர்களே,தவிர்க்க இயலாத சில பணிகளால், கடைதெருவில் சரக்குகளை கடந்த சில வாரங்களாக வெளியிட இயலாமல் போய்விட்டது.

இதோ, மீண்டும் நமது சிறப்பு தொடரான "6-ஆம் அறிவு " தொடருடன் சரக்குகள் இனி தொடரும்.



அறிவு சரக்குகள் :

உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி தெரியுமா? அது உலகிலேயே அதிக மக்களை கொண்ட சீனா நாட்டின் சீன மொழிதான்.

உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட நாடு...வேற என்ன சார். நம் இந்திய நாடுதான். நம் நாட்டில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை....1652 . அதில் ஆட்சி மொழியாக இருப்பவை மொத்தம் 18 மொழிகளே.

Acoustics - இதுதான் ஒளியை பற்றிய அறிவியல் துறையின் பெயர்.

Hygrometor - காற்றின் ஈரப்பதத்தை அளவிட உதவும் கருவியின் பெயர் இது.

Lactometor - இது நாம் குடிக்கும் பாலின் அடர்த்தியை அளவிட இருக்கும் கருவி.

லேசரை கண்டுபிடித்தவர் பெயர்...கார்டன் கௌல்ட். வருடம் 1957 .

நீல் ஆம்ஸ்ட்ராங் , நிலவில் முதலில் காலடி வைத்தவர் என்பது எங்களுக்கு தெரியும்தானே? நிலவில் அவரை தொடர்ந்து இரண்டாவதாக காலடி எடுத்துவைத்தவர் பெயர்... எட்வின் ஆல்ட்ரின்.

பூமியின் வயது 4.6 பில்லியன் வருடங்கள். பரப்பளவு :415,120.000 சதுர கிலோமீட்டர்.

3900 தீவுகளை கொண்ட நாடு...ஜப்பான். உலகின் மிகபெரிய தீவு...கிரீன்லாந்து. உலகில் விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நாடு...இந்தியா இல்லை...ஜெர்மனி.

சராசரி மனிதனின் மூளையின் எடை : ஒன்றரை கிலோ. அளவு : ஒன்றரை லிட்டர்.

"ஜகானோஸ் கோப்" என்றால் என்ன தெரியுமா? அதுதான் நமது மூளையை தினசரி மழுங்கடித்து கொண்டிருக்கும் டிவி.

அறிவுக்கு விருந்து :

ஒரு ஜென் கதை :

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.

தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.

கதையின் நீதி :
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

அறிவுக்கு அழகு :



-இன்பா

Thursday, June 30, 2011

ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்



1806 ஜூலை 10.

அன்று - சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்பு - வேலூர்க் கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் நிலவு பிரகாசித்துக்கொண்டிருக்க, அதிகாலை 2 மணிக்கு இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் காவல் படையுடன் கோரமான கிளர்ச்சி ஒன்றில் இறங்கினார்கள். அலறல்களும் துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் அமைதியைச் சிதைக்க, அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டார்கள்; ஆங்கிலேயரின் பாசறைகளுக்குள் சுட்டார்கள்; அவர்களது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள். அத்தாக்குதலில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் இறந்தார்கள்.

14 மைல் தள்ளி ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பியின் படையினர் காலை 9 மணிக்கு ஏவிய எதிர்த் தாக்குதலில் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். சில பிரிட்டிஷ் தகவல்களின்படி, இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 800.

வரலாற்றுப் பதிவுகளில் அதிகம் இடம்பெறாத இந்த நிகழ்வுதான் காலனிய இந்தியாவில் வளர்ந்துவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடந்த முதல் பெரும் கிளர்ச்சி. இந்த நிகழ்வால் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு வேலை போனது.

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டிய, முதலைகள் நிறைந்த அகழியுடன்கூடிய வேலூர்க் கோட்டையை 1677இல் சிவாஜி கைப்பற்றினார்;

1768இல் அதைக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ராணுவத் தளமாக்கிக்கொண்டது. கிளர்ச்சி நடந்த சமயத்தில் அந்தக் கோட்டையில் மேன்மை தங்கிய மன்னரின் 69ஆம் ரெஜிமென்ட், 1ஆம் பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், 1ஆம் ரெஜிமென்ட், 2ஆம் பட்டாலியனின் மொத்தப் படையினர், 23ஆம் ரெஜிமென்ட் எல்லோரும் சேர்ந்து 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தார்கள்.

மோசமாக நடத்தப்பட்டது, முன்பிருந்த அந்தஸ்தை இழந்தது, மிகச் சுமாரான சம்பளம் ஆகியவற்றால் தக்காணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்கனவே அதிருப்தி எழுந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென நடந்த அந்த ஆக்ரோஷத் தாக்குதலுக்கு வேறு சில தூண்டுதல்கள் இருந்தன.

சிப்பாய்களுக்காகச் சர்ச்சைக்குரிய புதிய தலைப்பாகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள் அதை வெள்ளைக்காரன் தொப்பியாகத்தான் கருதினார்கள். நெற்றியில் ஜாதி அடையாளங்களை வரைந்துகொள்ளுதல், கடுக்கன் அணிதல், தாடி, மீசை வைத்துக்கொள்வது ஆகியவை பற்றிப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ராணுவக் கட்டுப் பாட்டு நெறிமுறைக்குச் சென்னை ராணுவத்தின் (Madras Army) தலைவர் சர் ஜான் க்ராடாக் 1806 மார்ச் 13 அன்று ஒப்புதல் வழங்கினார்.

திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் - 12 மகன்களும் 8 மகள்களும் - கிளர்ச்சிக்கு அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பலத்தைக் கொடுத்தார்கள். 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைவிட்டுப் போனதிலிருந்து இவர்கள் வேலூர்க் கோட்டையின் பல்வேறு மஹால்களில் தங்கியிருந்தார்கள். தங்கள் உன்னத அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாலும் வெளித் தொடர்பு இல்லாமல், அரண்மனைச் சுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இக்கிளர்ச்சியைப் பதிவுசெய்த முதல் வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். ஃபர்னெல் என்பவர். த ம்யூட்டினி ஆஃப் வேலூர் என்னும் அவரது புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ஆர்க்கைவ்ஸில் இன்றும் எஞ்சியிருக்கின்றன.

3,000க்கும் மேற்பட்ட மைசூர்க்காரர்கள் (பெரும்பாலும் 'முகம்மதியர்கள்') வேலூர் இளவரசர்களின் இருப்பிடமான பின், வேலூரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்று ஃபர்னெலின் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பின் கிழக்கிந்தியக் கம்பெனி பல 'உள்நாட்டுச் சிப்பாய்களை' வேலையில் சேர்த்துக் கொண்டது. இவர்களில் திப்புவின் முன்னாள் சிப்பாய்கள் - குறிப்பாக அதிகாரிகள் - கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். திப்புவின் வாரிசுகள் வேலூர்க் கோட்டையில் இருந்தது அவர்கள் தங்கள் முன்னாள் எஜமானர்களின் போராட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

கிளர்ச்சி தொடங்கச் சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து வந்த முகம்மதியப் பக்கிரிகள் சிலர் வேலூரின் தெருக்களிலும் கடைவீதிகளிலும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடி திரிந்துகொண்டிருந்தார்கள். நாடோ டிகளாக வாழ்ந்த அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஹோல்கர்கள், சிந்தியாக்கள், ஜெய்ப்பூர் மன்னர்கள் ஆகிய பல்வேறு இந்திய ராணுவங்களுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கூலிப்படையாகச் செயல்பட்ட பக்கிரிகளுக்குக் கட்டுப்பாடோ டு இயங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தில் இடமிருக்கவில்லை. 1805லிருந்து வேலூரில் காணப்பட்ட பக்கிரிகள் கிளர்ச்சியைத் தூண்டினார்கள்.

திப்புவின் முன்னாள் கூட்டாளிகளான அப்துல்லா கான், பீர்ஜாதா ஆகியோரின் தலைமையில் பக்கிரிகள் வேலூரில் ஆங்கிலேயர்களைக் கேலிசெய்தும் அவர்களுக்கு அழிவுக் காலம் நெருங்கிவிட்டதாகப் பிரகடனம் செய்தும் பொம்மலாட்டங்களை நடத்தினார்கள்; புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக, ஜாதி மற்றும் மத "மாசுபாட்டிற்கு" வழிவகுக்கும் வகையில் தோலாலான தலைப்பாகைப் பட்டையும் (cockade) மார்பில் சிலுவை போலிருந்த turnscrew ஒன்றையும் அணிந்ததற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏளனம்செய்தார்கள். இதனால் காலப்போக்கில் எல்லாச் சிப்பாய்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பக்கிரிகள் அறிவித்தார்கள். மத மாற்றத்தை இந்துச் சிப்பாய்களைவிட முன்பு ஆளும் வர்க்கமாக இருந்த முகம்மதியச் சிப்பாய்கள் வெறுத்ததுபோல் தெரிந்தது.

லண்டனின் இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட மாயா குப்தாவின் ஆராய்ச்சிப்படி, 1806 மே 6 அன்று 4ஆம் ரெஜிமென்ட்டின் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த 29 சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தார்கள். தங்கள் எதிர்ப்பை மறுநாளும் தொடர்ந்த அவர்கள், தலைப்பாகை அணியாமல் கைக்குட்டை போட்டுக்கொண்டார்கள்; ஆங்கிலேய அதிகாரிகளை 'நாய்கள்' என்று ஏசினார்கள்.

கீழ்ப்படியாத சிப்பாய்கள் சென்னையில் சிறைவைக்கப்பட்டு ராணுவ விசாரணை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவித்து எதிர்ப்பைக் கைவிட்ட சிப்பாய்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்த இரண்டு ஹவில்தார்கள் - (ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து) - 900 கசையடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஜூன் மாதம் வேலூர் அருகிலுள்ள வாலாஜாபாதிலும் தலைப்பாகையை எதிர்த்துப் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது.

ஜூன் 17 அன்று 1ஆம் ரெஜிமென்ட் சிப்பாய் முஸ்தஃபா பெக் கிளர்ச்சி நடக்கத் திட்டம் தீட்டப்படுவது பற்றித் தலைமை அதிகாரி லெப். கர்னல் ஃபோர்ப்ஸிடம் போய்ச் சொன்னார். ஃபோர்ப்ஸ் இந்திய அதிகாரிகளிடம் அது குறித்துக் கருத்துக் கேட்க, அவர்கள் அது சாத்தியமில்லை என்று சொன்னதோடு பெக்கிற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். பெக் இடமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாலும், பிறகு அவருக்கு 7,000 ரூபாய் சன்மானமும் ஒரு சுபேதாருக்குரிய ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் - குறிப்பாக அதிகாரிகள் - மைசூர் ஆட்சியை மீண்டும் நிறுவும் நோக்கத்தில் போலிகர்கள் (தக்காண நிலப் பிரபுக்கள்), ஹோல்கர்கள், மராட்டியர்கள், ஆட்சியை இழந்த ஹைதராபாத் மன்னர்கள் ஆகியோர் மட்டுமின்றிப் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடனும் தொடர்புவைத்திருந்ததாகப் பின்னாளில் கணிக்கப்பட்டு சீக்ரெட் சண்ட்ரீஸ் (Secret Sundries) என்னும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகளில் பெரும் பாலானவற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் ஜூலை 14ஐத்தான் ஒருங்கிணைந்த கிளர்ச்சிக்கான தேதியாகக் குறித்திருந்தார்கள்; ஆனால் பெக்கின் துரோகம் கிளர்ச்சியை அதற்கு முன்பே நடத்தச் செய்தது.

திப்புவின் மூன்றாம் மகன் மொஹியுதீன், நான்காம் மகன் மொய்ஸுதீன் தவிர மூத்த மகன் ஃபத்தே ஹைதரும் அந்தக் கிளர்ச்சியைச் சிந்தித்து உருவாக்கிச் செயல்படுத்திய முக்கியமான நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜூலை 10 அன்று கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாள்களில் கோட்டையில் திப்பு சுல்தானின் கொடியை ஏற்றினார்கள். கிளர்ச்சி நிறைவு பெற்ற பின் சிப்பாய்களின் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும் என்று மொய்ஸுதீன் உறுதியளித்தார்.

வேலூர்க் காவல் படையின் தலைமை அதிகாரி கர்னல் ஃபேன்கோர்ட்டும் 23ஆம் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கெராஸும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட, பல அதிகாரிகள் தப்பித்துச் சென்று ஒளிந்துகொண்டார்கள்; மிக அருகில் ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளத்திற்குத் தகவல் அனுப்பினார்கள்.

படுகொலை முடிந்து கோட்டையைக் கைப்பற்றியதும் சிப்பாய்கள் திருடுவதில் இறங்கினார்கள். ஆங்கிலேயர் வசிப்பிடத்தையும் (paymaster's) அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். சுமார் 7 மணியளவில் பொது மக்கள் பலரும் கோட்டைக்குள் நுழைந்திருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஷ் மதிப்பீட்டின்படி அந்தக் கிளர்ச்சியில் 5,48,429 பகோடாக்கள் (தங்க நாணயங்கள்) திருடப்பட்டன. சிப்பாய்களும் பொது மக்களும் சூறையாடிக்கொண்டிருக்கையில் ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் தலைமையில் 19ஆம் டிராகூன்ஸும் 7ஆம் குதிரைப் படையும் கோட்டைக்குள் நுழைந்தன.

கோட்டையின் நான்கு வெளி வாயில்களில் மூன்று கவனிப்பாரற்று இருந்ததால் ஆங்கிலேயப் படைகளுக்குக் கோட்டைக்குள் நுழைவது சிரமமாக இருக்கவில்லை. கர்னல் கென்னடி கூடுதல் படையினருடன் வந்ததாலும் இந்தியச் சிப்பாய்களின் ஆயுத பலம் குறைந்துவந்ததாலும் கிளர்ச்சியாளர்கள் கோட்டையை எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றினார்களோ அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயப் படைகள் கோட்டையை மீட்டன. எட்டு மணி நேரத்திற்குள் அத்தனை அமர்க்களமும் முடிந்துவிட்டிருந்தது. கில்லெஸ்பியும் அவரது ஆட்களும் இளவரசர்களையும் திப்பு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பிழைத்துப் போக விட்டார்கள்; 1807 ஜனவரி வாக்கில் இளவரசர்களின் மொத்தப் பரிவாரமும் தொலைதூரத்திலிருந்த கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது.

787 சிப்பாய்கள் தப்பித்துப்போனதாகவும் 446 சிப்பாய்கள் பெரும்பாலும் சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்டார்கள் எனவும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகள் சொல்கின்றன. "தண்டனை விதிக்கப்பட்ட ஆறு கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளால் சிதறடிக்கப்பட்டனர், ஐவர் மஸ்கெட்களால் சுடப்பட்டனர், எட்டு பேர் தூக்கிலிடப்பட்டனர்" என்று சீக்ரெட் டெஸ்பேட்ச்சஸ் என்னும் ஆவணத்தின் 33ஆம் தொகுதி தெரிவிக்கிறது. இந்தத் தண்டனைகள் கோட்டையின் வடக்குப் பகுதியில் நிறைவேற்றப்பட்டன.

வட ஆற்காடு மாவட்டக் கையேட்டில் [Manual of the North Arcot District (1898)] மாஜிஸ்திரேட் ஆர்தர் சி. ஃபாக்ஸ் அடக்க முடியாத சந்தோஷத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்கு ஆவலுடன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, கழுகுகள் பல துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன. பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் கூவினார்கள்."

இது போன்ற காட்சிகள் தென்னிந்தியர்களின் மனத்தில் ஏற்படுத்திய பயங்கரப் பாதிப்பில்தான் அவர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள்.

"வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் வர்ணித்த 'ஆதி தேசியவாதம்' (proto-nationalism) என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். ஆதி தேசியவாதத்தில் மொழி, இனம், பழக்க வழக்கங்கள், உடை முதலானவற்றில் உள்ள வேறுபாடுகளால் எதிர்ப்பு கிளம்புகிறது" என்கிறார் அதிகாரபூர்வமற்ற வேலூர் இருநூறாண்டு நினைவுக் குழுவிற்காக வேலூர்க் கிளர்ச்சியைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிகுமார்.

இந்தச் சம்பவம் ஏன் நாட்டு மக்கள் மனத்தில் ஓர் ஓரத்திலேயே இருந்திருக்கிறது என்று சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்:

"தமிழ்நாடு எப்போதுமே தேசியவாத வரலாற்று நூல்களில் ஓர் ஓரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. வடக்கும் வங்காளமுமே பெருமளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 1920களில் பெரியார் தலைமையில் தமிழ்நாடு மேற்கொண்ட "தேசிய எதிர்ப்பு"ப் போக்கு, அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க.வின் எழுச்சி ஆகியவை அப்படி ஓரங்கட்டப்படுவதற்கு ஒரு நியாயத்தைக் கொடுப்பது போலிருந்தன. வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மௌனத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்." வேலூர்க் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஒரு ராணுவக் கிளர்ச்சியாகவே இருந்தது என்கிறார் வேங்கடாசலபதி.

"அது பாசறைகளில் தொடங்கிப் பாசறைகளில் மட்டுமே நடந்தது. ஆனால் 1857 சம்பவம், ஒரு கிளர்ச்சியாகத் தொடங்கி வட இந்தியாவில் பல இடங்களில் பரவி ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியானது" என்கிறார் அவர்.



வேலூர்க் கோட்டையில் கிளர்ச்சிக்கான திட்டம் தோன்றிய இடமான திப்பு மஹால்,இப்போது இந்த இடம் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதி ஆகியிருக்கிறது. முன்பு இங்குத் தமிழகக் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றுவந்தார்கள் - ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த இடத்தில் இவர்கள் குளித்துக்கொண்டும் மலம் கழித்துக்கொண்டும் இருந்தார்கள்.


வேலூர்க் கோட்டையில் இன்னொரு கிளர்ச்சியும் நடந்தது. திப்பு மஹாலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 43 பேர் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி அகழி வழியாக 153 அடி நீளச் சுரங்கம் ஒன்று தோண்டித் தப்பித்தார்கள். தமிழகக் காவல் துறை அதில் அவமானப்பட்டுத் திப்பு மஹாலில் யாரும் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.

வேலூர்க் கிளர்ச்சியின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமின்றித் தொடங்கும் இந்தத் தருணத்தில், வரலாறு படைக்கப்பட்ட அந்த இடத்தை எட்டிப் பார்க்கக்கூடத் தமிழகப் பொதுமக்களுக்கு வாய்க்காமல் போகலாம்.

(நன்றி : அவுட்லுக் மற்றும் திரு.திவாகர் ரங்கநாதன்)

Saturday, June 25, 2011

6 - ஆம் அறிவு

கடைத்தெருவின் சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இன்றைய மூன்றாம் பகுதியில்,உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான Emma Maersk பற்றிய சில குறிப்புகளை காண்போம்.



அறிவுச் சரக்கு : Emma Maersk - படத்தில் இருக்கும் கப்பலின் பெயர். இன்று உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுதான்.

இந்த கப்பல் பற்றிய சில குறிப்புகள்.

Emma Maersk கப்பல் உருவான நாடு, டென்மார்க்.

5000 பேர் பயணம் செய்யக்கூடிய அமரிக்க விமானம்தாங்கி கப்பலை விட,இந்த கப்பல்
பெரியது.

15000 கொள்கலன்கள்(containers), 13 பணிக்குழுக்கள் (crew) ஆகியவை இதன் கொள்ளளவு.

இதன் கொள்ளளவு காரணமாக, பனாமா மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக பயணம் செல்லமுடியாது. உயர்மட்ட கடல் வழி மட்டுமே இக்கப்பலால் செல்லமுடியும்.

கப்பலின் கட்டுபாட்டு அறைக்கு மொத்தம் 10 தளங்கள்(floors) உள்ளன.

ஒரே சமயத்தில் இந்த கப்பலில் 11 பளுதூக்கி கருவிகளால்(Cranes), சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ முடியும்.

இந்த கப்பலின் நீளம் : 1302 அடிகள்...அதாவது 396.85 மீட்டர்கள்.அகலம் : 207 அடிகள்...அதாவது 63.1 மீட்டர்கள்.

இந்த கப்பலின் சரக்குகள் கொள்ளளவு 123,200 டன்கள்.

இந்த கப்பலை இயக்கம் இயந்திரம் 108 920 குதிரை சக்தி கொண்டது. இந்த இயந்திரத்தின் அளவு : 26.7 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் உயரம்.
இதன் எரிபொருள் கொள்ளளவு : மணிக்கு 6,275 லிட்டர்கள்.

இந்த கப்பலின் அடிப்பரப்பில் சிலிகான் பெயிண்ட்டை பூசி இருக்கிறார்கள். இது கப்பலுக்கு கடல் நீருக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 317,000 கேலன்கள் வரை டீசலை சேமிக்கமுடிகிறது.

இந்த சிறப்பு இயந்திரத்தை ஒரு மீட்டர் சுற்றளவை கொண்ட பிஸ்டன் தண்டுகளை(rods) கொண்டு செய்து இருக்கிறார்கள்.


ஒரு கப்பலின் வேகத்தை Cruise Speed என்பார்கள். இதன் அளவுகோல் நாட்(knot).ஒரு சிறந்த சரக்கு கப்பலின் Cruise வேகம் 18 - 20 நாட். ஆனால், இந்த கப்பலின் நாட் 31 .

இந்த கப்பலின் அதிகபட்ச வேகம்...மணிக்கு 55.80 கிலோமீட்டர்.

சீனாவில் இருந்து கலிபோர்னியா துறைமுகத்தை இந்த கப்பலால் நான்கே நாட்களில் சென்று சேர்ந்துவிட முடியும்.

கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கிய வருடம், செப்டம்பர் 8 , 2006 .

இந்த கப்பலின் கட்டுமான செலவுகள் :145,000,000 அமெரிக்க டாலர்கள்.

Emma Maersk - சோமாலிய கொள்ளையர்கள் கையில் சிக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

அறிவுக்கு அதிர்ச்சி:

மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போதெல்லாம், அவனது ஆயுட்காலம் கூடுகிறது என்பது அறிவியல் உண்மை.

ஆனால், சமிபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அது, ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 முறைகள் வரை சிரிக்கின்றது. ஆனால், வயது வந்த மனிதன் நாளொன்றுக்கு வெறும் 15 முறைகளே சிரிக்கிறான் என்கிறது.

இதைதான் கவிஞர் கண்ணதாசன் "பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா" என்றானோ.

அறிவுக்கு அழகு:




-இன்பா

Thursday, June 23, 2011

தள்ளாமை,இயலாமை,முடியாமை


சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள்.

என் நண்பர்கள் அறைக்கு சென்று இருந்தேன். அவர்கள் ரூம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சித்த வைத்திய டாக்டர் என்று ஒருவர் இவ்வாறு பேசினார்.

"என்னுடைய முப்பாட்டானர் சத்யராஜ் இமயமலையில் தவம் செய்தவர். பின்னர் சேலம் வந்து, பல வருடங்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த வைத்திய சாலையை தொடங்கினார். பின்னர் எனது பாட்டனார் ராமராஜ் அவரது ஓலைச்சுவடிகளை (!?) கொண்டு, ஆராய்ச்சியை தொடர்ந்து நவீன படுத்தினார். பின்னர் எனது தந்தையாரும், நானும் மக்கள் சேவையே பெரிது என மருத்துவ சேவையை செய்து வருகிறோம்" என்கிற ரீதியில் பேசினார்.

ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகள், மக்கள் சேவை...முடியலடா சாமி.

வரிசையாக முப்பாட்டனார்,பாட்டனார்,தந்தையார் என படங்களை காட்டினார்கள். இந்த டாக்டரே வெவ்வேறு கெட்டப்புகளில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.

இவர் பேசப்பேச,கஜுரஹோ காமகோவில் சிற்பங்கள் 'கிராபிக்ஸ்' மூலம் பின்னணியில் நகர்வதாக செட்டப் வேறு.

இவர்களுக்கு ஏற்றதுபோல சித்த வைத்திய சாலைகளுக்கு,மலையடிவார பகுதிகளை எப்படித்தான் வளைத்துபோட்டார்களோ?.

அதற்க்கு பின்னர் அழாதகுறையாக அவர் "தமிழ்நாட்டில் உள்ள என் குழந்தைகள் எல்லாம் என்னிடம் வந்து அழுகிறார்கள். மகன்களே, என்னிடம் வாங்க. உங்க குறையை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.

"ஒண்ணும் புரியலையே. என்ன சொல்றார்?" என்றேன் என் நண்பனிடம்.

அவன் சிரித்தபடி சொன்னான்.

"குழந்தைகள் என்று இவர் சொன்னது திருமணமான பெண்களை. குறைபாடு உள்ள மகன்கள் என்று குறிப்பட்டது திருமணமான ஆண்களை. இப்போது புரிகிறதா?".

"டாக்டரின் விஜயம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும், ஏதாவது ஒரு லாட்ஜில் மக்களை சந்திப்பதாக விளம்பரங்கள் வேறு.

விட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எங்கள் சித்த வைத்திய சாலைகளுக்கு கிளைகள் இருக்கிறது என்று சொல்வார்கள் போல.
(என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு வேலை. நாமும்தான் வாழறோம்!)

நிகழ்ச்சியின் முடிவில்,ஒரு தம்பதி நம் டாக்டருக்கு அருகே அமர்ந்து கொண்டு, தங்களின் "சாதனை(?)" கதையை ஒப்பித்துகொண்டு இருந்தார்கள்.

டிவி தொடர்களுக்கு இணையாக, எல்லா சேனல்களிலும் குறிப்பிட்ட நேரங்களில், இவரை போன்று ஏதாவது ஒருவர், தான் ஒரு சித்த வைத்திய நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, என்னமோ ஒரு 'சின்ன வாத்சயனார்' என்று தன்னையே நினைத்துகொண்டு ஆண்மைகுறைபாடுகளுக்குக்கும், தாம்பத்திய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

போதாகுறைக்கு, பத்திரிக்கைகளிலும் ஒரு பக்க விளம்பரம்....திருக்குறள் போன்று, தள்ளாமை,இயலாமை,முடியாமை என்ற தலைப்பில்.

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளில்தான் இது போன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. பெரும்பாலும் அவற்றை ஆண்கள் படிப்பதாலா, இல்லை, அரசியல்வாதிகள் எல்லாருமே ஆண்மையை(?) அடிக்கடி பயன்படுத்துவதாலா?
-என்று ஆராய வேண்டும். (அட, நானும் ஒரு ஆராய்ச்சியாளன்).

இந்த டாக்டர் அடிக்கடி குறிப்பிட்டு, பார்ப்பவர்களை(ஹி ஹி என்னையும்தாங்க!) பயமுறித்திய வார்த்தைகள், அதாவது இதுபோன்று சித்தா டாக்டர்களின் பிசினஸ் டெக்னிகல் வார்த்தைகள்...

'சொப்பன ஸ்கலிதம்', 'கைபழக்கம்', 'சுயஇன்பம்' போன்றவை.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்"

-இதைபோல இவர்கள் பேசுவதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம்??

இது பற்றிய கேள்விகளுக்கு, முறைப்படி படித்து டாக்டர் பட்டம் பெற்று, செக்ஸ்சாலாஜிஸ்ட் ஆக பணிபுரியும் ஒரு மருத்துவர் சொன்ன விளக்கங்கள் இங்கே..

முதலில் சுயஇன்பம்,

சுய இன்பம் என்பது ஒரு வியாதி அல்லது குறைபாடு இல்லை. அதற்க்கு அடிமையாக இருக்க கூடாது. அவ்வளவே என்கிறார் இவர்.

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்? "

அடுத்ததாக சொப்பன ஸ்கலிதம்...அதாவது தூக்கத்தில் விந்து வெளியாதல்.

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை".

அவர் குறிப்பிட்ட மருத்துவ விளக்கங்களை பின்வரும் சுட்டிகளில்(links) காணலாம்.

http://www.ayurvediccure.com/over_masturbation.htm
http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

அறிவியல் உண்மைகள் இப்படி இருக்க, நம் ராஜ் வகையாறக்கள் அனாவசியாமான பயங்களை மக்களிடம் வளர்த்துவிட்டு, 'துட்டு' பார்க்கிறார்கள். டிவி சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு இவர்களது டுபாக்கூர் நிகழ்சிகளை சமூக பொறுப்போ, அக்கறையோ துளியும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறார்கள்.

"செக்ஸ் என்பது 90 சதம் மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி. மீதம் உள்ள வெறும் 10 சதம் மட்டுமே உடலின் பங்கு இருக்கிறது" என்கின்றன அறிவியலும் மனோத்தத்துவமும்.

புற்றீசல் போல ஆண்மை குறைபாடுகளை தீர்த்துவைக்கிறோம் என்று புறப்பட்டு இருக்கும் சித்தவைத்திய 'ராஜ்'கள் தொல்லையிடம் இருந்து பரமஹம்ச ரஞ்சிதானந்தா(!) சுவாமிகள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

சித்த வைத்தியத்தை பற்றி தவறாக கூறவில்லை. சிறப்பான முறைகள் கண்டிப்பாக சித்தவைத்தியத்தில் இருக்கின்றன. சித்தவைத்தியம் என்ற பெயரில் நம் சமுகத்தில்,டிவியில் உலா வரும் டுபாக்கூர் டாக்டர்களை பற்றியே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

சீரியசாக விவாதிப்போம்.

உலக அளவில் இன்று நடைபெறும் குற்றங்கள் 75 சதவீதம் செக்ஸ் சம்பந்தப்பட்டவை என்கிறது ஒரு சர்வே.

இன்னொரு சர்வே இதை விட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பதே. குறிப்பாக, நம் இந்தியாவில்.

சில நாட்களுக்கு முன்னால் கூட, குமரி மாவட்டத்தில் ஒரு சிறுமியை அதிகாரிகள் சிலர் கூடி கற்பழித்துவிட்டனர் என்று செய்தி வெளியானது.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட, எது 'குட் டச் (good touch)' , எது 'பெட் டச் (bad touch)' என்று புரியவைக்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.

டிவி, இன்டர்நெட் என்று நம் வீட்டுக்குளேயே உலகம் வரதொடங்கிவிட்டதால், பள்ளிகுழந்தைகளுக்கு கூட செக்ஸ் சம்பந்தப்பட்ட எக்ஸ்போஷர்(exposure) மிக எளிதாக
கிடைத்துவிடுகிறது.

செக்ஸ் குற்றங்களை கட்டுப்படுத்த, செக்ஸ் பற்றிய பயங்களை போக்க நாம் என்ன செய்யவேண்டும்??

செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை,புரிதலை வளரும் பருவத்தினருக்கு ஏற்ப்படுத்துவது அவசியம் அல்லவா?

இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல தீர்வு....மாணவர்களுக்கு பாலியல் கல்வி என்பதே.

-இன்பா

Tuesday, June 21, 2011

6 - ஆம் அறிவு

நமது கடைத்தெரு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இரண்டாம் பகுதி.



அறிவுச் சரக்குகள் :

நமது பூமியின் எடை 6500 மில்லியன் மில்லியன் மில்லியன் டன்கள்.

உங்களுக்கு தெரியுமா? நாம் ஒவ்வொரு முறை தும்மும்போதும், நமது இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது.

ஒரு அறிவியல் ஆய்வுப்படி, ஒரு மனிதன் ஆண்டுக்கு சாராசரியாக 1460 கனவுகள் காண்கிறான்.

தலையை வெட்டினாலும், ஒன்பது நாட்கள் வரை உயிரோடு வாழக்கூடிய ஒரே உயிரினம்....வேற என்ன...கரப்பான் பூச்சி.

எஸ்கிமோக்கள் எனப்படும் பனிமலையில் வாழும் மக்கள், 'பனி' என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில், சுமார் 100 வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், "ஹலோ" என்று பொருள்தரும் ஒரு வார்த்தை கூட அவர்கள் மொழியில் இல்லை.

ஆங்கில மொழியில், அதிக விளக்கங்களை கொண்ட வார்த்தை..."SET".

ஆங்கில மொழியில் ஒரு எழுத்து கூட திரும்பவும் வாராத ஒரே 15 எழுத்துக்களை கொண்ட வார்த்தை.... "uncopyrightable".

"Sixth Sick Sheik’s Sixth Sheep’s Sick” இந்த வார்த்தைதான் ஆங்கில மொழியில் உச்சரிப்புக்கு மிகவும் கடினமான வார்த்தை.

முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணைய முகவரி(Domain Name).... Symbolics.com.
பதிவு செய்யப்பட்ட வருடம் மார்ச் 15, 1985.

உலகிலேயே தற்போது அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதள முகவரி....Business.com.
விற்கப்பட்ட விலை : 7 . 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அறிவுக்கு விருந்து :

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான்.

சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார்.

இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

"எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.


கருத்து : தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

ஆகவே அருமை வாடிக்கையாள நண்பர்களே,இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. "ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்" என உறுதியுடன் வாழ்வோம்.

அறிவுக்கு அழகு:



-இன்பா

Sunday, June 19, 2011

நெல்லை மாணவியின் உலக சாதனை



சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நடத்தும் ஆன் லைன் தேர்வுகளில் ஒன்றான சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார் பத்து வயதேயான சிறுமி விசாலினி.

இந்தத் தேர்வுகளைக் கம்ப்யூட்டர் துறையில் பி.டெக், பி.இ., எம்.சி.ஏ., படிக்கும் மாணவர்களே எழுதுவார்கள். அதுவும் மிக மிகக் கடுமையாக முயற்சி செய்து.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான விசாலினி, இந்தத் தேர்வை மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போன மாதம் 13- ஆம் தேதி சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் விசாலினி. இதற்கு முன்பு ஜனவரி மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான எம்சிபி தேர்வை எழுதி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

பத்து வயதான யாரும் இதுவரை இத்தேர்வுகளை எழுதி உலக அளவில் வெற்றி பெறவில்லை.

விசாலினிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்??

"உண்மைதான். எங்களுடைய மகள் விசாலினி உலக சாதனைதான் செய்திருக்கிறாள். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஸ ஹைதர் என்ற 12 வயதுச் சிறுவன் இதுபோல இந்தத் தேர்வுகளை எழுதி உலக அளவில் சாதனை செய்தான். அவனைவிட 2 வயது குறைவான விசாலினி இப்போது சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் பூரிப்புடன் அவருடைய அம்மா சேதுராகமாலிகா.

"விசாலினி எட்டு மாதத்திலேயே பிறந்துவிட்டாள். சிசேரியன் மூலம் பிறந்தாள். சராசரி எடையைவிடக் குறைவான எடை. பிழைப்பது அரிது என்று கூடச் சொன்னார்கள். அதைவிட மருத்துவர்கள் சொன்ன இன்னொரு தகவல் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. விசாலினிக்குப் பேச்சு வராது என்ற தகவலே அது. அவளுடைய நாக்கின் அடிப்பகுதியில் ஜவ்வு இருந்தது. அது நாக்குக்குக் கீழ் உள்ள வாய்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால் பேசுவது சிரமம் என்றார்கள். அதை அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யலாம் என்றால் விசாலினியின் உடல் நிலை அறுவைச் சிகிச்சையைத் தாங்காது என்று சொல்லிவிட்டார்கள்'' என்ற அவர்,

"நல்ல வேளையாக டாக்டர் ராஜேஷைப் போய்ப் பார்த்தோம். அவர் குழந்தையின் 40 வது நாளில் இருந்து அவளிடம் எதையாவது பேசிக் கொண்டே இருங்கள், குழந்தை பேச வாய்ப்பிருக்கிறது என்றார். குழந்தைக்கு ஏதாவது புரியுமா? என்று கேட்டோம். புரிகிறதோ, இல்லையோ ஒரு நாளைக்கு 20 மணி நேரங்கள் பேசிக் கொண்டே இருங்கள் என்றார். அதன் பிறகு தினமும் நான் குழந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தேன். அவள் நாக்கு நன்கு பிறழுமாறு உள்ள சொற்களை அடிக்கடி கூறி வந்தேன். குழந்தை 9 வது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டாள் '' என்கிறார்.

விசாலினியின் அப்பா கல்யாணகுமாரசாமி எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர். தன் குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்காதவர்.

விலாசினி பற்றி அவர், பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக பேசினார்.

"தொடர்ந்து நாங்கள் டாக்டர் ராஜேஷிடம் விசாலினியை அழைத்துக் கொண்டு போனோம். அவர் விசாலினியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, மதுரையில் உள்ள மருத்துவ உளவியலாளர் நம்மாழ்வாரிடம் அழைத்துச் சென்று சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதற்கென்று தெரியாத நிலையில் நாங்கள் விசாலினியை மதுரைக்கு அழைத்துச் சென்று அவரைச் சந்தித்தோம்.

இரண்டு நாட்கள் விசாலினியைப் பல்வேறு பரிசோதனைகள் செய்த அவர், அவளுடைய ஐக்யூ, அதாவது அறிவுத்திறன் 220 இருப்பதாகக் கூறினார். சாதாரணமாக ஒருவருக்கு 90 இலிருந்து 109 வரைதான் இருக்குமாம். என் மகளின் ஐக்யூ கிட்டத்தட்ட சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் மேலே இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவையெல்லாம் விசாலினியைப் பள்ளியில் சேர்க்காமல் இருந்தபோது நடைபெற்றவை''

"முதல் வகுப்பையும், இரண்டாம் வகுப்பையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டாள். மூன்றாம் வகுப்புப் பாடங்களை ஒன்றரை மாதத்தில் முடித்துவிட்டாள். ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஓர் ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. பள்ளியில் டபிள் புரோமோஷன் தர மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆறாம் வகுப்பில் சேர்க்கப் போகும்போது இவள் வயதுக்கு 4 ஆம் வகுப்புதான் படிக்க வேண்டும். வேண்டுமானால் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டுக் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டோம்.

வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இப்படி ஆறாம் வகுப்பை அவள் படித்து முடிக்கவே மூன்று பள்ளிகளை மாற்ற வேண்டியதாகிவிட்டது. மூன்றுவிதமான சீருடைகள், புத்தகங்கள் வாங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பாடத்தில் ஒரு கேள்வியை விசாலினியிடம் கேட்டால் மூன்று புத்தகங்களில் இருந்தும் அதற்கு பதில் சொல்வாள். ஆறாம் வகுப்பில் டபிள் புரமோஷன் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்படித் தர வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதி வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள்'' என்கிறார் அவர்.

"நாங்கள் மூவரும் சென்னைக்கு வந்து பள்ளி கல்வித்துறையின் உரிய அதிகாரிகளைப் பார்த்துப் பேசினோம். அவர்கள் விசாலினியைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். அவளுக்கு ஐக்யூ அதிகமாக இருப்பதை ஒத்துக் கொண்டார்கள். விசாலினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிப்பதால்,அது தொடர்பான துறையைத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்'' என்கிறார் கவலையுடன்.

""பாளையங்கோட்டையில் டான்டெம் கம்ப்யூட்டர் சென்டரின் சுந்தரபாண்டியன் சாரிடம் விசாலினியை அழைத்துச் சென்றோம். கம்ப்யூட்டரில் எதுவுமே தெரியாத விசாலினியைப் பார்த்து அவர் ஆரம்பத்தில் சிறிது யோசித்தார். ஆனால் அவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்ததுமே அவளுடைய திறமையைத் தெரிந்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் எம்சிஏ ஆன்லைன் தேர்வு எழுதி அதில் விசாலினி தேர்ச்சி பெற்றாள். மே மாதம் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் நடத்தும் சிசிஎன்ஏ தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று உலக சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் கல்யாணகுமாரசாமி.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயராமன் உடனே விசாலினியை அழைத்துச் சால்வை போட்டு பாராட்டியிருக்கிறார். மருத்துவர்கள், என்ஜினீயர்கள் உள்ள கூட்டத்தில் அவளைப் பேசச் சொல்லியிருக்கிறார்.

"இவ்வளவு சிறிய வயதில் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு விலாசினி சொன்ன பதில்,

"ரொம்பப் பெருமையா இருக்குது. கலெக்டர் அங்கிள் என்னை அழைத்துச் சால்வைப் போட்டு பாராட்டினாங்க. அங்க நடந்த மீட்டிங்கில என்னைப் பேசச் சொன்னாங்க. அது ரொம்ப.. ரொம்ப பெருமையா இருக்குது'' என்கிறார் மழலை மாறாமல்.

"பாகிஸ்தானில் இரிட்ஸா ஹைதர் என்ற சிறுவன் 12 வயதில் இச்சாதனையைச் செய்தபோது அங்கே பாகிஸ்தானுக்கே பெருமை (Proud of Pakistan) என்று பாராட்டினார்கள். நமது நாட்டில் எங்களுக்குச் சிறப்பு அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமப்பட வேண்டியிருப்பது கஷ்டமாக இருக்கிறது.

எட்டாம் வகுப்பு படித்த பின்பு அவளை பொறியியல் கல்லூரியில் சேர்க்காமல், பத்தாம் வகுப்பு வரை முறையாகப் படிக்க வைத்தாலும், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது வயது குறைந்தவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதக் கூடாது என்று பிரச்னை வரும். குறைந்த வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே குறைந்த வயதில் பெரிய வகுப்புகளைப் படிக்க அவளுக்குச் சிறப்பு அனுமதியைக் கல்வித்துறை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

தமிழக முதல்வர் மனது வைத்தால் எங்கள் கவலை ஒரு நொடியில் தீர்ந்துவிடும். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால்,இப்போது பொறியியல் படிப்புகளில் நேரடியாகச் சேரும் தகுதியை எங்களுடைய மகள் நிரூபித்துவிட்டாள்'' என்கிறார் சாதனை மாணவியின் அம்மா சேதுராகமாலிகா.

(நன்றி : தினமணி)

திருநெல்வேலியில் இத்தகைய சாதனையை செய்திருக்கும் மாணவி விலாசினி, மற்றும் அவரது சாதனைக்கு காரணமான அவரது பெற்றோர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

Saturday, June 18, 2011

எதிர்பார்க்க வைக்கும் "உதயன்"


ஒரு காதல் கதைக்கு எது முக்கியம்?

முதலில் இளமையான இசை, இரண்டாவதாக அதைவிட இளமையாய் ஒரு கதாநாயகி. குறிப்பாக 'ப்ரெஷ்' புதியமுகம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமைந்து இருக்கின்றன..."உதயன்" படத்திற்கு.

அறிமுகமான தெலுங்கு படத்தில் சுமாராக தெரிந்த புதிய நாயகி பிரணிதாதான் "உதயன்" படத்திற்கு தற்போது "மாஸ் அட்ராக்க்ஷன்".

படத்தின் இசை அமைப்பாளர் , டுயட் படத்தின் ஏ.ஆர்.ரகுமானுக்கு "சாக்ஸபோன்" இசைத்த இசை மேதை அமரர் கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் மணிகாந்த் கத்ரி. ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சிறுவயதில் ஆசிப் அலி மற்றும் மங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் மராத்தே ஆகியோரிடம் இசை பயின்ற மணிகாந்த், தனது தந்தை கோபால்நாத்துடன், சாக்ஸபோன் கச்சேரிகளில் தவறாமல் பங்கு பெற்றார். 'Dream Journey' என்கிற ஆல்பத்தை முழுக்க முழுக்க சாக்ஸ போன் இசை கருவியில் இசை அமைத்து வெளியிட்டு இருக்கிறார்.

"மெலடி பாடல்கள் மனித உடம்பில் ஓடும் ரத்தம் போன்றது" என்று கூறும் மணிகாந்த், மெலடி பாடல்கள்தான் தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.தனது தந்தையின் வழிகாட்டுதல்படி, புதுப்புது ராகங்களை உருவாக்கி இருப்பதாக கூறும் மணிகாந்த்,இசைக்கும் தனக்குமான தொடர்பை " Music is my living. It is an ocean the more you learn the more it generates" என்கிறார்.

ஏற்கனவே மணிகாந்த், கன்னட படத்தில் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆகி விட்டாலும், அவர்க்கு மிகவும் பிடித்தமான தமிழில் இவருக்கு "உதயன்" தான் முதல் என்ட்ரி.

"உதயன்" படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.

1. "எவன் இவன் இவன் ரகசிய காதலன்" - சுருதி ஹாசனுக்கே உரித்தான 'கிக்'கான குரலில் ஒரு 'ஜில்' பாடல். ஒரு காதலி , தன் காதலனை பற்றி பாடுவதான சிச்சுவேஷன்.
இந்த பாடலை எழுதி இருப்பவர் புதிய கவிஞர் சூர்யா.

கல்லூரி மாணவிகளின் 'சாய்ஸ்' ஆக இருக்கபோகும் பாடல்.

2.ரிங் டிங் டிங் - ஒரு புதுமையான பாடல். ராப் பாணியில், பிரபல இந்தி பாப் பாடகர் பாபா ஷேகல், சுசித்ரா பாடியிருக்கும், முத்தமிழ் என்கிற கவிஞர் எழுதி இருக்கும் பாடல். உற்சாக துள்ளலான இசை.

3."இத்தனை யுகமாய் எங்கிருந்தாய்" - மெலடி பாடல்களின் இளவரசன் கார்த்தி பாடி இருக்கும் பாடல். அண்ணாமலை என்கிற கவிஞரின் காதல் வரிகள்.

கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் என்பதை பின்னணி இசையில் நிருபிக்கிறார். அதற்க்கு ஏற்றார்போல, "இதயம் வெள்ளை காகிதம், நீ இங்கே ஓவியம்" என்கிற அழகான கவிதை வரிகள்.

மனதை தொடும் மெலடி இசை.

4."லக்கா, லக்கா" - படத்தில் இருக்கும் ஒரே ஒரு குத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கிறார். பிரசன்னா மற்றும் தர்ஷனா கார்த்திக் பாடி இருக்கிறார்கள். சுமார் ரகம்

5. " உதித்தான் புது சூரியனாய் இந்த உதயன்" - ஹீரோயிசம் பொங்கும் பாடல். படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி பாடி இருக்கும் பாடல். இந்த பாடலை மட்டும் எழுதி இருப்பவர் இளமைகவிஞர்(?) வாலி.

அதிரடியான பாடல், அதற்க்கு பொருத்தமான புதிய குரல் மணிகாந்துக்கு.

6."பொங்க வச்சோம், அய்யனாரே" - படத்தில் மிகவும் சர்பிரைசான கிராமத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கும் இந்த பாடலை பாடி இருப்பவர்கள் விவேக் நாராயணன் மற்றும் திவ்யா.

அதிரடியான கிராமத்து இசை. எந்த வகையான பாடலுக்கும் இவரால் இசை அமைக்கமுடியும் என்று மணிகாந்த் மீது நம்பிக்கை வருகிறது.


"பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார் " என்கிறார் தனது முதல் படமான "உதயன்" பற்றி, இயக்குனர் சாப்ளின்.

பார்த்த உடனே பத்திக்க வைக்கும் பிரணிதா, இளமை துள்ளலான மணிகாந்தின்
இசை என எதிர்பார்க்க வைக்கிறான்..."உதயன்".

படத்தின் ஹீரோவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்பவர்களுக்கு,அவர் 'வம்சம்' அருள்நிதி ஸ்டாலின்...அட விடுங்க, அவரா முக்கியம்???

-இன்பா

Friday, June 17, 2011

இசைப்ரியா - சிதைக்கப்பட்ட தமிழ் தேவதை



பதிவை படிக்கும் முன்பு, சில நிமிடங்களை ஒதுக்கி, இந்த காணொளியை பாருங்கள்.



"இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்" என்று சமிபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

போர் தாக்குதல் நடக்காத இடங்கள் என்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை அன்று இலங்கை ராணுவம் அறிவித்தது. அதை நம்பி, அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சென்று சேர்ந்தனர்.

ஆனால், அங்கு உள்ள மருத்துவமனைகளை கூட விட்டுவைக்காமல், இலங்கை ராணுவம் என்ற மிருக கூட்டம் அங்கு கடும் குண்டுவீச்சில் இறங்கியது. திட்டமிட்டு நடந்த, இப்படுகொலையில் ஒரு இனமே சத்தமில்லாமல் அழிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சேனல் 4 செய்தி நிறுவனம் ஆதாரபூர்வமான வீடியோ ஆதாரங்களுடன் சமிபத்தில் வெளியிட,அதை பார்த்த உலக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை தங்களை பாதுகாக்கும் கேடயமாக பயன்படுத்தியது உண்மை என்கிற செய்தியும் நம்மை சுடுகிறது.

பெண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் கட்டி கற்பழித்து, லாரி லாரியாக இலங்கை வீரர்கள் ஏற்றும் ஒரு வீடியோ காட்சி நம்மை பதறவைக்கிறது.

கூடவே, ஆபாசமான வார்த்தைகள் பேசி சிரித்துக்கொண்டே, இளம் பெண்களின் நிர்வாண சடலங்களை அவர்கள் வண்டியில் எறியும் காட்சி.....

ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கற்பழிப்பு கொடுமைகள் நமக்கு புதியது இல்லை.

காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.

இவ்வளவு ஏன்?

வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.

இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.

இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?

அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?

அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??

மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.

ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.

அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பலாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.

பதிவின் தொடக்கத்தில் இருக்கும் வீடியோவில் இருப்பவர்தான்...இசைப்ரியா.

2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.

அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.

ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.

சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.



இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறதே...இசைப்ரியாவின் அழகு யாழ்ப்பாண தமிழ். இனி, அந்த நாம் தமிழை கேட்க முடியுமா??

நம்மை, நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயத்தை, ஒரு துயரத்தை யாரிடமாவது பகிர்ந்துவிட்டால், மனம் அமைதி அடையும் என்கிறது மனோதத்துவம்.

இந்த பதிவின் மூலம் என்னுடைய துயரத்தை உங்களிடம் பகிர்ந்துவிட்டேன். ஆனால்,என் மனம் இன்னமும் கனத்துவிட்டதே,ஏன்?



இன்னமும் நமக்கும், வெளிஉலகுக்கும் தெரியாமல், இப்படி இலங்கை ராணுவ மிருகங்களால் சிதைந்துபோன இசைப்ரியாக்கள் எத்தனை..எத்தனையோ???


-இன்பா

Tuesday, June 14, 2011

"ஒரு சில பார்ப்பனர்களின்" பட்டியல்


"ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம் " என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.

அவர் குறிப்பிட்ட ஒரு சில பார்ப்பனர்கள் யாராக இருக்கலாம் என்று யோசித்ததில், பின் வரும் லிஸ்ட் உருவாகிவிட்டது.

ஜெயலலிதா :

சொல்லவே வேண்டியது இல்லை. அதிமுக தலைவியான ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக (?) கொண்ட ஜெயலலிதா என்ற பார்ப்பனரிடம், படுதோல்வி அடைந்து, எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாமல் போய்விட்டார் கருணாநிதி. கடந்தமுறை அம்மா ஆட்சியின் போது. ராவோடு ராவாக கருணாநிதியை கு(து)ண்டு கட்டாக வேனில் ஏற்றி, "கொல்றாங்கப்பா" என்று கதற கதற...ச்சே, கருணாநிதியை கைது செய்துவிட்டனர்.

இந்த முறை என்ன நடக்குமோ என்று கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிபோய் இருக்கிறது.

திமுகவின் அரசியல் எதிரியான ஜெயலலிதா, கருணாவின் எவர்க்ரீன் பாப்பார எதிரிகளில், பாலக்காட்டு பார்ப்பனர் அமரர்.எம்.ஜி.ஆரை தொடர்ந்து "முதல்" இடத்தில் இருந்துவருகிறார்.

சு.சாமி :

சினிமாவில்தான் காமெடியன்கள் 'ஹீரோ' ஆவார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்குகள் மூலம் அரசியல் ஜோக்கர் என்று கூறப்பட்ட சுப்பிரமணியம் சாமி, இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஆசாமியாகி விட்டார் சு.சாமி. "யார் ஊழல் செய்தாலும் வழக்கு தொடர்வேன்" என்கிறார் சாமி.

2G வழக்கில் கருணாநிதியையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஆரம்பம் முதலே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கருணாநிதிக்கு 'குடைச்சல்' கொடுத்துவரும் சு.சாமிதான், கருணாநிதி குறிப்பிட்ட லிஸ்ட்டில் நம்பர் டூ.

சோ :

சு.சாமிக்கு அடுத்தபடியாக, கருணாநிதி குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் இன்னொரு பாப்பார சாமி....சோ.எஸ்.ராமசாமி. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர். "அதிமுக வெற்றி பெற விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும்" என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் போதே கணித்தவர் சோ.

இந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வலுவாக அமைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தவர் சோ. "பலகோடிகள் ஊழல் செய்திருக்கும் கருணாநிதி தோல்வி அடையவேண்டும்" என்று கடந்த ஒரு வருடமாக பேசிவருகிறார் சோ.

SO,சோதான் கருணாநிதிக்கு எதிரான பாப்பார பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

ஞாநி :

"ஓ" பக்கங்கள் புகழ் எழுத்தாளர் ஞாநி, தன்னை ஒரு பெரியார்வாதியாக காட்டிக்கொண்டாலும், பிராமண சமுகத்தில் பிறந்த ஞாநி, தொடர்ந்து விகடன்,குமுதம்,கல்கி என்று துரத்த துரத்த "ஓ" பக்கங்கள் மூலம் கருணாநிதிக்கு எதிராக எழுதியும், பேசியும் கிட்டத்தட்ட ஒரு புரட்சி பத்திரிகையாளராகவே மாறி விட்ட இவருக்கு, லிஸ்ட்டில் நான்காம் இடம்.

லதா ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டாரின் மனைவி எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த், பூத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போட்டதை ஒரு பத்திரிக்கையின் நிருபர் போட்டோ எடுத்துவிட்டார். அவர் அப்படி ஒட்டு போட்ட நேரத்திற்கு பின், விழுந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கே போய் இருக்கலாம்.

ரஜினியை அதிமுகவுக்கு ஓட்டுபோட சொன்னவர் பார்ப்பனரான அவர் மனைவி லதா அவர்களாக இருக்கலாம் என்ற ஒரு "சந்தேகத்தின்(??)" அடிப்படையில் இவர் பெயர் நம் பட்டியலில்.

எஸ்.வி.சேகர்:

அதிமுக,திமுக,காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்று இன்று அவர் நிலைமை அவர்க்கே காமெடியாக போய்விட்டது.

ஆனால், திமுகவில் கொஞ்ச காலமும், தேர்தலின் போது காங்கிரஸில் கொஞ்ச காலமும் இருந்து, தனது 'தாய்' கட்சியான அதிமுகவுக்கு "வேலை(!)" பார்த்துவிட்டார் மைலாபூர் பார்ப்பனர் எஸ்.வி.சேகர் என்கிறது நமக்கு கிடைத்த ரகசிய தகவல்.

கவிஞர் வாலி :

ஒரு வாளி(லி) கூஜா தூக்குகிறது என்று கவிதையே எழுதலாம்.
கருணாநிதியை புகழ்ந்து, ஸ்ரீரங்கம் பார்ப்பனர் கவிஞர் வாலி எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் சாம்பிளுக்கு.

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது


உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது

நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;

உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

கவியரங்கம்,பட்டிமன்றம், பாராட்டு விழாக்கள் என கவிஞர் அடித்த "ஜால்ரா" சத்தத்தில், கருணாநிதியின் காதுகளில் விழாமல் போய்விட்டது...மின்வெட்டு,விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள்.

இப்படியாக,கருணாநிதிக்கு கூட இருந்து "குழி" பறித்துவிட்டார் பார்ப்பன கவிஞர் வாலி.

திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் :

மேலே,நாம் குறிப்பிட்ட அனைத்து பார்ப்பனர்களையும் விட, கருணாநிதியை "நம்ப வைத்து மோசம் செய்தவர்" திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தான்.

தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னால், தனது குடும்பத்தை கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கும், குறிப்பாக தான் வெற்றி பெற, திருநள்ளாறு கோவிலுக்கும் தனது குடும்பத்தை அனுப்பி,அங்கு உள்ள பார்ப்பனர்களின் ஆசி பெற முடிவெடுத்தார் கருணாநிதி.

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

ஆறாவது முறையாக முதல்வராக , இந்த கோவில் பார்ப்பனர் பூஜையால் பதவி ஏற்ப்போம் என முடிவே செய்துவிட்ட கருணாநிதிக்கு, கடைசியில் கிடைத்தது வெறும் "எள்" மட்டுமே.

நீங்களே சொல்லுங்கள், இந்த திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தானே, கருணாநிதியை,திமுகவை தோற்கடிக்க வைத்தவர்?

பகுத்தறிவு(!) : இன்பா

என்னவோய் சொல்லுங்கோ, இந்த பட்டியல் போறுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

Sunday, June 12, 2011

மங்காத்தா vs வேலாயுதம்


திரை அரங்கே தெரியாத அளவுக்கு கட்டவுட்டுகள், பேனர்கள், முதல்நாள் காட்சிகள் அனைத்தையும் நிரப்பும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் என்று சகலவிதத்திலும் சரிசமமானவர்கள் ...இன்றைக்கு விஜய் மற்றும் அஜித்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல் வரிசைக்கு பின் நிற்கிறார்கள் அஜித்-விஜய் ஜோடி. இவர்களுக்கு பின் சூர்யா,சிம்பு,தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி,விஷால்,கார்த்தி என மிகத்திறமையான இளைஞர் பட்டாளம் இருக்கிறது என்றாலும், விஜய்-அஜித் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் "ஓபனிங்" மற்றவர்களுக்கு இல்லை. இந்த ஜோடியை சூர்யா,சிம்பு போன்றோர்கள் "மாஸ்" விஷயத்தில் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.அவ்வளவே.

தொடர்ந்து தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனால் ஆறு படங்களில் நடிக்கவைக்கபட்டு, குறிப்பாக விஜயகாந்துடன் செந்தூரபாண்டி போன்ற படங்கள் மூலம் கைதூக்கி விடப்பட்டார் விஜய். ஆனால், அவர்க்கு முதல் வெற்றி, அவரது தந்தையின் படங்களால் வரவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக மற்றும் பாசிலின் காதலுக்கு மரியாதை போன்றவையே விஜய்க்கு அடித்தளம். ப்ரியமுடன் படத்தில் நெகடிவ் ரோல் செய்ததோடு சரி. அதன் பின்னர் தனகென்று ஒரு பார்முலாவை வைத்துகொண்டு அதன் படியே இன்று வரை பயணிக்கிறார் விஜய்.

விஜய் உடன் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அஜித்குமார், அவருக்கு இணையாக, அவருக்கு போட்டியாக வளருவார் என்று யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரே சமயத்தில் வெளியாகி, நல்ல வரவேற்ப்பை பெற்ற விஜய்யின் "பிரெண்ட்ஸ்" படத்தை ஓரங்கட்டி, விஜய்க்கு நிகரான "மாஸ் ஹீரோவாக" உருவெடுத்தார் அஜித்..."தீனா" படத்தின் மூலம்.

அதன் பிறகு, அஜித் - விஜய் படங்கள் தொடர்ந்து தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளில் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என்று வெளியாகி களை கட்டின. "நீ என்ன பெரிய தலையா" என்று விஜய்யும், "முதுகுக்கு பின்னால பேசாதே" என்று அஜித்தும் தங்கள் படங்களின் 'பன்ச்' வசனங்களால் மோத, ரசிகர்களும் அவர்களின் படங்களின் ரீலிஸ் அன்று மோதிக்கொண்டார்கள்.

வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு என்று பல பணிகளில் படம் செய்த அஜித், "பில்லா" வெற்றிக்கு பிறகு தென் இந்தியாவின் "ஸ்டைலிஷ்" ஹீரோ என்று உருவாகி, தற்சமயம் அதே பாணியில் படங்கள் செய்துவருகிறார்.

அஜித், விஜய் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது... அவர்களுக்கு வெற்றி-தோல்வி தந்த பக்குவம்.

தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதிலும் சளைத்தவர்கள் இல்லை..விஜய்,அஜித் இருவரும்.

ஒரு விழாவில்,"பாராட்டு விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்க" என்று அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னாலே அஜித் துணிச்சலாக அறிவிக்க, விஜய்யோ அவருக்கு ஒரு படிமேலே சென்று "ஆளும் கட்சியினர் எனது ரசிகர்களை தாக்குகிறார்கள்" என்று வெளிப்படையாக அறிவித்து, எதிர்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டார்.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் - விஜய் இருவரின் படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக போகின்றன.

மங்காத்தா vs வேலாயுதம் என்று களை கட்டப்போகிறது ஆகஸ்ட் மாதம். தியேட்டர்கள் கிடைக்கததால், இரண்டு வாரங்கள் இடைவேளையில் வெளிவரப்போகின்றன இந்த இரண்டு படங்களும்.

விஜய்யின் 50 படமான "சுறா" படுதோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் மங்காத்தா -அஜித்தின் 50 வது படம்.வேலாயுதம் - விஜய்யிக்கு 52 வது படம்.

இயக்குனர்கள்:


ஜெயம்,உனக்கும் எனக்கும், எம்.குமரன்,சந்தோஷ் சுப்பிரமணியம் என்று வரிசையாக தெலுங்கு படங்களை தமிழ் எடுத்து தொடர் ஹிட் தந்த ஜெயம் ராஜா படத்தின் இயக்குனர். "ரீமேக் ராஜா" என்று அழைக்கப்படும் ராஜா முதல் முறையாக சொந்த கதையை, தனது சகோதரர் ஜெயம் ரவி இல்லாமால் வேறொரு ஹீரோவை, அதுவும் விஜய்யை வைத்து இயக்கும் படம் "வேலாயுதம்".

விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். குழந்தைகள் வரை சென்றடையும் விஜய்யின் அதிரடி ஆட்டத்தில் வழக்கமான குத்து பாடல்கள் களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.


சென்னை 28 , சரோஜா மற்றும் கோவா படங்களின் இயக்குனர் வெங்கட் பிரபுதான் அஜித்தின் மங்காத்தா இயக்குனர். மூன்றே படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒரே மாதரி ஜாலி கதைகள் செய்த வெங்கட், இதில் அஜித்,அர்ஜுன் என்று சீரியஸ் கதையை முதல் முறையாக செய்கிறார்.

இரண்டு இயக்குனர்களை ஒப்பிட்டால், ஜெயம் ராஜா அனுபவம் மிகுந்தவர். கமர்சியல் விஷயங்களில் தேர்ந்தவர் என்பது அவரது தொடர் வெற்றி படங்களின் மூலம் அறியலாம். அதே சமயம், அவரது வெற்றி படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள்.

வெங்கட் பிரபு, தனது முதல் படத்தில் ஜெயித்தாலும்,அடுத்த இரண்டு படங்களை பார்க்கும் போது, ஒரு அமெச்சூர் இயக்குனராகவே காட்சி தருகிறார்.

வேலாயுதம் பிளஸ் :

வழக்கம்போலவே விஜய்யின் டான்ஸ் மற்றும் ஆக்க்ஷன்,ஜெனிலியா, சந்தானம் காமெடி இத்துடன் ஜெயம் ராஜாவின் கமர்ஷியல் விறுவிறு திரைக்கதை திறமை.

வேலாயுதம் மைனஸ் :
கிராமத்தில் இருக்கும் விஜய் பெரும் மக்கள் சக்தியாக வருவதான பழைய கதை.முகமூடி அணிந்த விஜய்யின் கெட்டப்பை பார்க்கும்போது அந்நியன்,கந்தசாமி படங்களின் நினைவுக்கு வருவது, அதே பாணியிலான படம் என்று காட்டுகிறது.

மங்காத்தா பிளஸ்:

அஜித்தின் 50 படம் என்கிற எதிர்பார்ப்பு, தமிழின் நம்பர் ஒன் நாயகியான த்ரிஷா, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றொரு பிளஸ்.

இதுவரை வந்த வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதாலும், படத்தில் ஏற்க்கனெவே வெளியாகி கலக்கிக்கொண்டு இருக்கும் விளையாடு மங்காத்தா பாடல் மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.அடுத்த மாதம் பிரமாண்டமாய் நடைபெறப்போகிறது மற்ற பாடல்களின் இசை வெளியிடு.

ஹாலிவுட் பாணியில் இருக்கும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை பாணி மற்றும் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் பற்றிய ஒரு புதிய கதை போன்றவை இப்படத்தின் பிளஸ்.கூடவே, இன்று ஒரு புதிய டிரெண்டை அமைத்து இருக்கும் அஜித்தின் நரைமுடி கெட்டப் மற்றும் அவர் ஏற்று இருக்கும் நெகடிவ் ரோல்.

மங்காத்தா மைனஸ்:
பில்லா படத்திற்கு பிறகு அதே பாணியில் நடை,உடை பாவனைகள் இதிலும் தெரிகின்றன. மேலும், பிரேம்ஜியின் காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் ஜாலி ஸ்டைல் அஜித்துக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள்.

வெங்கட் பிரபு மீது ஒரு சிறந்த இயக்குனர் என்ற நம்பிக்கை இதுவரை வரவில்லை.

சேனல்கள் ஆதரவு யாருக்கு?

வேட்டைக்காரன்,சுறா மற்றும் காவலன் படங்களின் கசப்பால், விஜய் திமுகவுக்கே எதிராக மாறிவிட்டார். "வேலாயுதம்" படத்தின் அனைத்து உரிமைகளையும் ஆளும் கட்சியின் சேனலான "ஜெயா டிவி" கைப்பற்றி இருக்கிறது.

அதிமுக அபிமானிகள் ஒட்டுமொத்தமாக விஜய்யை கொண்டாடபோவது உறுதி. (அதிமுக கொடி திரை அரங்குகளில் பறக்கும் என எதிர்பார்க்கலாம்).

மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி, அழகிரியின் மகன் என்பதால், இப்படம் கலைஞர் டிவியின் கையில் இருக்கிறது. சன் டிவியின் ஆதரவும் இந்த படத்திற்கு மட்டுமே என்று சொல்லவேண்டியது இல்லை. சன் டிவி, தனுஷ் நடிக்கும் வேங்கை படத்தை வெளியிட உள்ளதால், அதன் மார்க்கெட்டிங் விவகாரத்தில்தான் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

பில்லா படத்தையும் கலைஞர் டிவி வாங்கினாலும், படம் வெற்றி பெற்றது. ஆனால், தற்சமயம் திமுக ஆட்சியில் இல்லை என்பது எந்த அளவுக்கு மங்காத்தாவை பாதிக்கும் என்று பார்க்கவேண்டும்.

மங்காத்தா vs வேலாயுதம் :

கோவா,தில்லாலங்கடி என வெங்கட் பிரபு,ஜெயம் ராஜா இருவரின் முந்தைய படங்களுமே தோல்வி என்பதால், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இருவருமே.

யாருக்கு வெற்றி என்பது,அஜித்,விஜய் என்ற முன்னணி நடிகர்களை விட, இந்த இயக்குனர்களின் திறமையை நம்பியே இருக்கிறது.

எது எப்படியோ, தல - தளபதி மோதலால்,சினிமா ரசிகர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு திருவிழா காண தயாராகி விட்டார்கள்.

-இன்பா

 
Follow @kadaitheru