Thursday, September 23, 2010

அமரர் எம்.ஜி.ஆர் பதில்களும், 'நாடோடி மன்னன்' உருவான கதையும்.


நான் ரசித்த சில அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில பதில்களும், "நாடோடி மன்னன்" திரைப்படம் உருவான விதம் குறித்த அவரது அருமையான விளக்கமும் ஒரு பதிவாக உங்கள் பார்வைக்கு.


கேள்வி : உங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு பற்றி கூறுங்கள்.

பதில் : நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம்.

என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

கேள்வி : உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?

பதில் : நானே இருக்கிறேனே, போதாதா?

கேள்வி : உண்மை அழிந்த பின், நிலைத்திருப்பது என்ன?

பதில் : உண்மை தான்! ஏனென்றால், அது அழிவது கிடையாது.

கேள்வி : நீங்கள் எதை நம்புவதில்லை?

பதில் : நடிகர்களுக்குக் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!

கேள்வி : எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?

பதில் : என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும், துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.

கேள்வி : இந்தி மொழியின் ஆதிக்க பரவல் குறித்து... ? (சட்டபேரவையில்) .

மொழிப் பிரச்சினையில் இந்திய ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சினையில் நானும் கருணாநிதியும் நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்.


-இன்பா

எந்திரன் - 'சுட்ட' படமா? 'சுடாத' படமா?

இன்று மிக பெரிய எதிர்பார்ப்பில்,இந்தியாவில் மிக பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் "எந்திரன்" திரைப்படம், 1999 இல் வெளிவந்த "Bicentennial Man "என்ற ஆங்கில படத்தின் அப்பட்டமான தழுவல் என்று ஒரு தகவலும், அதற்க்கு ஆதாரமான இரண்டு படத்தின் ஸ்டில்ஸ் இங்கே தந்து இருக்கிறேன்.

"இன்று நமது மக்களிடையே ஹாலிவுட் படங்களின் பரிச்சியம் அதிகமாகவே இருக்கிறது. அதனால், ஆங்கில படங்களில் நாம் காட்சிகள் வந்துவிட கூடாதென்று மிகவும் அதிக கவனம் எடுத்து இருக்கிறேன்" என்றார் ஷங்கர். படம் வந்தால் தெரிந்துவிடும் எந்திரன் - 'சுட்ட' படமா ? இல்லை சுடாத படமா? என்று.

எந்திரன் மட்டும் அல்ல இதுவரை வெளிவந்த தமிழின் வெற்றிப்படங்கள் எல்லாமே ஆங்கில பட தழுவல்தான் என்றும் இங்கே தெரிகிறது.

நமது இயக்குனர்களின் ரகசிய அந்த பார்முலா :
ஆங்கில பட கதை + தமிழ் கலாசாரம் + ஒரு ஹிரோயின் + 6 பாடல்கள் = ஒரு சூப்பர் ஹிட் தமிழ் படம்.






- ரவீந்திரன்

Sunday, September 19, 2010

இரண்டு 'எந்திரன்'களின் கதைகள்


எந்திரன் கதை # 1 :

உலகிலேயே மிக அதிகமான அளவில் வயதானவர்கள் வாழும் நாடாகிவிட்டது ஜப்பான். சமிபத்தில் நடந்த ஒரு சர்வேபடி, 100 வயதுக்கும் மேற்ப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 449 ஆகும். இது மேலும், நான்காயிரம் அதிகரிக்கும் என்று வேறு அரசு அறிவித்து இருக்கிறது.

இதனால், மனிதர்களின் வேலைபளு வீடுகளில் அதிகரித்து விட்டது. இதனை சமாளிக்க ஒரு புதிய ரோபோவை உருவாக்கி இருக்கிறது கவாடா நிறுவனம். இதன் தயாரிப்பில் ஜப்பான் தேசிய அறிவியல் கழகமும் இணைந்து இருக்கிறது.

ஹெச்.ஆர்.பி & 4 என்பதுதான் இதன் பெயர். இதன் உயரம் 151 செமி. இதன் எடை 39 கிலோ.

நமது கட்டளைகளை புரிந்துகொண்ட, அதற்க்கு ஏற்ப இயங்கும் இதன் விலை இந்திய மதிப்பில் 1.44 கோடி ருபாய்.

எந்திரன் கதை # 2 :

தன்னுடைய தனிப்பட்ட பணிகளுக்காக ஒரு ரோபோவை உருவாக்குகிறார் ஒரு விஞ்ஞானி.

ஒரு கட்டத்தில், மனிதனை போலவே உணர்வுகள் பெறும் அந்த ரோபோ, விரும்பும் பெண்ணையே விரும்ப ஆரம்பிக்க,அதன் பின் வரும் பிரச்சினைகள்தான் ஷங்கரின் எந்திரன் படத்தின் கதை என்கிறார்கள்.

கடைக்காரர் கமெண்ட்:
அதுசரிங்க,டாஸ்மாக் சரக்கு அடிக்கும் போது, கொஞ்சமா குடிச்சி கம்பெனி குடுக்கிற மாதரி எதாவது 'எந்திரன்' வருமா?


-இன்பா

Friday, September 17, 2010

அந்தக்காலம் இனி வருமா?

வயல்வெளி பார்த்து வரட்டி தட்டி
ஓணான் பிடித்து ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் ஒரு அயல்நாட்டுக்கு.

கணிப்பொறியோடு சிறிதாய் தூங்கி..
கனவுதொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க.

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ?
மவுஸ் தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்வு தொலைந்து போகுமோ?

சொந்த,பந்த உறவுகள்
எல்லாம்
'ஜிப்' பைலாய்
சுருங்கிபோகுமோ?

நண்பர்கள் கூட்டம்
'சாட்' ரூமுக்குள்
மூச்சு திணறுமோ?

தாய் மடியில் தலை வைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம்தான் இனி வருமா?
இதயம் நனைத்த அந்த வாழ்வு அடுத்த தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு சோறு
உண்ணும் வாழ்க்கை
வெறும் கனவு.
தினமும் என்னை
தின்னும் பழைய நினைவு.


(நன்றி : திரு.ரவீந்திரன்)

-இன்பா

Tuesday, September 14, 2010

சிந்து சமவெளியில் ஒரு "சாத்தான்" சாமி


மாமனார் - மருமகள் காதல், மருமகன் - மாமியார் காதல் போன்ற புரட்சிகரமான செய்திகளை(!) தனது படங்களில் சொல்லி,முதன்முதலில் புதுமை செய்தவர் கே.பாலசந்தர். எதிர்நீச்சல்,உன்னால் முடியும் தம்பி என்று சில அற்புதமான படங்களை தந்த பெரிய இயக்குனர்தான், என்றாலும் தமிழ் சினிமாவில் அறிவுஜீவித்தனம் என்று நினைத்துகொண்டு அவர் போட்டிருக்கும் குப்பைகளும் பல. கல்கி,பார்த்தாலே பரவசம் என்று அடுக்கிக்கொண்டுபோகலாம். இரண்டு பொண்டாட்டிகாரன் கதைகள் பண்ணுவதில் அவருக்கும்,பாலு மகேந்திராவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது என்று சொல்லலாம்.

லூசுத்தனமான சேஷ்டைகளுடன் கேணத்தனமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் ஏதாவது தொலைகாட்சியில் பாரிக்க நேரிட்டால், அது கே,பாலச்சந்தரின் படம் என்று அடித்து சொல்லலாம்.

ஒரு வழியாக கே.பி out of form ஆகி விட்டார் என்று பார்த்தால், உறவுகளை கொச்சை படுத்துவதில் அவரையே மிஞ்சிவிடும் அளவுக்கு விஸ்வருபம் எடுத்து நிற்கிறார் இயக்குனர் சாமி.

இயக்குனர் சாமியின் இரண்டாவது படமான "சிந்து சமவெளி"யின் கதை இதுதான். மனைவியை பிரிந்து பல வருடங்களுக்கு பின் ஊருக்கு வருகிறார் ஒரு ராணுவ வீரர்.அந்த சமயத்தில் அவர் மனைவி பாம்பு கடித்து இறந்துவிட, பதினேழே வயதான தன் மகனுக்கு,அவன் விரும்பிய பெண்ணை மணமுடிக்கிறார். நான்கு நாட்கள் வாழ்ந்துவிட்டு,புதுமனைவியை அப்பாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, படிப்பை தொடர வெளியூர் செல்கிறான் அவன். இந்த 'கேப்'பில் ராணுவ வீரருக்கும்,அவர் மகள் போல இருக்கும் மருமகளுக்கும் இடையே கள்ளஉறவு மற்றும் காதல் ஏற்படுவதாக கதை போகிறது.

ஒரு ரஷிய நாவலை,தமிழுக்கு அல்லது தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றதுபோல,ஜெயமோகன் நாவல் வடிவம் தந்து இருக்கிறார். பின்,அதை படமாக எடுத்திருக்கிறார் சாமி.இத்தனைக்கும்,படத்தில் ஹை லைட்டான பகுதி , கதாநாயகன் காதலித்து திருமணம் செய்கிறார்.உறவுகளோடு,காதலையும் வாரிஇருக்கிறார் சாமி.

"விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் இது. " என்று தெரிவித்து இருக்கிறார் சாமி.

நான் ஒன்றும் அவர் கூறும் கலச்சார காவலன் என்று இதை எழுதவில்லை.படம் பார்த்ததும்,எனக்குள் எழுந்த கேள்விகள் சில.

1.எல்லாரும் பே(ஏ)சும் அளவுக்கு அதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு சாமானிய ரசிகனின் ஆவலே(??) என்னையும் படம் பார்க்க தூண்டியது என்று நினைக்கிறேன்.இதைபோலேவே, இப்படம் பற்றிய சர்ச்சையால் தூண்டப்பட்டு படம்பார்த்தவர்களே அதிகமாக இருந்திருக்கும் இல்லையா?.

2.உலகத்தில்,நம் சமுகத்தில் நடக்காததையா காட்டுகிறேன் என்று வேறு கூறுகிறார். ஏன் நல்ல விஷயங்கள் எதுவுமே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??

3.இந்த படம் பற்றிய சர்ச்சையை, முதலில் ஆரம்பித்துவைத்தது சன் டிவிதான்.

"உங்க கார்ல வீசப்பட்ட கல் ஒரு பப்ளிசிட்டிக்காகதான்னு போலீஸ் சொல்லுதே? " என்ற கேள்விக்கு சாமி தந்த பதில்.

"அப்படி ஒரு கேவலமான வேலைய நான் செய்ய மாட்டேன். சன் நியூஸ்ல அப்படி சொல்லப்பட்டதும் நான் அவங்களுக்கே போன் பண்ணி கேட்டேன். போலீஸ்லதான் சொன்னாங்கன்னு அவங்க பதில் சொன்னாங்க. போலீஸ்ல கேட்டப்போ நாங்க சொல்லல என்றார்கள். பிறகு நான் கொடுத்த விளக்கத்தையும் சன் டிவியில் ஒளிபரப்பினாங்க. என் வீட்ல கல் எறியுற வரைக்கு வர்ற போன் கால்களை குறிச்சு வச்சுக்கணும்னு நினைக்கலே. நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிய பிறகு இப்போ எந்த மிரட்டலும் வர்றதில்லை"

இதில் எது நிஜம் எது பொய்?
சன் டிவிக்கு வேறு உருப்படியான செய்திகள் கிடைக்கவில்லை என்றால் இப்பத்தான் வெறும் வாயில் அவல் மெல்வார்களா?.

4.இப்படத்தை தனது மனைவி மற்றும் தந்தையோடு பார்ப்பாரா இயக்குனர் சாமி?.அப்போது அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

5.இது போன்ற படங்கள், 'அது' மாதரி எண்ணங்கள் இல்லாதவரையும் 'அது' போல யோசிக்க தூண்டும் என்பது எத்தனை சதவிதம் உண்மை??

"சாத்தான்" பாணி கதைகள் செய்யும் "சாமி", தனது கதைகளால் பேசப்படுகிறாரோ இல்லையோ..ஒவ்வொரு முறையும் தனது படங்களுக்கு உருவாக்கப்பட்ட அல்லது உருவாகும் சர்ச்சைகள் மூலம் 'பூதா'கரமாக தமிழ் சினிமாவில் பேசப்படுவார் என்று தோன்றுகிறது.


-இன்பா

திரைகடல் ஓடியவர்கள்..


ஷார்ஜாவில் ஒரு தொழிற்ச்சாலையில் நான் பணியாற்றிய சமயத்தில்,அங்கு புதிதாக வேலைக்கு வந்த ஒரு தொழிலாளி, வேலைக்கு வாராமல் தீடிரென்று நின்று விட்டார். அவரை அழைத்து விசாரித்ததில், தனது இரண்டு வயது குழந்தையின் நினைவு வந்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

இப்படி, வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கானோர் பிரிவுதுயரிலும்,ஏக்கங்களிலும் தங்களின் வாழ்வை தொலைத்துவருகின்றனர்.அதுவும், லேபர் வேலையில் இருப்பவர்களின் வாழ்வு மிகவும் கொடுமை.நாள்தோறும் பன்னிரண்டு மணி நேர வேலை மற்றும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு செல்லமுடியும்.

சரி.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் நிலை எப்படி இருக்கிறது. இது தொடர்பாக நான் படித்த ஒரு சர்வே இங்கே தந்து இருக்கிறேன்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்று சொன்னாலும், தமிழ்நாட்டில் இருந்து போய்,வட மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்களும் அல்லது வட மாநில நகரங்களில் செட்டில் ஆகிவிட்டவர்களுமே மன திருப்தியுடன் இல்லை என்கிறார் எனது நண்பர்.

வெளிநாடுகளில்,எந்த வேலையில் இருந்தாலும் குடும்பத்தோடு இருந்தாலும் அவர்கள் மன நிம்மதியோடு இல்லை.வருமானம் குறைந்து இருந்தாலும், கிடைத்த வருவாயில், உறவுகளும் நட்பும் சூழ,சொந்த ஊரில் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை என்று நிரூபிக்கிறது இந்த கருத்துகணிப்பு.

திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும், சொந்த மண்ணுக்கு வந்து சேர்வதே அயல்நாடு வாழ்மக்களின் அன்றாட பிராத்தனை.

- இன்பா

Sunday, September 12, 2010

எந்திரன் - அமரர் சுஜாதாவின் திருவடிகளில்...


விண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.

நான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "என் இனிய இயந்தரா" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா??

சைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.

எந்திரன் - ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழின் முதல் சயின்ஸ் பிக்க்ஷன் படமாக வருவதில், சுஜாதாவின் பங்கு நாம் அறிந்ததே. "மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது" என்று ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.

இந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.

"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, "புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".

மிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.

"என் இனிய இயந்திரா" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது "ஜீன்ஸ்" படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே "எந்திரன்" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

"முதல்வன்" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, "பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.

"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா" என்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த "ஹே ராம்" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.

அதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான "எந்திரன்" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்பதே என்னை போன்ற சுஜாதா வாசகர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

என்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது?

"எந்திரன்" படைப்பை அமரர் சுஜாதாவுக்கு சமர்பிப்பாரா இயக்குனர் ஷங்கர்??

-இன்பா

Saturday, September 11, 2010

தமிழக அரசியலில் ராஜராஜ சோழன்


தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்று பள்ளியில் படித்ததோடு மாணவர்களுக்கு வேறு எதுவும் கற்பிக்க படவில்லை.அதன் பின்னர், எல்லாரும் அறிய விரும்புவது அந்த கோவிலின் அருமை,பெருமைகளை மட்டுமே. ராஜராஜ சோழனை பற்றி அல்ல.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், நான் அந்த கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீச்வரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு. நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும். ஆனால்,அதற்க்கு பதில், சர்ச்சைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன.

சர்ச்சைகள் கோவிலை பற்றி அல்ல. அதை கட்டிய ராஜராஜ சோழன் பற்றி.

முதல் சர்ச்சை:

இதை ஆரம்பித்து வைத்தவர் இடதுசாரி கவிஞர் திரு.இன்குலாப் அவர்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்னால், ராஜராஜ சோழன் சிலையை கோவிலின் முகப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தபோது அவர் பின்வரும் ஒரு கவிதையை எழுதினார்.

ராஜராஜன் சிலைக்காக வருந்துகிறார்.
ராஜராஜன் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகும் முன்னர் ஜிவித்திருந்த இம்மன்னன்
எதை செய்து கிழித்து விட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானம்...

காலனி ஆதிக்க தொழுநோயின் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்.

பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்...

என்று காட்டமாக எழுதினார் இன்குலாப்.

கோவில் கட்டுவதற்கு மக்களை, ஏழைகளை அடிமைகளாக பயன்படுத்தியவர் ராஜராஜ சோழன்.அவருக்கு சிலை மற்றும் மரியாதையை எதற்கு என்பதுதான் கவிஞர் இன்குலாப் மற்றும் அவர் சார்ந்த இடது சாரிகளின் வாதம்.

"இன்று ராஜராஜ சோழனை முன்வைத்து விழா நடத்துவது தேவை இல்லாத ஒன்று. மன்னர் கால பெருமைகளை ஏற்க வைப்பதன் மூலம் 'ராஜராஜன் - கலைஞர்','ராஜேந்திரன் - மு.க.அழகிரி' , 'இளவரசர் - ஸ்டாலின்' என்று வாரிசுகள் ஆட்சி தொடர இந்த சிலை திறப்பை கலைஞர் பயன்படுத்தி கொள்கிறார்" என்றும் விமர்சிக்கிறார் இன்குலாப்.

இரண்டாம் சர்ச்சை:

இன்குலாபின் வாதத்தையாவது ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம் போலிருக்கிறது. தென் மாவட்டங்களில் இருக்கும் இரு பெரும் சாதிக்காரர்கள் ராஜராஜன் தங்களின் சாதியை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி அவ்வபோது போராட்டங்கள் வேறு நடத்தி வருகிறார்கள். முக்குலத்து அமைப்புகள் ராஜராஜன் தேவர் சமுகத்தை சேர்ந்தவர் என்றும், தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜன் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்றும் மோதி வருகிறார்கள்.

நம் தமிழர்களின் வரலாற்று உணர்வு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டி 1000 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அதை கட்டிய ராஜராஜ சோழனுக்கு நம் தமிழக அரசு விழா எடுத்தது சரியா? ராஜராஜனுக்கும், பெரிய கோவிலுக்கும் உள்ளே தொடர்புகள் என்ன?

பின்வரும் தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1,000 வருடங்கள் ஆகின்றன. ஒப்பற்ற இக்கோவிலுக்கு மன்னனும், அவனுடைய தேவியர்களும், உறவினர்களும், அதிகாரிகளும், மற்றவர்களும் தானம் அளித்து மகிழ்ந்தனர்.

இக்கோவில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டதையும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகளின் விவரங்கள் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. திருக்கோவிலில் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்ட செப்புத் திருமேனிகள், நகைகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றின் உயரம், எடை போன்ற விவரங்கள் மிகவும் துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.

இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.


இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.


தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இவ்வேளையில், இக்கோவிலில் இருந்ததாக குறிப்பிடப்படும் ராஜராஜ சோழன் பிரதிமத்தை தமிழகம் பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் கலை வரலாற்றில் சிறப்பான இடம் பெற்று விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னனை விரைவில் கண்டு மகிழ்ந்து போற்றுவோம்! என்று வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறார் திரு.ஸ்ரீதரன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் நம் தமிழனின் கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக இன்று விளங்கிறது.

ஒரு இரவு வேளையில், விளக்குகள் மின்னும் தருணத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை சற்று தொலைவில் நின்றுகொண்டு உற்று நோக்குங்கள்.அப்போது உங்கள் மனதுக்குள் நிகழும், ஆத்மார்த்தமாக தோன்றும் உணர்வு உங்களுக்கு என்ன சொல்லித்தருகிறது??





-இன்பா

 
Follow @kadaitheru