Wednesday, December 23, 2009

தாய்க்கு மட்டுமே தெரியும் வலி....


மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாயைச் சந்திக்கும்போது அவர் இப்படிச் சொன்னார், "மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனில் எந்த அரசுக்கும் அக்கறை இருக்காது; காரணம், இவர்கள் என்ன வாக்களிக்கவா போகிறார்கள்?' இது வேதனையின் விளிம்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள்.

அந்த நிலையில்தான் இருக்கிறோமா என்பதை எந்த அரசு ஆனாலும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றியவர்கள் நலனில் சமுதாயமும் சரி, மத்திய, மாநில அரசுகளும் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை.
விலங்கினங்களில்கூட ஊனமாகப் பிறக்கும் குட்டியைத் தாய் புறக்கணிப்பதில்லை. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், அதைக் குடும்பத்தாரும், சமூகமும், அரசும் புறக்கணிக்கும் அவலம் மனித சமுதாயத்துக்கு வெட்கக்கேடான விஷயம்.

பிறரின் கேலிக்கு அஞ்சியே இந்தக் குழந்தைகளைச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர பெற்றோர் அஞ்சுகின்றனர். அக்குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும் அதன் வலி.

இதனை மீறி வெளிக்கொணர்ந்தாலும், அவர்களுக்குத் தேவையான முறையான பயிற்சிகள், மருத்துவ வசதிகள், சிறப்புப் பள்ளிகள், இதற்கான ஆசிரியர்கள் என அனைத்திலும் பற்றாக்குறை
.தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே பார்த்தாலும் 6 கோடி பேரில் 6 லட்சம் பேர் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இவர்களில் வெறும் 50,619 பேர் மட்டுமே மாதாந்திர உதவித்தொகையாக ரூ.500 பெறுகின்றனர். இதிலிருந்தே தெரியும், மீதம் எத்தனை பேர், அரசின் உதவி கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் என்பது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு, அதன் சதவீதத்தின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் நிர்ணயிப்பது சரி. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் முதல் நிலையில் இருந்தாலும், இறுதி நிலையில் இருந்தாலும், இவர்கள் அனைவருமே பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம். அப்படியிருக்க, இவர்களுக்கு எதற்குக் கட்டுப்பாடுகள்?

மனவளர்ச்சி குன்றியோரின் திறனைச் சோதிப்பதில் போதிய அக்கறை காட்டாமல், அரசு மருத்துவர்கள் கடைப்பிடிக்கும் "விதி' அக் குழந்தையின் தலைவிதியை மாற்றுகிறது என்பதை உணர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரை "மைல்டு' எனக் குறிப்பிட்டு, அரசு கொடுக்கும் உதவிகளுக்குக்கூட இவர்களைத் தகுதியற்ற​வர்களாகச் செய்து விடுகின்றனர். இதில் அரசு விதியைத் தளர்த்துவதில் தவறில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புப் பள்ளிகள் எண்ணிக்கை 250. இதில் ஒன்று மட்டுமே அரசுப்பள்ளி.

இறுதி, மிக மோசமான என இரு நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கான, சிறப்புப் பள்ளிகள் அதிகம் தேவை.

இவர்களால் நன்றாக நடக்க, தெளிவாகப் பேச முடியாது. இவர்களைத் தற்போது தொண்டு நிறுவனத்தினர் மட்டுமே பராமரித்து வருகின்றனர்.
முதல் நிலையான "மைல்டு' நிலையில் இருக்கும் குழந்தைகள், வழக்கமான பள்ளி மாணவர்களோடு கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தும் திட்டத்தை
2001-ல் அறிமுகம் செய்ததோடு சரி. இதற்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் மெத்தனம்.

தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் 38 ஆசிரியர்களுக்குக் கடந்த 8 மாதங்களாக தலா ரூ.3 ஆயிரம்கூட வழங்க மறுக்கிறது அரசு. 1992 க்குப் பிறகு புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை.

1 ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் இயங்கும் சிறப்புப் பள்ளியில் பயிலும் இம்மாணவர்கள், 5 ம் வகுப்பு வரை எவ்விதப் பயிற்சியும் இன்த் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர்.

6 ம் வகுப்பில் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற நிலை வரும்போது, இவர்களால் எழுதக்கூட முடிவதில்லை. மீண்டும் தொண்டு நிறுவனத்தின் சிறப்புப் பள்ளிக்குத் திருப்பி அனுப்பும் சூழல் உள்ளது.இது, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை, மனவளர்ச்சி குன்றியோருக்கும் அளிப்பதால் ஏற்படும் பிரச்னை.

இவர்களுக்கென தனிப் பாடத் திட்டம், தனி வகுப்பறை, சிறப்பாசிரியர்கள், முடநீக்கியல் வல்லுநர்கள் என எவ்வித வசதியும் செய்யாமல், வெறு​மனே பள்ளிக்கு வரவழைத்து, அமரவைத்து, திருப்பியனுப்புவதில் பயனேதும் இல்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர்களுகுத் தேவை அன்பு, ஆதரவு, சத்தான உணவு, பயிற்சிகள் மட்டுமே. வறுமையில் வாடும் பெற்றோரால் எத்தனை காலத்துக்கு சத்தான உணவைத் தர முடியும்?

ஆனால், இவர்களுக்குத் தேவையானவற்றை யோசித்துச் செய்யும் நிலையில் அரசு இல்லை என்பது, அவர்கள் இதுவரை செய்திட்ட பணிகளின் மூலம் தெளிவாகிறது.

நல்ல நிலையில் இருக்கும் நபர்களுக்காக ஏராளமான புதிய திட்டங்களைத் தினசரி அறிவித்து, பல கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? பாதிக்கப்பட்ட தாயின் வேதனை வார்த்தைகளை உண்மையாக்குவதும்; பொய்யாக்குவதும் அரசின் கைகளில்!

இந்த நேரத்தில் நாம் குறிப்பிட விரும்புகின்ற ஒரு நிகழ்ச்சி. சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைதான் ஆசியாவிலேயே மிக பெரிய மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மருத்துவமனை. இங்கு கடந்த 28 வருடங்களாக நடைபெறும் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் விழா.

இவ்விழாவில் மனநலம் குன்றியவர்கள் தங்கள் கைப்பட உருவாக்கிய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. மன வளர்ச்சி குன்றியவர்களின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படும் இவ்விழாவில் ஏராளாமானோர் கலந்து கொண்டு, இந்த கை வினை பொருட்களை வாங்கி செல்கின்றனர். தற்சமயம் இந்த மருத்துவமனையின் இயக்குநர் திரு. சத்திய நாதன்.

இங்கு மொத்தம் சுமார் 2800 பேர் நிரந்தரமாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
(நன்றி :தினமணி & தினமலர்).

கீழ்ப்பாக்கம் என்றாலே கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய இடம் என்று ஆகிவிட்டது. டிவியில் அடிக்கடி காண்பிக்கபடும் விளம்பரங்கள் (உ.தா : ஓனிடா மொபைல்) மற்றும் திரைப்படங்கள் எல்லாமே இந்த இடத்தை நகைச்சுவை பொருளாக்கி விட்டன.

மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும் இந்த வலி....


கடைக்காரர் கமெண்ட் :
ஊனமுற்றவர்களுக்கு கிடைக்கும் பரிதாபம் கூட மனநலம் குறைந்தவர்களுக்கு நம்ம சமூகத்துல கிடைக்கிறது இல்லை. அரசை மட்டும் நொந்து என்ன ஆகி விட போகுதுங்க?

வாசக நண்பர்களுக்கு எங்க கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம்






பதிவு : இன்பா

1 comments:

Loganathan - Web developer said...

அன்பு என்றால் அது அம்மாதான். நல்ல பதிவு.

 
Follow @kadaitheru