Sunday, April 7, 2013

ஈழமலர் பாலச்சந்திரன்

எங்கட மகனே
பாலச்சந்திரா!

உன் பிரேதத்தில்
வடியும் பால்மணம் கண்டு
இதயத்தின் கனம் தாங்காமல்
தடுமாறுகின்றன
என் கால்கள்.

நாதியற்றுப்போன
தமிழ்ச்சமுகத்தில்
புலிக்குட்டி
நீ
பலியாடாக போய்விட்டாயே.

சி(வெ)றீலங்காவின்
போர்குற்றங்களுக்கு
அங்கே
சிரிக்கும் புத்தரும்
சிதைக்கப்பட்ட நீயும்
பொதுவிடயங்கள்.

உன் போன்ற
ஈழமலர்களில் இருந்து
இனவெறித்தேனீக்கள்
சிறுகச்சிறுக சேகரித்த
குருதித்தேனடையாய்..
இன்று உருவாகிவிட்டதடா
ஒரு சிங்களநாடு.

ரத்தகுளத்தில்
தமிழ்மீனகள்
தேடும் கொக்குகளாய்…
புத்தபிக்குகள்

உலக வரைபடத்தில்
எமதர்மனின்
கட்டைவிரல் ரேகையாய்
காட்சியளிக்கிறது.
போதிதர்மனை வணங்கும்
இலங்கை.

வேதம் மட்டுமல்ல
சாத்தான்கள் அன்பையும்
சேர்த்து ஒதுகின்றன
கோத்தபாவி ராட்சதபக்சேவின்
நாட்டில்.

விழிதிறந்து கிடக்கும்
உன் சடலம்கண்டும்
இன்னும்
இதயம் திறக்கவில்லையடா
எங்களுக்கு.

இங்கே எங்கள்
கண்எதிரில்தான்
காவேரி அன்னையின்
கூந்தல் மழிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு மீனவனுக்கு
சொந்தவீட்டில்
சோறு உண்ணும்
உரிமை பறிக்கப்பட்டது.

ஆணிகளை பிடுங்கவே
ஆண்மையில்லாதவர்கள்
நாங்கள்.

தமிழீழம் என்னும்
மலையை பெயர்க்க
மாநாடு போடும்
எங்களை...

மன்னித்துவிடு
பாலச்சந்திரா.

உன் ஆன்மாவிடம்
நாங்கள் யாசிப்பது
ஒட்டுமொத்த
இந்திய தமிழர்களுக்கு
பொதுமன்னிப்பல்ல...
பாவமன்னிப்பு.

இதுவரை
ஈழ இருட்டுக்கு
தமிழக அரசியல்வாதிகள்
பற்றவைத்தவையெல்லாம்
வெறும் வத்திக்குச்சிகள்தான்.

பாலச்சந்திரன்
பிரபாகரனே!

உன்னால்தான்
இன்று
தீப்பந்தம் ஏந்தி வருகிறார்கள்
எங்கள் மாணவர்கள்.

ஈழச்சீதையை மீட்டெடுக்க
இதோ புறப்பட்டுவிட்டது.
நடமாடும் எரிமலைகளாய்...
போராடும் மாணவர்சேனை.

எழுதப்படுமா?
இன்னொரு
இதிகாசம்?


கவிதை : இன்பா

 
Follow @kadaitheru