Monday, October 19, 2009

அருணாச்சலபிரதேசம் நமக்கே சொந்தம் - அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீனா சட்டவிரோதமாக 43,180 சதுர கிலோ மீட்டரை ஆக்கிரமித்துக் கொண்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோல் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இந்தியா பிடித்து வைத்துக் கொண்டதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.

எல்லைப் பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ. தமக்கு சொந்தமான பகுதி. அதை இந்தியா ஆக்கிரமிப்புச் செய்துள்ளது என்று சீனா கூறி வருகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. சீன - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதியில் சீனாவின் நிலை மிகவும் தெளிவானது, உறுதியானது என்று சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்து இருந்தது.

"சீனாவை பொறுத்தவரை இந்தியா இரண்டு விதமான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஒன்று எல்லைப் பிரச்னைக்கு தூதரக நிலையில் பேச்சு நடத்துவது. அடுத்தது, சீனாவுடனான இந்திய எல்லையில் உள் கட்டமைப்பையும் ராணுவத்தையும் பலப்படுத்துவது. பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்ததும் பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ள காஷ்மீரில் கட்டுமான பணிகளை சீனா செய்து வருவதும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு சமரச பேச்சு மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அதே நேரத்தில் சீனாவுடனான எல்லையில் இந்திய ராணுவத்தின் திறன் பலப்படுத்தப்பட்டு எதற்கும் தயார் நிலையில் உள்ளது" இவ்வாறு அறிவித்துஇருக்கிறார் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி.

இந்த சூழ்நிலையில் "அருணாச்சல பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவிற்கே சொந்தமானது" என்று மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்து இருக்கிறார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

அருணாசலபிரதேச மாநிலம், இந்திய நாட்டின் ஒரு அங்கமாகும். அதன் ஒவ்வொரு அங்குலமும் இந்தியர்களுக்கு சொந்தமானது என்பதை அனைவருக்கும் உணர்த்துவோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல பிரதமர்கள் அருணாசலபிரதேசம் சென்று வந்துள்ளனர். ஆனால், இப்போது பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றுவந்தவுடன் அதனை சீனா பிரச்னையாக்க முயல்கிறது.

அருணாச்சல பிரதேச பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. சிக்கிம்மை இந்தியாவின் பகுதி என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து வந்த சீனா கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சிக்கிம்மை ஏற்றுக் கொண்டது. அதுபோல் அருணாச்சல பிரதேசத்தையும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இதனை கண்டிக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து ரஷ்யா, சீனா மற்றும் இந்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் அக்டோபர் 26மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அருணாசலபிரதேசம் குறித்த சீனாவின் கருத்திற்கு உரிய பதில் தரப்படும்.

இவ்வாறு நமது வெளியுறவு துறையின் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதிமொழி தந்துள்ளார்.


கடைக்காரர் கமெண்ட் :
இவர் இப்படி சொன்னதற்கு அப்புறம்தான் நிஜமாவே அருணாச்சல பிரதேசம் யாருக்கு சொந்தம்ன்னு நமக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது.......இந்த மாதரி நம்ம(?) இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு மாநிலமும் யாருக்கு சொந்தம்ன்னு அமைச்சர் பெருமக்களோ இல்லையானா மத்திய அரசோ தனித்தனியா விளக்கம் சொன்னா நல்லது...நமக்கும் நாட்டு நிலவரம் புரியும்...





பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru