Monday, November 30, 2009

பொன்விழா காணும் புதுக்கவிதைகள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

"அது எப்படி எட்டையபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு
நெருப்பை சுமந்த கருப்பை "என்று வியக்கிறார் வைரமுத்து பாரதியின் வரிகளை படித்துவிட்டு.

வேறு கவிஞர்களால் கொண்டுவர இயலாத உணர்ச்சியும், வீரியமும் பாரதியின் கவிதைகளில் எப்படி அமைந்து இருக்கிறது? அவனுக்கும் மட்டும் புரட்சிகர சிந்தனைகளும்,அற்புதமான சிந்தாத்ங்களும் எங்கிருந்து கிடைத்தன?

"பாரதி வாழ்ந்த காலமே அவன் சிறந்த படைப்புகளை உருவாக்க காரணம்" என்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

1898ல் தந்தையாரின் மரணத்திற்கு பிறகு, சிறு வயது பாரதியை அவரது அத்தை குப்பம்மாள் அடைக்கலம் தந்து காசிக்கு அழைத்து சென்றார். அங்கு பாரதி ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது ஈடுபாடு கொண்டு அவரது கவிதைகளை படிக்க தொடங்கினார். பின்னர் எட்டையபுரத்துக்கு வந்த அவர் ஷெல்லியின் கில்டு என்று ரசிகர் மன்றத்தை தொடங்கி, ஷெல்லிதாசன் என்று தனக்கு புனைப்பெயரும் சூட்டி கொண்டார்.

இந்த ஆர்வம்தான் அவரை ஆங்கிலக்கவிதை வடிவான ஸானெட் என்ற 14 வரிகளில் அமையும் பாடலின் வடிவத்தை தமிழில் எழுதிப் பார்க்க வைத்தது. அப்படி எழுதிய பாடல் ஒன்று, 1904ம் ஆண்டு ஜூலை மாதம் தனிமை இரக்கம் என்ற தலைப்பில் மதுரையில் மு.ரா.கந்தசாமி கவிராயர் நடத்தி வந்த விவேகபாநு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இதுவே அச்சேரிய பாரதியின் முதல் பாடலாகும். இதன் பிரதிதான் இங்கே கொடுத்து இருக்கிறோம்.


புதுக்கவிதை என்ற வடிவம் தோன்றி 50 வருடம் ஆகி விட்டது.

பாரதிக்கு பின்பு புதுக்கவிதைகள்,அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

காலச்சுவடு இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் தருகிறார் இன்றைய தலைமுறை கவிஞர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்து இருக்கும் கவிஞர் திரு. ஞானக்கூத்தன்.

கேள்வி: புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க?

பதில்:தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது.

அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம் பண்ணாங்க. அவங்களோட நோக்கம் நம்மோட இலக்கியங்களை அவமானப்படுத்தறது. நம்மோட இலக்கிய மதிப்பை இழக்கச் செய்வது அவங்களுக்கு முக்கியமான நோக்கமா இருந்தது. அவங்க அத வெற்றிகரமா செஞ்சாங்க. தேசிய இயக்கம் வந்தபோது நம்ம இலக்கியத்துக்கு மறுபடியும் மதிப்பு வந்தது. தேசிய அரசியல் இயக்கமா கலை இலக்கியம் மாறி நம்பிக்கை தரக்கூடிய மறுமலர்ச்சி இயக்கமா ஆவதைப் பாரதியார் கிட்ட நாம பாக்குறோம். ஆனா அதுவும் ஒரு கட்டத்தோட நின்னு போச்சு.

பாரதியார் ஒரு கவிஞரா இந்தப் புதிய கருத்துகளச் சொல்ல முடிஞ்சுதே தவிர, ஒரு இயக்கமா மற்ற மொழி இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய முயற்சிகளத் தூண்டக்கூடியதா அந்தப் போக்கு வரல. தன்மானத்த மீட்டுக்கொடுத்ததோட புதிய இலக்கியத்தைப் படைக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யுறதுதான் தமிழ் நவீன இலக்கியத்தோட தொடக்கம். அது சிறுகதையானாலும் நாடகமானாலும் கவிதையானாலும்.
கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது. அப்ப அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டது.

படைப்பிலக்கியம்னு ஒண்ணு கவிதையில் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்குத் தடையா இருந்த விஷயம் இலக்கணம். யாப்பிலக்கணம். அது பாரதியார் காலத்திலேயே நவீனத்துவம் ஆகிட்டுது. நமக்கு வால்ட் வில்ட்மன் தெரிஞ்சுட்டுது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிஞ்சுது. கவிதைங்கிறது யாப்பில்லாமயும் படைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுது. எலியட்டோட கருத்துகள் நமக்கு வந்தன. இதை உணர்ந்தது முதல்ல பாரதியார் பிறகு பிச்சமூர்த்தி, ராஜகோபாலன். அந்தக் கட்டத்துல வசன கவிதைன்னு ஒண்ணு இந்தியா முழுவதும் வர ஆரம்பிச்சிட்டுது. அந்த வசன கவிதையைப் பிச்சமூர்த்தியும் கு. ப. ராவும் 1939ல எழுத ஆரம்பிச்சாங்க. இப்போ எழுபது வருஷம் ஆயிருச்சு. இடையில அவங்க வசன கவிதை எழுதுறத விட்டுட்டாங்க. அப்புறம் மேற்கத்திய இலக்கியத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் நம்மிடையே இல்லாமல் போயிருச்சு.

புதுக்கவிதைங்கிற பேர்ல நம்முடைய கவிதைகள் இனிமே இப்படி இப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு அறிக்கையைத் தயாரிச்சாங்க. முதல் தடவையா தமிழிலக்கியத்துல ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம் தோன்றியது அதிசயமான ஒரு நிகழ்வு. 1958இல் க.நா.சு அதைச் செஞ்சாரு. புதுக்கவிதைங்கிற பேரே உலக இலக்கியம் தொடர்பானது. புதுசுங்குற சொல் டபிள்யூ.ஹெச். ஆர்வெல் கொண்டு வந்தது. நியூ சிக்னேச்சர். இடதுசாரி தொடர்பான நியூங்கிறது அதையொட்டிப் புதுக்கவிதைன்னு க.நா.சு செஞ்சாரு. வசனம் வேற கவிதை வேற என்ற விமர்சனங்களை அது ஏற்படுத்தியது.
1958ல புதுக்கவிதை அறிக்கையோட இடதுசாரி சார்புடைய சரஸ்வதில க. நா. சு அந்த இயக்கத்த ஆரம்பிச்சு வச்சாரு. 59ல எழுத்து மூலமா அது பரவ ஆரம்பிச்சுது.

தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் புதுக்கவிதை செய்ததால் அதை நாம் கொண்டாட வேண்டிய கடமை இருக்குது. பெருமைப்பட வேண்டிய அவசியம் இருக்குது. அதுக்குக் காரணம் சிற்றிதழ்கள்தான் புதுக்கவிதையைக் கண்டு பிடிச்சது, உருவாக்கியது. அரசியல் சார்பற்ற மத, சமய சார்பற்ற ஒரு இலக்கியத்தை, வெளியை உருவாக்கி கலை இலக்கியக் கருத்துகளைப் புதுமைப்படுத்தியது. அந்த மாறுதலோட சின்னம்தான் புதுக்கவிதை.

கேள்வி:தமிழுக்குப் புதுக்கவிதை என்ன பண்ணியிருக்கு?

பதில்:புதுக்கவிதை சம காலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு. அரசியல் கட்சிகள்லகூடப் புதுக்கவிதை எழுதுற குழுவும் மரபுக்கவிதை எழுதுற குழுவுமா இருக்கு. ஒரு புதிய உணர்வைப் புதுக்கவிதை உருவாக்கியிருக்கு. நாடகம், சிறுகதை எல்லாத்துக்கும் சேர்த்ததான ஒரு பொது அடையாளம் புதுக்கவிதை. அந்தந்தக் காலத்துல எது புதுசோ அது புதுக்கவிதைன்னு க.நா.சு. சொல்லியிருக்காரு.

கேள்வி:இன்னிக்கு எழுதப்படுற கவிதைகளை, எல்லாச் சிறுபத்திரிகைகளிலும் வர்ற கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க?

பதில்:ஆழம் அதிகமா இருக்கு. எடுத்துரைப்புச் செய்து சொல்லக்கூடிய துறை வளரல. சின்னச் சின்ன மதிப்புரைகள்தான் வருதே தவிர அதையும் கவிஞர்களே பண்ணிக்கிடறாங்க. அது பெரிய துரதிர்ஷ்டம். மற்றபடி கவிதைகள் ரொம்ப ஆழமுள்ள கவிதைகள்தாம் வந்துட்டிருக்கு.

கேள்வி: இந்த ஐம்பது வருஷத்த வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?

பதில் :அசுர வளர்ச்சி. அது தமிழ் மொழியின் சக்தின்னு சொல்லணும். தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை. திருநாவுக்கினியர் சொன்ன மாதிரி அந்தந்தக் காலத்துச் சொற்கள் தான் கவிதைக்குக் கொடுக்குற சத் துணவு. பெரிய ஆன்மீக மொழியா இருக்க அது முயன்றதே கிடையாது. 1500 வருஷ ஆன்மீகப் பாரம்பரியம் இருந்தும் இராமானுஜர், சங்கரர் போன்ற தமிழ் பேசிய சிந்தனையாளர்கள் இருந்தும் ஆன்மிக எல்லைக்குள் போகாம பூமியிலேயே இருக்கும் மொழி தமிழ்.

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

(கவிஞர். ஞானக்கூத்தன் எழுதிய "அம்மாவின் பொய்கள்" என்ற கவிதையில் இருந்து)

கடைக்காரர் கமெண்ட்:
தமிழ்ல புதுக்கவிதை வந்து 50 வருடம் ஆகிவிட்டது. இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்குற முக்கால்வாசி பேரு தனக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லிக்கிற அளவுக்கு கவிதை எளிமையா ஆனதுன்னா அதுக்கு காரணம் பாரதியார்தான். அந்த முண்டாசு கவிஞனுக்கு நாம மனசார நன்றி சொல்வோம்ங்க.






பதிவு : இன்பா

Thursday, November 26, 2009

ரேனிகுண்டா - சினிமா பார்வை


சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், சிதம்பரத்தில் ஒரு அரசியல் பிரமுகரை கொலை செய்த வழக்கில், நான்கு பேரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நான் அவர்களை பார்க்க நேரிட்டது. அவர்கள் ஜீன்ஸ், டீ சார்ட் அணிந்து இருந்தார்கள். அனைவர்க்கும் வயது 20 க்குள்.

அன்று கிடைத்த அதே அதிர்ச்சி, இன்று "ரேனிகுண்டா" படத்தின் ட்ரைலர் பார்த்தபோது கிடைத்தது.

மீசை கூட முளைக்காத ஒருவன் "உன் சங்கை அருப்பேன்" என்கிறான். இன்னொருவன் ஒரு போலீஸ்க்கராரை "உன் குடும்பத்தை தூக்குவேன்" என்று மிரட்டுகிறான்.

நான்கு கல்லூரி மாணவர்கள் சேர்ந்தால் எப்படி காதல்,கலாட்டா என்று செய்யவேண்டுமோ, அது போல நான்கு படிக்காத பசங்க சேர்ந்தால் வன்முறை என்ற தமிழ் சினிமாவின் இலக்கணத்தின்படி, உருவாகி இருக்கிறது ரேனிகுண்டா.

படத்தின் அறிமுக இயக்குநர் பன்னீர்செல்வம் , லிங்குசாமியின் உதவியாளர்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி மற்றும் ஃபிலிம் பேப்‌ரிகேட்டர்ஸ் தயாரிப்பில், தயா‌ரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானி கதாநாயகனாக நடிக்க , "பீமா"வில் நடித்த சனுஜா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற முக்கிய கதா பாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள்.

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படததோகுப்பு அந்தோனி. சண்டைக்காட்சிகளை அமைத்து இருக்கிறார் ராஜசேகர்.

படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா . இவர் சிவாஜி நடித்த "அந்த நாள் " போன்ற படங்களுக்கு இசை அமைத்த வீணை எஸ் பாலசந்தர் அவர்களின் கொள்ளு பேரன் "மழை பெய்யும்" என்ற பாடலை ஹரிஷ் ராகவெந்திரா பாடி உள்ளார். "விழிகளில்" என்ற பாடலை பாம்‌பே ஜெயஸ்ரீ பாட, "தல்லா குளம்" என்ற அதிரடி பாடலை பாடி இருக்கிறார் சிம்பு. பிறைசூடன், நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

"இளம் குற்றவாளிகளின் கதையாக ரேனிகுண்டா உருவாகிறது" என்றார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

"பத்திரிகைகளில் வரும் சில கொலை குற்ற செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அந்த கொலைகளை செய்தவர்கள் மைனர்கள் என்ற போது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்காக அவர்கள் இந்த கொலைகளை செய்ய யார் காரணம்? எந்த மாதிரியான சூழல் இக்கொலைக்குற்றத்துக்கு அவர்களை தூண்டுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை" என்றார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

மதுரை சிறுவர் சிறையில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மும்பை செல்லும் வழியில் "ரேனிகுண்டா" வில் இறங்கிவிட, அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் படம்.

படத்தின் இசை வெளியிட்டு விழாவில், இயக்குநர் லிங்குசாமி பேசுகையில் "இப்போது கூட பன்னீர்செல்வம் என்னை விட்டுத் தனியா போனதை என்னால் உணர முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் பல நேரம் என்னையறியாமல் பன்னீர்... இது எப்படி பாருங்க என்ற பேசிவிடுகிறேன். பிறகுதான் ஆஹா, பன்னீர்தான் நம்மிடம் இல்லையே என்று உணர்கிறேன்.அவர் பல பிரமாதமான சீன்களை சொல்லியிருக்கிறார். அவற்றை எடுக்கும்போது அவரை கேமிராவுக்கு பக்கத்திலேயே நிற்க சொல்லிடுவேன். அவரு திருப்தியா இருக்குன்னு சொன்ன பிறகுதான் வேற சீன் எடுப்பேன்" என்றார்.

இயக்குநர் அமீர். பேசுகையில் "என்னுடைய அசிஸ்டென்ட் சசிக்குமார் எனக்கு எப்படி சவாலா இருக்கானோ, அதே மாதிரி லிங்குசாமியோட அசிஸ்டென்ட் லிங்குசாமிக்கு சவாலா இருப்பான் போலிருக்கு" என்றார்.

"சிட்டி ஆஃப் காட் படம் மாதிரி இருக்கு" என்று ரேனிகுண்டா படத்திற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் அமீர்.

ஒரு புதுமுகம் நடித்த படத்திற்கு ஆறு கோடி பிசினஸ் என்கிறது ஒரு செய்தி . ரேனிகுண்டா(ஸ்) - இன்னொரு சுப்ரமணியபுரம் என எதிர்பார்க்கலாம்



பதிவு : இன்பா

Tuesday, November 24, 2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்


ஆண்டு தோறும் கொட்டி தீர்க்கிறது மழை. வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்...நிரம்பி வழியும் அணை..வெள்ள நிவாரண பணிகள் என வருடம் தோறும் தொடரும் நாடகங்கள். ஆனால், மழை நின்ற பின்னர் வழக்க்ம் போல தண்ணீர் லாரிகளுக்கு பின்னால் ஓடுகின்றனர் நம் மக்கள்.வழக்க்ம் போல பாசனம் செய்ய அண்டை மாநிலங்களை கை ஏந்துகிறார்கள்.

"அரசு முறையான நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் வளம் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் 10 மீட்டருக்கும் குறைவான ஆழத்திலேயே எப்பொழுதும் கிடைக்கும். இதற்கு, முதற்கட்டமாக மாநில அளவில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்; அனைத்து நதிகளிலும் ஏராளமான அளவில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்; நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுத்து, அவற்றை தூர்வாரி, மேம்படுத்த வேண்டும்; அனைத்து கட்டுமானங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வீணாக ஓடி கடலில் கலக்கும் மழை நீர் சேமிக்கப்படும்" என்கிறார்கள் நீர் வள நிபுணர்கள்.

மழை நீரை சேகரித்து, பயன்படுத்துவது எப்படி? இந்த திட்டத்தை செயல்படுத்துவது எப்படி?

மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் தினமணியில் எழுதி உள்ள ஒரு கட்டுரையை எங்கள் பதிவாக இங்கே தந்துள்ளோம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.

மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிர்தம் என்று உணரல் பாற்று.

(உண்டவரை அழியாதிருக்க செய்யும் அமிழ்தம் போல்,உலக உயிர்களை வாழவைப்பது மழை- திருக்குறள்) .






பதிவு : இன்பா

Monday, November 23, 2009

பண்பாடு இல்லாத பாரதம்?


அன்று

கி.பி 1835 ஆம் வருடம்.

இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டார் தாமஸ் பாபிங்ட்டான் மெக்காலெ பிரபு. இவர்தான் 1834 ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசு அமைத்த "பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் இந்தியா " அமைப்பின் முக்கிய உறுப்பினர். மிக சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்.

அவரது பயணம் குறித்து கிடைத்த ஒரு வரலாற்று சான்று இங்கே.

"இந்தியர்கள் மேற்கத்திய கலாசாரமும், ஆங்கிலமும் முக்கியம் என்று நினைத்தால், அவர்களது உன்னதமான சொந்த கலாசாரத்தை இழந்து விடுவார்கள்" என்றார்.மெக்காலெ பிரபு.

அன்றைய இந்தியாவில் திருடர்கள் இல்லை. பிச்சை எடுப்போர் இல்லை. எங்கு பார்த்தாலும் மக்களிடையே உயர்ந்த கலாசாரமும், பிற நாட்டவர்கள் வியக்கும் பண்பாடும் இருந்தன என்று நம்மால் இந்த கடிதம் மூலம் உணர முடிகிறது.

இன்று.

கி.பி 2009 ஆம் வருடம்.
சமீபத்தில் நான் படித்த இரண்டு செய்திகள் அல்லது பத்திரிகைகளில் வந்த உண்மை சம்பவங்கள்.

சம்பவம் 1 : இடம் : தலைநகர் டெல்லி.

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (12) (பெயர் மாற்றம்) இவளது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் அவளுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்தனர். அபபோது அவளது தயார், சினேகா மீதுள்ள பாசத்தில் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

இந்நிலையில் 2 புரோக்கர்களும் சினேகாவை காரில் டெல்லி விமான நிலைய பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றனர்.12 வயதே ஆன இந்த சிறுமியை,ஓடும் காரில் வைத்து கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தனர் அந்த இரண்டு பேரும்.

சம்பவம் 2 :

இடம் : இந்தியாவின் கலாச்சார(?) தலைநகர்.

சென்னை. பெசன்ட் நகர் கடற்கரை. இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை, ஒரு பொது இடத்தில், மக்கள் முன்பாக 16 வயதான இளம் பெண் ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தம் தந்து, காதல் விளையாட்டு நடத்துகிறார். ஒன்று,இரண்டு இல்லை இந்த ஒரு மணிநேரத்தில் 5 வாலிபர்களோடு.
ஐந்து ஆண் நண்பர்களை பொது இடத்தில் மாற்றுகிறாள் ஒரு நவீன கண்ணகி.

கல்வி வளர,வளர நாகரிகமும், பண்புகளும் சேர்ந்து அல்லவா வளரவேண்டும்?

இன்றைய இந்தியாவில் அநாகரிகமும், தனி மனித ஒழுக்க குறைபாடுகளும் வளர்ந்து விட்டதற்கக்கு என்ன காரணங்கள்?

சிந்தனைக்கு இடம் இல்லாத நம்து கல்வி முறையில் குற்றமா?

மீடியா மீது குற்றம் சொல்லலாமா? நடிகையின் கவர்ச்சி படம் வராத 'பெரிய' பத்திரிக்கைகள் இன்று உண்டா? ஆபாசமும்,வன்முறையும் நிறைந்த திரைப்படங்கள், தணிக்கை இல்லாததால் நம் வீட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனத்தை சீரழிக்கும் டிவி சேனல்கள்.. இன்னும் மீடியாக்களின் பொறுப்பிலாதனத்தை சொல்லி கொண்டே போகலாம்தானே?

தனி மனிதனின் குற்றங்களுக்கு, அவனை பெற்ற தாய் அல்லது தந்தையின் பொறுப்புஇன்மை மற்றும் அக்கறைஇன்மை ஆகியவை காரணமாக இருக்கலாம் அல்லவா?

"குழந்தைகள் ஒரு செடி மாதரி" என்பார் திரு.பாலகுமாரன். குழந்தைகளை ஒழுக்கமும், பொறுப்பும் உள்ள நல்ல மனிதர்களாக நம் சமூகத்திர்க்கு தரவேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது என்று நான் கருதுகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
பெற்றோர் வளர்ப்பதிலே...

கடைக்காரர் கமெண்ட்:
நல்ல மனுஷங்க சேர்ந்ததுதான் நல்ல சமூகம்.
நல்ல மனுசங்களை உருவாக்குற கடமை மத்தவங்களை விட பெத்தவங்களுக்குத்தான் இந்த காலத்துல அதிகமா இருக்குங்க.






பதிவு : இன்பா

Friday, November 20, 2009

பசுமைக்கல்வி தாராயோ?


சில வருடங்களுக்கு முன்னால் ஊட்டி சென்றபோது அது எனக்கு ஒரு கசப்பான,மனதில் ஒட்டாத அனுபவமாகவே அமைந்தது.பார்க்கும் இடமெல்லாம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்...கழிவுகள்..கூட்ட நெரிசல்..அதன் காரணனமான சீர்கேடுகள் இப்படி பல.

"ஊட்டி போறது வேஸ்ட். கொடைக்கானல் தான் இப்போ பெஸ்ட்" என்று தனது ஹனிமூன் பயணதிட்டம் பற்றி பேசினான் என் நண்பன் ஒருவன். ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் பெய்த பேய் மழை மற்றும் நில சாரிவுகள் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது நீலகிரி . மூன்று நாட்களில் பெய்த 600 செ.மீ* மழையில் 543 இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டதாகவும் 816 வீடுகள் சேதமடைந்ததாகவும்# செய்திகள் தெரிவிக்கின்றன. ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2,636 மீ உயரத்தில் இருக்கும் மலை, வரையாடுகள், ஷோலா புல்வெளிகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் கொண்ட, பூகோளரீதியாகவே நிலச் சரிவுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்ட மலை நீலகிரி.

"யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை (பயோஸ்பியர் ரிசர்வ்) நீலகிரி, இன்றைக்கு உலக வெப்பமயமாதலின் அபாயச் சங்காக மாறியிருக்கிறது. குறைந்த நாளில் அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், பல நாட்கள் வெயில் வாட்டி எடுப்பதும் இதன் வெளிப்பாடுதான். நீலகிரியில் மக்கள் குடியேற்றம் அதிகமாவதற்கு முன்பே, பெருமழை, வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு என பல விதமான இயற்கைப்பேரழிவுகள் நடந்துள்ளன.

இப்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, ஒன்பது லட்சம். கடந்த 1981ல் நான்கு லட்சம் மட்டுமே. 1967ல் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊட்டி நகரில், இப்போது ஒன்றே கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இம்முறை இயற்கையின் சீற்றத்தில் அப்பாவி மக்கள் 43 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சி தரும் செய்தி, இதற்கு முழு காரணம், பொறுப்பு இயற்கை இல்லை. மனிதர்கள் ஆகிய நாம் தான்.

1.சுற்றுலா மையமாக மாறிய பின், மக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சோலைக் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும், கான்கிரீட் காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2. பணப்பயிர்களில் காசு பார்த்தவர்கள், மலையெல்லாம் தேயிலையை விதைத்து, பார்க்குமிடத்தையெல்லாம் "பசுமைப் பாலைவனம்' ஆக மாற்றத்துவங்கினர். நீலகிரியில் இப்போதுள்ள மொத்த விவசாயப் பரப்பில், 80 சதவீதத்துக்கு தேயிலை விவசாயமே நடக்கிறது.மொத்தம் 5,536 சதுர கி.மீ., பரப்புள்ள நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடப்பதாகவும், அதில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 697 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தேயிலை விவசாயம் மட்டுமே நடப்பதாக தோட்டக்கலைத்துறை கணக்குச் சொல்கிறது.

3. மாவட்டத்திலுள்ள 10 தோட்ட நிறுவனங்களிடம் மட்டு மே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்து மே வளம் கொழித்த காடுகளாக இருந்தவைதான். காடழிப்பைக் கண்டு கொள்ளாத அரசு, அங்கெல்லாம் ரோடுகள் போடவும் நிதியை வாரிக் கொடுத்தது.கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப் பரப்பை விட, கடந்த 60 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப்பரப்பே அதிகம்..

4. நீலகிரியில் காடழிப்பு, மரக்கடத்தல், அனுமதியற்ற கல்குவாரி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா, மாற்று வழி, புதிய ரோடுகள், புதிய ரயில்வே வழித்தடம் என வளர்ச்சிப் பணிகள்,மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் உருவான கட்டடங்கள்.

5. இருக்கிற ரோடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும், இதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல்,ரோடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

மாநில வன உயிரின வாரிய உறுப்பினரும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகியுமான ஏ.சி.சவுந்திரராஜன் தினமலருக்கு அளித்த பேட்டியில், ""மலை மாவட்டம் என்பதால், இதற்கென தனித்தன்மை உண்டு. இங்குள்ள வனமும், சுற்றுச்சூழலும் இங்குள்ள மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை. கடந்த 1993ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னும், தேவையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பல வித நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுத்து இங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுமேயானால், இன்னும் 20 ஆண்டுகளில் இப்படியொரு மாவட்டம் இருப்பதே கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.

எத்தனை முறை அடி வாங்கினாலும் மனிதன் திருந்துவதாய் இல்லை என்பதற்கு உதாரணமாய், நிருபனமாய் நீலகிரி சம்பவத்திற்கு பின்னர் வந்த ஒரு செய்தி.

உடுமலை தாலுகாவில் விவசாயம் பிரதானமாக உள்ளதால் பசுமை தாலுகாவாக உள்ளது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட, வருவாய்த்துறை அனுமதி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், இச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. வளர்ந்த மரங்களை வெட்டப்படுவதை கண்காணிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் தாலுகா நிர்வாகம் வரை கண்டு கொள்ளாததால் உடுமலை பகுதிகளில் தொடர்ந்து பச்சை மரங்கள் வெட்டி, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு மரங்கள் பயன்படுவதால் ஒரு டன் பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், சமீப காலங்களில் பசுமை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதே போல், நெடுஞ்சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகளின் ஓரத்திலும், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங் கள், வாய்க்கால்கரைகள் என பல இடங்களில் உள்ள மரங்கள், வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது.

அரசியல்வாதிகள் முதல் அன்றாடம்காய்ச்சிகள் வரை இயற்கை வளத்தினை, அதன் பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவு மருந்துக்கும் இல்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

நமது கல்வி முறைகளில், பாட திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பசுமை கல்வி என்னும் ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி, மழலை பள்ளிகள் முதல் அதை கட்டாய படமாக கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் முதல் நாம் தொடங்குவோம்.

கடைக்காரர் கமெண்ட் :
பெரியவங்க தலையில் வெறும் நீலகிரி மண்ணு தான் இருக்கு. பாலியல் படிப்பு மாதரி பசுமை படிப்பு ஒண்ணு கொண்டுவந்து, அதை ஸ்கூல் புள்ளைங்களுக்கு சொல்லித்தரணும்ங்க.






பதிவு : இன்பா

Wednesday, November 18, 2009

இந்தியா - தேசிய மொழி இல்லாத நாடு?


"யாமறிந்த மொழிகளில் தமிழ் போல இனிதாவது எங்கும் காணோம் " என்று பாரதியார் பாடியதன் அர்த்தம் தமிழ் மட்டும் அல்லாமல் அவர் சமஸ்கிரிதம் முதலிய பிற மொழிகளை அவர் அறிந்து இருக்கிறார் என்பதே.

ஒரு பயிற்சிக்காக புணே சென்றபோது, இந்தி மொழி தெரியாததால் நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் அல்ல. நம் தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களுக்கு படிக்கவோ,பணியாற்றவோ செல்பவர்களுக்கு இந்தி மொழி அவசியம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.

வேலை நிமித்தமாக அரபு நாட்டில் இருந்த நான், சந்தித்த பெரும்பாலான அரபிகள் மிக நன்றாக இந்தி பேசுவதை கேட்டுஇருக்கிறேன். ஒரு அரபி இவ்வாறு கேட்டார். "பாகிஸ்தானிகளும், பங்காளதேஷ்,நேபாளி மக்களும் நன்றாக இந்தி பேசும் போது, இந்தியர்களாகிய நீங்கள் ஏன் அந்த மொழியை பேச முடிவதில்லை. ஒரு பொதுவான தேசிய மொழி இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய நாட்டில் வசிக்க, பயணிக்க முடியும்" .

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் பொதுவான தேசிய மொழி இல்லாதது அவருக்கு மிக பெரிய ஆச்சரியமான விஷயமாய் இருந்தது. அவரை போல பல வெளி நாட்டவர்க்கும்.

மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது. ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் தொடங்கி உள்ளது

இது தொடர்பாக நான் படித்த ஒரு செய்தியறிக்கை..

அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது. அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது.

பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன. இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.

அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது. ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.

மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது என்கிறது அந்த அறிக்கை.

தமிழ்,தமிழ் என்று வாய்க்கு வாய் முழங்கும் எந்த ஒரு அரசியல்வாதியும் தனது மகனையோ,மகளையோ தமிழ் வழி கல்வியில் படிக்கவைக்கவில்லை என்பதே நிதர்சனம். முதல்வர் கருணாநிதி கூட தனது பேரன் தயாநிதி மாறனை முதல் முறையாக அமைச்சர் ஆக்கும் போது சொன்ன ஒரு காரணம் அவர்க்கு இந்தி பேச தெரியும் என்பதுதான். அழகிரியை அவர் அமைச்சர் ஆக்கி இருப்பதர்க்கு காரணம் அவர் தனது மகன் என்பதால்தான்.
அவருக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் இல்லை.

வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை எப்படி ஏற்று கொள்கிறோமோ அதுபோலவே இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதும்,கற்பதும் தவறு இல்லை.

கடைக்காரர் கமெண்ட் :
இந்தி மட்டும் இல்ல எந்த மொழியையும் கத்துகிறது தப்பில்ல. ஆனா, உணர்வால மட்டும் எப்பவும் தமிழனா இருங்க. அதுவே போதும்.




பதிவு : இன்பா

Tuesday, November 17, 2009

I.P.L. இருக்க பயமேன்?


"புதிய இளைஞர்களுக்கு ஐ. பி. எல் போட்டிகள் ஒரு வரப்பிரசாதமாக அமையும்" என்று இந்த போட்டிகள் அறிமுகப்படுத்தபட்ட போது, இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஆனால், அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம்...இந்த போட்டிகள் ஏற்கனவே அணியில் விளையாடும் சீனியர் வீரர்களின் அலட்சியத்திர்க்கும், அவர்கள் விரும்பும்போது சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெற்று, செட்டில் ஆவதற்கும் உதவும் என்பதே.

ஒரு ஐ. பி. எல் ஒப்பந்தம் கிடைத்தால் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அதுவே போதுமானது. அவர் தனது திறமையை சர்வதேச போட்டியில் ஆடித்தான் நிரூபிக்கவேண்டும் என்று அவசியமோ, நிர்பந்தமோ இல்லை. அவர்கள் ஆடும் சர்வதேச அணியின் வெற்றி, தோல்விகள் அவர்களை பாதிக்காது. இது எந்த நாட்டு வீரருக்கும் பொருந்தும்.

நமது இந்திய அணி பற்றி ஒரு செய்தி..

ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மிகப் பரபரப்பான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புயலாக ஆடி 175 ரன்களை விளாசினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.இந்தப் போட்டியில் இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இதயம் பட படக்க போட்டியைப் பார்த்தனர். ஆனால் இந்தியாவின் தோல்வி அவர்களை நொறுங்கிப் போகச் செய்தது.

இந்தத் தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பழம்பெரும் பத்திரிக்கையாளரான பிரபாஸ் ஜோஷி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் ஒருபக்கம் சோகங்கள் உலவிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது கேப்டன் டோணி தலைமையில், தோல்வி குறித்து கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் பார்ட்டியில் கலந்து கொண்டு குடித்துக் கொண்டாட்டமாக இருந்துள்ளனராம்.இதுகுறித்து சேனல் நியூஸ் எக்ஸ் என்ற தனியார் தொலைக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் டோணியும், வீரர்கள் சிலரும் ஜாலியாக இருப்பது போல உள்ளது.அவர்களுடன் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.டோணியுடன் வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நேஹ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காணப்படுகின்றனர். குடி, கொண்டாட்டம், ஆட்டம், பாட்டமாக அந்த விருந்து நடந்தது என்கிறது அந்த செய்தி. இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் மும்பை கிரிக்கெட் வீரர் ராம்ஜி தரோத் கூறுகையில் "இந்தப் படங்கள் உண்மையானவை என்றால் அது மிகவும் சோகமானது. ஒரு கேப்டனுக்கு இப்படிப்பட்ட புகைப்படங்கள் நல்ல பெயரை வாங்கித் தராது" என்றார் அவர்.

இன்னொரு உதாரணம் , இங்கிலாந்து அணியின் பிளின்டாப். நன்றாக ஆடிகொண்டிருந்த அவர் திடிரென்று சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். அதேசமயம் தனது ஐ. பி. எல் ஒப்பந்தம் தொடரும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து கிரிக்கெட் இணையதளத்திற்கு இங்கிலாந்து முன்னாள் வீரரும் விமர்சக வர்ணனையாளருமான ஜெஃப் பாய்காட் வழங்கிய பேட்டியில்,, "ஐ.பி.எல். கிரிக்கெட்டோ, அல்லது வேறு கிளப் கிரிக்கெட்டோ பிளின்டாஃப் போன்ற வீரர்களுக்கு அதிக தொகை அளிக்க முன் வருகிறது என்றால், அது அவர் தேசிய கிரிக்கெட்டில் பெற்ற பெயரும் புகழானிலுமே தவிர வேறு காரணங்களுக்காக இல்லை, எனவே இங்கிலாந்திற்காக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற கிளப் அணிகள் அவரை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.அவர் முதலில் தன் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு அவர் விருப்பம் போல் இருந்து கொள்ளட்டும் என்பதே என் கருத்து. அவர் விருப்பம்போல் இங்கிலாந்துக்கு ஆடுவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. முதலில், எந்த ஒரு கிரிக்கெட் வீரராயிருந்தாலும் நாட்டிற்காக விளையாடவேண்டும், இதனால்தான் அவர்கள் பெயரும் புகழும் பெறுகிறார்கள்.

தற்போது பிளின்டாஃபிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 25,000 பவுண்டுகள் தொகை தர முன்வந்துள்ளது. இது தவிர ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் 6 வாரங்களுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் ஈட்டப்போகிறார், மேலும் அவர் தற்போது ஒரு கிரிக்கெட் புத்தகம் எழுதியுள்ளார். அது செய்தித் தாள்களில் தொடராக வெளிவருகிறது.இதனால் அணியில் இருப்பதற்காகவே பெரிய தொகையை அளிக்கக் கூடாது. அவரால் அணி வெற்றி பெறுகிறது என்றால் ஊக்கத்தொகை இன்ன பிற பரிசுகளை அளிக்கலாம். இது இப்படியிருந்தால்தான் நல்லது". இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப் பாய்காட்.

நியூசிலாந்து அணியின் ஜெகப் ஓரம் தான் சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், ஐ. பி. எல் போட்டிகளில் மட்டும் விளையாடப்போவதாகவும் கூறிஇருந்தார்

"பணமழை பொழியும் ஐ.பி.எல். போன்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமானது, டெஸ்ட் கிரிக்கெட்டை 5 நாள் உடல் நோக விளையாட வேண்டியத் தேவையில்லை என்று வீரர்கள் முடிவு செய்யும் காலம் தூரத்தில் இல்லை" என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்.

துடிப்பான, இளம் வீரர்களும் சர்வதே அணியில் இடம் பெற்று தங்களை, நிருபிப்பதைவிட தங்களது ஐ. பி. எல் அணியில் விளையாடுவதையே முக்கியமாக,தங்களது இலக்காக நினைக்கதொடங்கிவிட்டனர்.நமது மக்களுக்கும் தேசிய உணர்வை விட, இந்த ஐ. பி. எல் அணி உணர்வு அதிகரிக்க தொடங்கிவிட்டது.

அறிமுகம் இல்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும் , நாடு மற்றும் மாநிலம் பாகுபாடின்றி அனைவரும் விளையாடும் ஐ. பி. எல் போட்டிகள் தேவையே. அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டை காப்பாற்றவேண்டுமானால், முதலில் ஐ. பி. எல் போட்டிகளுக்கான இடைவெளியை அதிகரித்து,உலக கோப்பை போட்டிகள் போல மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தினாலே போதுமானது

கடைக்காரர் கமெண்ட்:
ஐ. பி. எல் ஆட்டமானாலும் சரி, சர்வதேச ஆட்டமானாலும் சரி.
நல்லா ஆடினாதான் துட்டுன்னு ரூல்ஸ் வேணுங்க...





பதிவு : இன்பா

Monday, November 16, 2009

புத்தகங்களோடு ஒரு பயணம் - கவிஞர் சல்மா


"எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி" - என்று படிக்கின்ற யாரையும் ஒரு கணம் அதிர வைக்கும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சல்மா. ஒரு பெண் எழுத்தாளர் இதைமட்டுமே எழுதவேண்டும் என்று இருந்த எழுதப்படாத விதிகளை கதை,கவிதை, நாவல் என எல்லா தளங்களிலுமே உடைத்து எறிந்தவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவிஞர் சல்மா.

தொண்ணூறுகளின் இறுதியில் எழுத தொடங்கிய இவர், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் ஊராட்சி தலைவியாகவும், தமிழ்நாடு சமூக நலவாரிய தலைவராகவும் இருக்கிறார். இவரது குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்,பச்சை தேவதை மற்றும் இரண்டாம் ஜாமங்களின் கதை

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு அனுபவம் குறித்தான அவரது உரை இங்கே...

இன்று வாசிப்பு என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து பார்க்கவும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. என்னளவில், வாசிப்பு வெறும் அனுபவமாக மட்டுமின்றி காலத்தோடும் வாழ்க்கையோடும் இணைந்து ஒன்றாகவே எனக்குள் பதிவாகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

வாசித்தலை பழக்கம் அல்லது ஆர்வம் அல்லது வேட்கை இப்படித் தான் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் என்னைப் பொறுத்தளவில் அது விடுதலையின் அடையாளம். மனித மனங்களில் நிகழும் பிறழ்வுகள், சிக்கல்கள், வாழ்க்கைமீதான பார்வைகள், குழப்பங்கள், கேள்விகள் இவற்றை அறிந்துகொள்ளவோ அறிந்து தெளியவோ அறிந்து கடந்து செல்லவோ வாசிப்பு உதவுகிறது.

இளமைப் பருவம் பல கனவுகளால் ஆனது. நாளைக்கு ஒன்றாக, அந்தக் கனவுகளுக்குத் தீனி போடக் கூடியதாகவும் வாசிப்பு இருந்திருக்கிறது. கல்லூரியும் பல்கலைக் கழகமும் செய்யாததை, அங்கும்கூட நாம் கற்றுக்கொள்ள இயலாத உலக வாழ்க்கையை மனித மனத்தின் போக்குகளை, புதிர்களை அறிமுகம் செய்யக்கூடியனவாகப் புத்தகங்கள் இருந்திருக்கின்றன.
வாசிப்பு வேறு படைத்தல் வேறு என என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை. வாசிப்பே படைப்பதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

எதெல்லாம் மிகச் சிறந்த படைப்புகள் என உணர்ந்தேனோ, எதெல்லாம் என்னைப் பாதித்ததோ அப்போதெல்லாம் ஏன் நானும் இதைப் போன்றதொரு படைப்பை எழுதக் கூடாதென்கிற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்துகொண்டிருந்தது. சமூகம் உருவாக்கித் தந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற வெறியும் நோயுற்ற சமூகத்தின் சலனமற்ற முகத்திரையைக் கிழித்துவிட வேண்டு மென்கிற தவிப்பும் கூடவே இருந்துகொண்டிருந்தது.

வாசிப்பு உருவாக்கிய அதிர்வுகளும் மிக முக்கியமானவை. நான் எதையெல்லாம் சரியென நம்பியிருந்தேனோ எதெல்லாம் தவறு என மதிப்பீடு வைத்திருந்தேனோ எதெல்லாம் வாழ்க்கை நியதியென பின்பற்றினேனோ அவையெல்லாவற்றையும் குலைத்துவிடும் முயற்சிகளில் சில புத்தகங்கள் இறங்கி என்னை நிலை குலையச் செய்துகொண்டிருந்தன.

எப்படிச் சிறந்த வாசிப்பைப் புத்தகங்களால் தர முடியுமோ எப்படி உன்னதமான இலக்கியங்களை அறியத் தர முடியுமோ அதைக் காட்டிலும் முக்கியமானது புத்தகங்களால் நம் நம்பிக்கைகளைக் குலைக்க முடியுமென்பது, அந்த இளம் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சி. வாசிப்பு என் பார்வைகளை மாற்றிக்கொண்டிருந்தது. குறிப்பாக ஒழுக்கம் சார்ந்த கலாச்சாரம் குறித்த பார்வைகள், பெண்கள் வீட்டுப்படி தாண்டக் கூடாது அந்நிய ஆண்களிடம் முகம் காட்டக்கூடாது என்கிற ஓரிடத்திலிருந்து கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் தொழிலாளிகளின் நியாயங்கள் குறித்தும் என்னால் யோசிக்க முடிந்ததற்கு எனது வாசிப்புதான் காரணமாக இருந்தது.


இத்தகைய சிந்தனை மாற்றங்களோடு வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையோடு போராடுவதும், முரண்பட்டுக் கசங்குவதும் அத்தனை எளிதாக இல்லை என்பதே உண்மை.

ஒரு கட்டத்தில் காலத்தைக் கடத்துவதற்கான ஒன்றாக இருந்த வாசிப்பு, பிந்தைய நாட்களில் வாழ்வின் ஆதாரமானதாக மாறிப் போயிருந்தது. வாசித்தலின் வழியே வாய்த்த மொழியும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக் கிடைத்த சிந்தனையும் சுற்றிலும் நிகழ்கிற வாழ்க்கையைப் பார்க்கும் பார்வைகளை மேலும் கூர்மையாக்கக்கூடியதாக இருந்தது.

வாசிப்பே எழுதுவதற்கான தூண்டுகோலாகவும் இருந்தது. அந்த நாட்களில் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் பெரும்பாலானவர்களில் கையாளப்படுகிற ஒரு வடிவமாகக் கவிதை இருந்தது, இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.
மொழியைத் தன்னளவில் புதுப் பிக்கும் ஆற்றல் கொண்டதான கவிதை வடிவம் இயல்பாகக் கைகூடிற்று. புற உலகின் அனுபவங்களையும் நுட்பமான உணர்வுகளையும் என் கவிதைகளுக்குள்ளாகக் கொண்டுவருவது எளிதாகக் கைகூடிற்று.

தமிழில் 80கள்வரை அழகியல் சார்ந்து படைக்கப்பட்டுக்கொண்டிருந்த நவீன கவிதை பிறகு தனிமனித வாழ்வியல், உளவியல், சமூகம் சார்ந்த கவிதைகளாகத் தன் மொழியில் மர்மம் பூணத் துவங்கிற்று. 90களுக்குப் பிறகு எழுத வந்த பெண்களின் எண்ணிக்கையும் மொழியின் வெளிப்பாடும் முக்கியமானது. அத்தகைய தனித்துவமான கவிதைகளைத் துவக்கிவைத்தவையாக என் கவிதைகளே இருந்தன.

புற மற்றும் அக உலகத்தில் தான் வகிக்கும் நிலைகளை உணர்வுபூர்வ மான, வெளிப்படையான மொழியில் பதிவுசெய்யத் தொடங்கினேன். ஆணின் மதிப்பீடுகளாலான, மொழியை மறுத்து பெண் உடலின் அரசியலை கவிதைகளின் கருப் பொருளாக்கினேன். பெண் இருப்பு, ஒடுக்கப்பட்ட அவளது உடல், உணர்வுகள் அனைத்தும் பகிரங்க மாக்கப்பட்ட நிலை உருவாக என் படைப்புகள் வழிவகுத்தன. தொடர்ந்து இப்படிப்பட்ட கவிதைகளின் வழியே நவீன இலக்கிய உலகில் பெண்களின் படைப்புகள் மீதான கவனத்தைத் திருப்ப முடிந்தது.

தமது உடல் சார்ந்த மதிப்பீடுகளைப் பரிசீலித்த தமது உடலைக் கொண்டாடத் தொடங்கிய பெண்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன. அது உங்களுக்கும் கூடத் தெரியுமென நினைக்கிறேன்.

கடும் விமர்சனங்கள், சமூக எதிர்ப்புகளுக்கிடையே நாவலுக்கான திட்டமிடலைத் தொடங்கினேன். தேர்வு செய்த களம் என் சமூகமும் அதன் வாழ்க்கை முறையும், குறிப்பாக பெண்களின் உலகம். அதற்கான முன் தயாரிப்புக்கு வைக்கம் முகமது பஷீர், சுந்தர ராமசாமி ஆகியோரது நாவல்களும் உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அப்படைப்புலகம், மற்றும் சித்தரிப்புகள் அவற்றை வாசித்தலின் வழியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக முக்கியமானவை. ஒரு படைப்பாளியாக இன்றைக்கு உருவாவதற்கு சுதந்திரமானதொரு நபராக உணர்வதற்கு, அர்த்தமுள்ளதாக ஒரு வாழ்வை நான் வாழ்வதாகத் திருப்தி கொள்வதற்கு வாசிப்புதான் காரணமாக இருந்திருக்கிறது. நாவலின் கருவை யோசிக்கும்போதே, அது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் விதம் குறித்தும் ஒரு தெளிவு இருக்கவே செய்தது.

பஷீரின் நாவல்கள்தாம் எனக்கும் என் கதைக்களனை உருவாக்கித் தந்தது. எதையெல்லாம் எழுத முடியும் எப்படி எழுத முடியும், ஏன் எழுத வேண்டும் என்கிற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவரது படைப்புகள் பதில் தந்தன.

பஷீர் தனது படைப்புகளில் கற்பனை சார்ந்த நிஜத்திற்கும் சுய வாழ்க்கை சார்ந்த நிஜத்திற்குமான இடைவெளியை அழித்துவிடுவார் என்று சுந்தர ராமசாமி சொல்வார். இப்படித் தான் என் படைப்புலகம் உருவாக பஷீரின் படைப்புகள் உறுதுணையாக இருந்தன. நான் எதை எழுத வேண்டுமென விரும்புகிறேனோ அதை எழுதுவதற்கான நியாயங்களை உருவாக்கித் தந்தன. அவரது படைப்புகள், ஒரே வித்தியாசம் அவர் ஆண். நாம் எப்போதுமே நமக்கான நியாயங்களை நாமே கற்பனை செய்துகொள்கிறோம்.

நம் வசதிக்கேற்ப, அது வாழ்க்கைக்கு எப்படி சரிவராதோ, அப்படித்தான் படைப்புகளுக்கும். நாம் உருவாக்கும் கணித முறைகள் போல எனது நாவலுக்குள் நான் கவனித்த என் சமூக நிலைகள் அத்தனையையும் கேள்விக்குட்படுத்தினேன். விமர்சித்தேன். ஒரு படைப்பாளியாக எனது பங்களிப்பு அது. அதற்கான விமர்சனங்களை, எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் எனக்கு ஒரு மனநிறைவு. நான் என் படைப்பில் சமரசங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை, ஒரு படைப்பாளிக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தரக்கூடியது இதுதான்.


வாசிப்பு நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லக்கூடியதாகவும் மனித மனத்தின் கூறுகளைப் பக்குவப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.
நாம் எதை எதையோ விடுதலை என மதிப்பீடு செய்கிறோம். அது அவரவரது மனநிலை சார்ந்தது என்றாலும், என்னளவில் வாசித்தல் மட்டுமே விடுதலையின் அடையாளம். கால ஓட்டத்தில் பின்தங்கி விடாதிருக்க வாசிப்புதான் உதவுகிறது. வாசிக்காத ஒருநாள் வாழாத ஒரு நாளாக மனத்தில் கனக்கிறது.

புத்தகங்களும் மனதும் முடிவற்றவையாக நீண்டுகொண்டிருந்தன என்று போர்ஹே எழுதுவார். நமக்கு முன்பாகப் புத்தகங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன, முடிவேயில்லாதபடி.

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்.

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை.


( கவிஞர் சல்மா எழுதிய "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைதொகுப்பில் இருந்து,நன்றி : காலச்சுவடு).






பதிவு : இன்பா

Friday, November 13, 2009

தலாய்லாமாவின் பயணம் ஏன்?




"சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை" என்று சீனா ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்கள் பதில் அளித்ததாக நாடாளுமன்ற குறிப்பில் பதிவாகி இருக்கிறது.

அந்த அலட்சியமே இன்றுவரை தொடரும் இந்தியா - சீனா உறவு சிக்கல்களுக்கு ஒரு முக்கிய காரணம். 1962 ஆம் வருடம் நடந்த யுத்தத்தில் இந்தியா தோற்று, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, "சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது' என்று விரக்தியை வெளிப்படுத்தினார். ஆனால்,எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்க்காரம் என்று ஆகிவிட்டது.

சீன அரசாங்கம், திபெத், சீனாவின் ஒரு அங்கம் என குறிப்பிட்டு வருகிறது. ஆனால் திபெத் 1950களிற்கு முன்னர், தனி நாடாகவே இருந்ததாக திபெத்திய வரலாறு கூறுகிறது. பின்னர் 1950களில் திபெத், சீனா வசமானது. அன்றிலிருந்து இன்று வரை திபெத், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

1950 ஆம் வருடம், திபெத் நாட்டை விட்டு வெளியேறிய தலாய் லாமா ஒரு அறிக்கையில் இவ்வாறுதெரிவித்தார்.

"புத்த மதம், மத நல்லிணக்கத்தையும், மனித நல்லிணக்கத்தையும் தான் வலியுறுத்துகிறது. இவை இந்திய பண்பாடு, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவை, உலகிற்கு இந்தியா அளித்த பாடம்.திபெத்தில் ஜனநாயகம் மலர வேண்டும். திபெத் முன்னேறி, நவீன நகரமாக மாற வேண்டும். நாங்கள் விடுதலை கேட்கவில்லை. தன்னாட்சி தான் தேவை.

திபெத்தில் எப்போது தன்னாட்சி ஏற்படுகிறதோ, அப்போதே என் பதவி, இயக்கத்தை திருப்பித்தர தயாராக இருக்கிறேன்.திபெத் தன்னாட்சி போராட்டத்தில் அதிக பொறுப்பு, திபெத்தில் உள்ள மக்களுக்கே உள்ளது. அவர்கள் உள்ளே இருந்து பாடுபட வேண்டும். ராணுவத்தின் மூலம் திபெத் போராட்டத்தை அடக்க சீனா முயற்சிக்கிறது. ராணுவ பலத்தின் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.சீன அரசு உண்மை நிலையை உணர்ந்து, திபெத்திற்கு தன்னாட்சி வழங்க வேண்டும். இளைய தலைமுறையினரிடமும், சீன அறிஞர்களிடமும் திபெத் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், திபெத்திற்கு விரைவில் தன்னாட்சி கிடைக்கும்".

அருணாசலப் பிரதேசம் குறித்து சீனா சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில் அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அருணாசலப் பிரதேசத்தின் தவாங்குக்கு வந்த தலாய் லாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு.

1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த போரில் தவாங்கை சீனா கைப்பற்றியது.போர் நடந்து கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்து அங்கிருந்து தனது துருப்புகளையும் சீனா வாபஸ் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் தவாங்கை தனது பகுதி என்று சீனா உரிமை கொண்டாடுவது வியப்பளிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மீது சீனா எப்போதுமே ஒரே நிலைப்பாட்டைக் கொண்டதில்லை. அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் (செய்தியாளர்கள்) அறிவீர்கள்.

தவாங்குக்கான எனது வருகையில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. நான் எங்கு சென்றாலும் மனித நேயமாண் யும், சர்வதேச சகோதரத்துவத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். இதை வலியுறுத்தவே தற்போது தவாங்குக்கும் வந்துள்ளேன். தவாங்கில் இன்று நான் இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது நான் தவாங் வழியாக இந்தியாவில் தஞ்சமடைந்தது இன்றும் என்னுள் மலரும் நினைவுகளாய் மலர்கிறது" என்றார்.

பன்னாட்டு உறவுகளுக்கான சீன ஆய்வகத்தில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர் ஹூ சிஷேங் என்பவர் குளோபல் டைம்ஸ் என்ற நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது நிலவிவரும் சிக்கலான சூழலில் தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தால் இத்தனை ஆண்டுகளாக தனக்கு அடைக்கலம் தந்துள்ள நாட்டை தலாய் லாமா மகிழ்விக்கலாம். தலாய் லாமாவின் பயணமும் அவருடைய நடவடிக்கைகளும் சீனத்திற்கு எதிரான உணர்வை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தலாம்? என்று கூறியுள்ளார்.

"சீனத்தைத் தொடர்ந்து கோபமூட்டியதால் 1962இல் ஏற்பட்ட இராணுவ மோதலில் கற்றப் பாடத்தை இந்தியா மறந்திருக்கலாம், இந்தியா இப்போதும் அதே தவறான பாதையில்தான் சென்றுக் கொண்டிருக்கிறது" என்று பீபிள்ஸ் டெய்லி இணையத் தளம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும், சீனா உருவாக்கி இருக்கும் "ஆபரேஷன் முத்துமாலை'த் திட்டம்", எப்போது வேண்டுமானாலும், இந்தியாவுக்கு எதிரான ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்படும் என்கிறது ஒரு செய்தி.

மும்பை ஹோட்டல்கள் தாக்கப்பட்டபோது, அங்கு நமது ராணுவம் வருவதற்கு தாமதமான போது, சொல்லப்பட்ட காரணம் விமானங்கள் தயார் நிலையில் இல்லை என்பதே.

ஒரு பக்கம் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு தீவிரவாதிகள், இன்னொரு பக்கம் நக்ஸல் விவகாரம் என்று ஏற்கனவே தடுமாறும் நமது ராணுவம் , பெரும் ராணுவ சக்தியான பெரும் ராணுவ சக்தியான சீனாவை எப்படி எதிர்கொள்ளும்??

இன்று வரையில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை நம்மால் மீட்க முடியவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவற்றை காண சீனா அரசின் அனுமதி வாங்கவேண்டிய சூழ்நிலையில் நமது அரசு இருக்கிறது.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஏற்கனவே இந்திய - சீன உறவில் விரிசல் இருப்பது தெரிந்தே அங்கு தலாய்லாமா பயணம், அதுவும் ஆறு வருடங்களுக்கு பின்னர் என்ன அவசியம் இப்போது என்று புரியவில்லை?
ஒரு மத, அரசியல் தலைவர் என்ற முறையில் அவருக்கு இது தெரியாமல் போனது ஏன்?

இந்திய , சீன வல்லரசுகளின் மோதலில், திபெத்தை மீட்டுவிடலாம் என்று கருதும் தலாய்லாமா, ஆசியாவின் அமைதிக்காக, இந்திய-சீன நாடுகளின் போர் பதட்டத்தை தவிர்க்க, தாமாகவே முன்வந்து இந்தியாவை விட்டு வெளியேறி, ஐ.நா சபையை அணுகவேண்டும். இதுவே மூன்று நாடுகளுக்கும் நல்லது.

கடைக்காரர் கமெண்ட்:
ஸ்ரீலங்காவுல தனி ஈழம் உருவாவறத்தை தடுத்த நம்ம மத்திய அரசு, சீனாவுல தனி திபெத் வர்றதை மட்டும் ஆதரிக்கறது ஏங்க?










பதிவு : இன்பா

Thursday, November 12, 2009

I.D. இழந்த I.T. ஊழியர்கள்


அது புனே நகருக்கு சற்றுதள்ளி இருக்கும் ஒரு ஆசிரமம். ஒரு மலைஅடிவாரத்தில், ஒரு பெரும் நிலப்பரப்பை அழகான நந்தவனம்போல உருவாக்கிஇருந்தார்கள். ஆங்கங்கே சிறு, சிறு மண்டபங்கள் மொசைக் தரையுடன். தியானம் செய்வத்தற்கு ஏற்றாற்போல்.

சுமார் பத்து இளைஞர்கள் ஒரு புல்தரையில் வட்டமாக அமர்ந்துஇருக்க(நானும்தான்), நடுவே அமர்ந்துஇருந்த ஆசிரமத்தை சேர்ந்த,சுடிதார் அணிந்து இருந்த ஒரு பெண்மணி படுசரளமான ஆங்கிலத்தில் இப்படி பேசினார்.

"நம் சுவாமிகள் நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து வந்தார். ஆறு மாதம் இந்தியாவிலும், ஆறு மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிலும் இருப்பார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இமயமலையில் இருந்து இருக்கிறார். அதன்பிறகு, உருவாக்கியதுதான் இந்த ஆசிரமம் " என்றார் பக்தி பரவசத்துடன் அவர்.

"சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி உங்கள் மனதை பக்குவப்படுத்தும். மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும். ஒரு மழைநேரத்தில், சூடான டீ குடிப்பது போன்ற தியான பயிற்சி இது " என்று எப்படி சொன்னால் இளைஞர்களுக்கு புரியுமோ,பிடிக்குமோ அந்த மொழியில் தொடர்ந்தார் அவர்.

"இந்த பயிற்சி முகாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதுவும், உங்களுக்கு ஏற்றார்போல வார இறுதி நாட்கள் மட்டும் " என்று முடித்த அவர்."உங்களுக்கு வேறு எதாவது கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.

நாங்கள் சில கேள்விகளை கேட்டோம்.
'மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும்' இந்த வாக்கியம் எங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
"சுவாமிகளை இன்று நேரடியாக சந்திக்க முடியுமா "

" நீங்கள் முதலில் இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும், பயிற்சி முடிந்ததும் அதன் இரண்டாம் கட்டமாக தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் இருக்கிறது. சுவாமிகளே உங்களுக்கு ஆசி வழங்கி, தீட்ச்சை தருவார்"

"இந்த பயிற்சி எத்தனை கட்டங்கள். ஆசிரமத்திற்கு தொடர்ந்து வர இயலுமா"

"ஸி. இது வேலைநெருக்கடியில் சிக்கிதவிக்கும் உங்களை போன்ற இளைஞர்களுக்காகவே உருவாக்கபட்ட சிறப்பு தியானமுறை. தீட்ச்சை எடுத்து கொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இங்கு வரலாம். நீங்கள் விரும்பும்வரை தங்கவும் செய்யலாம். இங்கு நல்ல வசதிகளுடன் உள்ள ரூம்கள் உள்ளன.அங்கே பாருங்கள். அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள்.இங்கு கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்து, தியானத்தில் ஈடுபடுகிறார்கள்"

அவர் சுட்டிகாட்டியதை கண்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்களை பார்த்துகொண்டிருந்த அந்த அமெரிக்க தம்பதிகள் எங்களை நோக்கி புன்னகையுடன் கைஅசைத்தார்கள்.

"இந்த வாரமே நாங்கள் உங்கள் பயிற்சி முகாமுக்கு வருகிறோம்"

"நல்லது. இத்தைகைய நல்ல விஷயங்கள் எளிதில் பிறருக்கு கிடைத்துவிடாது. சுவாமிகள் இங்கு இருக்கும்போது, இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்"

"உங்கள் பெயர்களை ஆபீஸ் ரூமில் பதிவு செய்யவேண்டும். இரண்டு நாள் தியான முகாமுக்கு கட்டணம் வெறும் 5000. சுவாமிகள் தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணவிரும்புவர்களுக்கு தனியாக 2000 கட்டவேண்டும் ".

நான், மற்றும் ஒரு நண்பரை தவிர மற்ற அனைவரும் பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டு, இரண்டு நாளும் 'சூப்பர் மீல்ஸ் மேன்' என்று சொன்னார்கள்.

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...அவர்கள் அனைவரும் ஐ. டி நிறுவன ஊழியர்கள் என்பதுதான்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆசிரமங்களுக்கும், யோகா போன்ற சென்டர்களுக்கும் வருமானத்தை தரும் கஸ்டமர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஐ. டி. நிறுவன ஊழியர்களே.

இடம் : பாண்டிச்சேரி. ஏ.சி வழியும் நட்சத்திர பார். நானும், செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பனும்.
விஸ்கியை உறிஞ்சியபடி அவன் சொன்னான்." நான் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்."

"ஏன் இப்படி டிசைட் பண்ணிட்டே. வேற ஒரு நல்ல வேலை கிடைசிடிச்சா".

"இல்லைடா. கைல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு. கும்பகோணத்துல சொந்தமா ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கபோறேன்".

வேலையை விடுவதற்கு அவன் சொன்ன காரணம், "பத்து பேரு பார்த்துக்கொண்டு இருந்த எங்க ப்ரோஜெச்ட்டுல இப்போ அஞ்சு பேரு மட்டும் பார்த்துகிட்டு இருக்கோம்.நைட் 12 மணிக்குதான் வீட்டுக்கு வரோம். காலையில 7 மணிக்கு திரும்பவும் வேலைக்கு வரச்சொல்றாங்க".

மேலும் தொடர்ந்த அவன்,"மூணு மாசமா நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியல. ரொம்ப டென்ஷன் டா. போன மாசம் ஒரு தடவை மட்டும் டிஸ்கோதே போன்னேன். அந்த .....(நடிகையை) பார்த்தேன். உன்னை போல் ஒருவன் இன்னும் பாக்கல. படம் எப்படி" என்றான்.

இது போன்ற, வேலை பிரச்சினைகளையும் தாண்டி, ஐ.டி ஊழியர்கள் சந்திக்கும் ஒரு ஜீவ,மரண போராட்டம்.....வேலை நிரந்தரமின்மை.சத்யம் நிறுவனம் 6400 பேருக்கு ஒரே நாளில் 'கல்தா' கொடுத்தது உங்களுக்கு தெரிந்ததே.

இன்னொரு சம்பவம்...அவ்வாறு வேலை இழந்த ஒரு நண்பருக்கு சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில்இருந்து 'இன்டர்வியு' அழைப்பு வந்தது. சுமார் இரண்டு மணிநேரம் பயணித்து, கிட்டத்தட்ட ஆறு மணிநேரங்கள் காத்திருந்தவருக்கு கடைசியாக கிடைத்த பதில் "உங்கள் 'இன்டர்வியு' தள்ளிவைக்க பட்டுவிட்டது. பிறகு தகவல் சொல்கிறோம்" என்பதுதான்.

இங்கே, இந்தியாவில் நிலை இப்படி போக, சென்ற வருடம் யு.எஸ். சென்ற என் இன்னொரு நண்பன் 'சாட்டில்' வந்தான்.அவன் சொன்னது " h1b விசாவுல இங்க செட்டில் ஆகலாம்ன்னு வந்தேன். ஆனா, இன்னும் நிரந்தர வேலை கிடைக்கல. இங்கே எல்லார் நிலையும் அதுதான். இந்தியாவுல வந்துதான் வேலை தேடனும்".

அமெரிக்காவில் வேலைஇல்லா திண்டாட்டம் கடந்த 6 மாதத்தில் கடுமையாக தலைவிரித்தாட துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக எழும்பி வந்த பொருளாதார நிலையில் , வேலை இழப்பு, வேலையின்மை காரணமாக மீண்டும் பெரும் பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆ‌ரோக்‌கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது.

பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது.

இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப் பட்டுள்ளது

எல்லாரும் நினைத்து கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன், பகட்டான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை.

கூலி தொழிலாளியோ, பாரத பிரதமரோ....அவரவர் தொழில்களுக்கு உரிய பிரச்சினைகளுடனும், போராட்டங்களுடன்னும்தான் மனிதர்கள் எல்லாரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

கடைக்காரர் கமெண்ட்:
வயல்ல வேலை செய்யறவன் உடலாலே உழைக்கிறான். கம்ப்யூட்டர்ல வேலை செய்யறவன் மூளையால உழைக்கிறான். ஆனா, விவசாயிக்கு கிடைக்குற மனநிம்மதியில கால்வாசி கூட கம்ப்யூட்டர்காரங்களுக்கு கிடைக்கிறது இல்லை








பதிவு : இன்பா

Tuesday, November 10, 2009

தங்கத்தோடு மோதும் பூக்கள்


"வியாபாரிகளே...வியாபாரிகளே. ரோஜாக்களை விற்று வேறு என்ன வங்கிவிடப்போகிறீர்கள் அதை விட பெரியதாய்" என்கிறது ஒரு பாரசிக கவிதை.

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்

- கவிஞர் வைரமுத்து.

பக்தி,காதல் ஆகியவற்றை சொல்வதற்கு பூக்களை விட வேறு எதுவும் சிறந்தது உலகத்திலேயே இல்லை.ஆனால், இன்று கூந்தல் நிறைய பூக்கள் சூடும் பெண்களை ஏனோ பார்க்கமுடிவதில்லை?

தங்கத்தின் விலை போலவே, பூக்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டு வருகிறது. சமிபகாலமாக பெய்துவரும் தொடர்மழையை ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும், வாசம் தூக்கும் மல்லிகையும்தான். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நிலக்கோட்டை, திருமங்கலம், நத்தம் மற்றும் மேலூர் பகுதிகளில் மல்லிகை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக, மார்ச்சில் துவங்கி ஜூன் வரை மல்லிகை பூத்துக் குலுங்கும்.

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மல்லிகையை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மற்றும் வில்லாபுரம் பூ மார்க்கெட் கமிஷன் ஏஜெண்டுகள் வாங்கி விற்கின்றனர். மதுரை மல்லிகை, உதிரி பூவாக அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில், மல்லிகை கிலோ ரூ.25க்கு விற்கப்படும். ,ஆனால் மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்கள் தமிழகம், கர்நாடகா மற்றும் மும்பை வரை நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பத்து டன் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. கிலோ ஒன்று 350 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ கடந்த இரண்டு நாட்களாக கிலோ 23 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்மழை பெய்து வருவதால் மல்லிகை பூ பறிக்க முடியாமல் வயல்வெளியிலேயே உதிர்ந்துபோகிறது.

சத்தியமங்கலம் பகுதியில் செண்டுமல்லி பூக்களும் அதிகம் பயிரிட்டுள்ளனர். கனகாம்பரம், சம்பங்கி ஆகிய பூக்கள் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பூக்கள் பறிக்க வயலுக்குள் இறங்க முடிவதில்லை. இதன் காரணமாக வயல்களிலேயே பூக்கள் அழுகிவிடுகிறது. பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் மூன்று நாட்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூக்கள் அழுகி நாசமாகியுள்ளதாக பூ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் தெரிவித்தார்

"மல்லிகை விளைநிலங்கள் எல்லாம் வீடு கட்டும் இடங்களாக மாறி வருகின்றன. மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 30 டன் மல்லிகை வரும். தற்போது அது 10 முதல் 20 டன்னாக குறைந்து விட்டது. மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. முகூர்த்த சீசன் என்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கிலோ ரூ600 ஆக இருந்து கிலோ ரூ.1000 ஆக உயர்ந்தது. இதற்கு முன், 2000 மற்றும் 2006ம் ஆண்டில் இதே போல் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது" என்கிறார் மதுரை மாவட்ட பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் .

பூக்கள் மூகூர்த்த காலங்களில் மட்டும் அல்ல, சுவாமிக்கு அர்ச்சினை செய்யும் பூக்கள் ஒவவொன்றும் ஒரு குணத்தை கொண்டிருக்கின்றன.

தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.
ரோஜா -சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.

அருகம்புல் -கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.

எருக்கம் பூ -பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.

செம்பருத்தி, அரளி -தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.

முல்லை, மல்லிகை -புனிதத்தன்மை தரும்.

துளசிப்பூவும் இலையும் -பக்தி தரும்.

மருக்கொழுந்து -வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.

பவளமல்லி -சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.

நந்தியாவட்டம் -பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட பூக்களை சாமானிய மக்கள் வாங்கமுடியாத விலை சொல்கிறார்கள் பூ வியாபாரிகள்.

ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் பூக்களின் விளைச்சல் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பூக்களை நம்பி உள்ள விவசாயிகளின், ஏழை வியாபாரிகளின் நிலை மோசமடைந்துவருவதாகவும் தெரிவிக்கிறார்கள். பூக்களின் விலைஏற்றத்திற்கு நமது வேளாண் முறைகளும் ஒரு காரணமாக தெரிகிறது.


கடைக்காரர் கமெண்ட்:
அட போங்கப்பா...காய்கறி,பருப்பு விலையையே கண்டுக்காத நம்ம அரசியல்வாதிங்க பூவோட விலையையா கண்டுக்கபோறாங்க? பேசாம நம்ம கடையில பிளாஸ்டிக் பூவையெல்லாம் சரக்கோட சரக்கா போடலாம்ன்னு பாக்குறேன்..










பதிவு : இன்பா

Monday, November 9, 2009

வந்தே மாதரமா? வேத மந்திரமா?


உத்தரபிரதேசம் மாநிலம் தியோபந்த் நகரில் “ஜமாத் இ உலமா ஹிந்த்” என்ற அமைப்பின் சார்பில் தேசிய முஸ்லிம்கள் மாநாடு நடந்தபோது, இதில் 10 ஆயிரம் முஸ்லிம் மத தலைவர்கள் பல்வேறு துறை பிரதிநிதிகள் மற்றும் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் தேச பக்தி பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலில் ஒரு சில வரிகள் இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த பாடலை முஸ்லிம்கள் பாடவேண்டாம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. மாநாட்டில் பேசிய பலரும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள். இதில் கலந்து கொண்ட மேல்- சபை எம்.பி. மெகமூத் பதானியும் எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.

அடுத்ததாக வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம் மத முறைப்படி தடைவிதிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

"இந்தியாவில் மறுபடியும் வந்தே மாதரம் பாடல் பிரச்னை வந்துவிட்டது. வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் பிரிவினைவாதிகள். நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள்" என்று அறிக்கைவிடுத்தார் இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம. கோபாலன்.

முஸ்லிம்கள் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காரணங்கள்,

ஒன்று, இந்த பாடல் நாட்டை இறைவனாக்கி வணங்கசொல்கிறது. இஸ்லாமில் இறைவனை தவிர, வேறு எதையும், பெற்ற தயையும் வணங்குவது தவறு.

இரண்டு, இந்த பாடல் நமது நாட்டை துர்கா தேவியாக உருவகப்படுத்துகிறது.

1882 ஆம் வருடம், பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஆனந்த்மத் என்ற நாவலில் எழுதப்பட்டது "வந்தே மாதரம்" பாடல்.

இந்த நாவலின் கருவே, சில முஸ்லிம் அறிஞர்களின் எதிர்ப்புக்கு உள்ளது. காரணம், அது 18 ஆம் நூற்றாண்டில் நடந்த பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான இந்து மத சந்நியாசிகளின் போராட்டத்தை பேசுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பாகவே, 1923 ஆம் வருடம் இந்த பாடலை ஒரு பொதுவான,தேசிய பாடலாக ஏற்றுகொள்ள முஸ்லிம் மக்கள் மறுத்துஉள்ளனர். 1937 ஆம் வருடம், இந்திய தேசிய காங்கிரஸ் முதல் இரண்டு "மா துர்கா" என்று இல்லாத சரணங்களை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்கள் சார்பில் ஒப்புதல் பெற்றது.

இந்த பாடலை இரண்டு முறை, வெவ்வேறு நடையில் மகாகவி பாரதியார் அவர்கள்,தமிழில் மொழி பெயர்த்துஇருக்கிறார். (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

முதலாம் மொழிபெயர்ப்பு
(இதில் மக்கள் தொகையை முப்பது கோடி என்கிறார் பாரதி).


இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!


முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
(வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!
(வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே!
(வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ!
(வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி!
(வந்தே)

புதிய(இரண்டாம்) மொழிபெயர்ப்பு

(இதில் மக்கள் தொகையை கோடி,கோடி என்று திருத்தம் செய்துஇருக்கிறார் பாரதி அவர்கள்).


நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.
(வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ; உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே.
(வந்தே)


பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
(வந்தே)

திருநிறைந்தனை, தன்னிகரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) .

தேசபக்திப் பாடலான வந்தேமாதரத்துக்கு, இஸ்லாமிய மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட, "பத்வா' குறித்து, இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர் ('பத்வா' - இஸ்லாமிய சட்டங்கள்).

பத்வா குறித்து தங்கள் நிலைப் பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித் துள்ளனர். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டக் குழுவின் தலைவர் மவுலானா கல்பே சாதிக், அனைத்திந்திய ஷியா தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் மிர்ஜா முகமது அத்தர், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் ஷாயிஸ்தா அம்பேர் ஆகியோர் கூறியிருப்பதாவது:

"முஸ்லிம்கள் தாய் நாட்டை நேசிக்கின்றனர். வந்தே மாதரம் பாடலை மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஏற்றுக் கொண்டார். அதனால் அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். சம்ஸ்கிருத, இந்தி, உருது அறிஞர்கள் கூடி, "வந்தே' எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் கூற வேண்டும்.அச்சொல், "மரியாதை' என்ற பொருளில் கையாளப்பட்டிருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். "வழிபாடு' என்ற பொருளில் இருந்தால் அந்தப் பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது" இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் இந்தியில் இந்த பாடலை ஒரு ஆல்பமாக உருவாக்கி பெருமை சேர்த்தவர் ஆஸ்கார் தமிழர் ஏ.ஆர்.ரகுமான்.

2003 ஆம் வருடம் BBC நடத்திய கருத்துகணிப்பில், உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக அறிவிக்கபட்டது "வந்தே மாதரம்" .


கடைக்காரர் கமெண்ட்:
வந்தே மாதரத்தை ஒரு மதத்தோட பாடலா பாக்காதிங்க அய்யா..அது...நாட்டை பத்தி நம்ம இதயத்திலேந்து வர்ற..மனசார பாடற ஒரு பாட்டு. அவ்வளவுதான்...








பதிவு : இன்பா

Sunday, November 8, 2009

கிராம கோயில்களும்,தலித்துக்களின் போராட்டங்களும்



கோயில் என்னும் வெளி சார்ந்த தலித்துகளின் போராட்டங்கள் நெடுங்காலத்தவை. தொடர் போராட்டங்களால் சில வெற்றிகளையும் பல சமயங்களில் தோல்விகளையும் கண்டுள்ளனர். பெரும்பாலான சாதி மோதல்கள் கோயில் தொடர்பாகவே இருந்துள்ளன.

கோயிலைச் சார்ந்து ஏற்படும் போராட்டம் பிறஉரிமைகளைக் கோரியும் நீண்டுள்ளன. கண்டதேவி, உத்தபுரம், கந்தம்பட்டி, பாப்பாபட்டி போன்றவை நாமறிந்த சமகாலத்திய போராட்டங்கள்.

பொதுவாகவே தலித்துகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 85 ஊராட்சிகளைச் சார்ந்துள்ள கோயில்களில் கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ள எவிடன்ஸ் என்னும் அரசு சாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.

பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம். அறிவியல் பூர்வமான துல்லியத்தையும் கடந்தது சாதியின் நுட்பம் என்னும் வகையில் மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டியதாகவே யதார்த்தம் இருக்கும்.

வைதிகப் பண்புகளற்ற சிறுதெய்வக் கோயில்களை மையப்படுத்தி கிராமத்தின் ஆதிக்கச் சாதியினரால் ஏவப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டு அரசியல் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இந்த அனுபவம் தலித் இயக்கங்களின் புரிதலில், செயல்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைக் கோருகிறதா?

நவீனக் கல்வியும் நகர்ப்புறப் பொருளாதாரமும் தலித்துகளின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தலித் சமூகம் அடைந்துள்ள விழிப்பு நிலையும் தனி அடையாளத்துக்கான அவர்களுடைய தொடர் போராட்டங்களும் ஆதிக்கச் சாதியினருக்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இந்தப் பதற்றமே பெருகிவரும் வன்முறைகளுக்குக் காரணம். கிராமப்புறச் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றுள்ள ஆதிக்கச் சாதியினர் அரசியல்ரீதியில் நிறுவிக் கொண்டுள்ள மேலாதிக்கத்தின் மூலம் தலித்துகளின் மீதான தொடர் வன்முறைகளைச் சட்டப் பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்

ஏற்கனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகளைப் பண்பாட்டுரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர். தொடர்ந்த வன்முறைகளின் மூலம் தமது பண்பாட்டு உரிமைக்காகப் போராடும் தலித்துகளை அச்சுறுத்தித் தமது சாதிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ, வைணவக் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின் மேல் தம் அரசியல் மேலாண்மையை நிறுவிக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதி அரசியல்சக்திகள் கிராமப்புற கோயில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் தலித்துகளுக்கு எதிரான பிராமணரல்லாத ஆதிக்கச்சாதியினரின் வன்முறை குறித்தும் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருகின்றனர். தமிழ் நாளேடுகள் தலித்துகளின் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை. தவிர்க்க முடியாமல் வெளியிடும்பொழுது அவற்றின் சாதியப் பின்புலத்தைத் தந்திரமாக மறைத்தும் திரித்தும் வெளியிடுகின்றன.

கடந்த காலங்களில் பார்ப்பன மேலாதிக்கத்திற்கெதிராகப் போராடிய சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளின் மீதான சாதி இந்துக்களின் வன்முறைக்கெதிராக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தலித் இயக்கங்கள் மைய நீரோட்ட அரசியலின் பகுதிகளாக மாறிவரும் சூழலில் கிராமப்புற ஆதிக்கச் சாதியினரின் இத்தகைய வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களில் சமரசங்களற்ற நிலைபாடுகள் எடுக்கமுடியாத நிர்ப்பந்தம் உருவாகும் அபாயமுள்ளது.

வைதிகத்திற்கெதிராகச் சிறுதெய்வ வழிபாட்டை அடையாளப்படுத்திய தமிழ் அறிவுத் துறையினர் அதன் சாதிய அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. சாதியம் இந்தியத் தன்மை கொண்டது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அது வட்டாரரீதியில் வெவ்வேறு பண்புக்கூறுகளால் பிளவுபட்டிருக்கிறது என்பதும். ஒவ்வொரு இடத்திற்கும் காலத்திற்கும் சாதிகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப அதன் சமன்பாடுகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அதனதன் சமன்பாடுகளுக்கேற்ப சுயேச்சையான வழிபாட்டு முறைகள், சடங்குகள், தீட்டுக் கோட்பாடுகள் இருக்கின்றன. மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் வைதிக மயப்பட்ட பெருங்கோயில்களோ சமஸ்கிருதமயப்பட்ட வழிபாட்டு முறையோ இல்லை.

பிராமணியம் சிறுதெய்வ வழிபாடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் கருத்து முழுக்க ஏற்கத்தக்கதல்ல. பிராமணியம் இவற்றைத் தன்னுடைய பகுதியாக்கி வருகிறது. அதற்குச் சாதகமான சாதி உள்ளிட்ட கூறுகள் சிறுதெய்வ மரபில் இருக்கின்றன. சுயாட்சிமிக்க வட்டாரத் தன்மைகள்தான் இந்துயிசத்தின் ஆதாரம். வட்டாரரீதியிலான அடையாளங்களைக் காப்பாற்றிக் கொண்டு இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள முடியாது. வட்டாரரீதியிலான அடையாளங்களைக் குறித்த கவலை என்பது அடிப்படையில் சாதியைக் குறித்த அதைப் பாதுகாப்பது குறித்த கவலையே.

தன்னுடைய காலனிகளில் மத நடைமுறைகளுக்குள் தலையிட்ட பிரிட்டீஷார் இந்தியாவில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். கொள்கை வைதிக நம்பிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுதெய்வ மரபுக்கும் பொருந்தியிருந்தது.

1852இல் மத நடைமுறைகளிலுள்ள மூர்க்கத்தனமான வழிபாட்டு முறைகளைக் கைவிட வேண்டுமெனக் கூறிய பிரிட்டீஷாரின் அறிக்கை, 1854இல் அதில் சில மாற்றங்களை வலியுறுத்தியதோடு நின்றுவிட்டது. கிராமப்புற ஆன்மிக நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட சலுகை சாதியத்தின் தீமையை மறைப்பதற்கே பயன்பட்டது. சிறுதெய்வ வழிபாடுகளில் கடைபிடிக்கப்படும் சாதியக்கூறுகளைக் களைவதற்கு முயல வேண்டும். இக்கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொணரப்பட்டு அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான்
2008இல் தமிழக அரசு கொணர்ந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தைக் கிராமப்புற ஆதிக்கச் சாதியினருக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கும் விதமாய் விரிவுபடுத்த முடியும். கோயில், கோயில் சொத்து ஏலம் போன்றவற்றில் பொதுவிதிகளை உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும்விட தலித்துகள் மீதான சாதியப் பாடுபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசின் சட்டரீதியிலான நடைமுறைகள் உண்மையான அக்கறையோடு இருக்க வேண்டும். இவற்றைச் செயல் படுத்துவதற்கான நெருக்குதல்களைத் தம் போராட்டங்களின் மூலம் அரசுக்கு அளிக்க வேண்டியதே தலித் இயக்கங்கள் முன்னுள்ள உடனடிக் கடமை.

(நன்றி: ஜூலையில் வெளியிடப்பட்ட மதுரை எவிடன்ஸ் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை மற்றும் காலச்சுவடு).

இது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.

'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள்.

கிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல.


கடைக்காரர் கமெண்ட்:
வட மாவட்டமும் சரி...தென் மாவட்டமும் சரி..கிராம மக்கள் தங்களுக்கு "வாழ்க"ன்னு கோஷம் போடுறவரைக்கும்தான் அரசியல்வாதிங்க பொழைக்க முடியும்.இதை நம்ம மக்கள் என்னைக்கு
புரிஞ்சிகிராங்களோ அன்னைக்குதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு பொறக்கும்.







பதிவு : இன்பா

 
Follow @kadaitheru