Monday, November 30, 2009

பொன்விழா காணும் புதுக்கவிதைகள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

"அது எப்படி எட்டையபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு
நெருப்பை சுமந்த கருப்பை "என்று வியக்கிறார் வைரமுத்து பாரதியின் வரிகளை படித்துவிட்டு.

வேறு கவிஞர்களால் கொண்டுவர இயலாத உணர்ச்சியும், வீரியமும் பாரதியின் கவிதைகளில் எப்படி அமைந்து இருக்கிறது? அவனுக்கும் மட்டும் புரட்சிகர சிந்தனைகளும்,அற்புதமான சிந்தாத்ங்களும் எங்கிருந்து கிடைத்தன?

"பாரதி வாழ்ந்த காலமே அவன் சிறந்த படைப்புகளை உருவாக்க காரணம்" என்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

1898ல் தந்தையாரின் மரணத்திற்கு பிறகு, சிறு வயது பாரதியை அவரது அத்தை குப்பம்மாள் அடைக்கலம் தந்து காசிக்கு அழைத்து சென்றார். அங்கு பாரதி ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது ஈடுபாடு கொண்டு அவரது கவிதைகளை படிக்க தொடங்கினார். பின்னர் எட்டையபுரத்துக்கு வந்த அவர் ஷெல்லியின் கில்டு என்று ரசிகர் மன்றத்தை தொடங்கி, ஷெல்லிதாசன் என்று தனக்கு புனைப்பெயரும் சூட்டி கொண்டார்.

இந்த ஆர்வம்தான் அவரை ஆங்கிலக்கவிதை வடிவான ஸானெட் என்ற 14 வரிகளில் அமையும் பாடலின் வடிவத்தை தமிழில் எழுதிப் பார்க்க வைத்தது. அப்படி எழுதிய பாடல் ஒன்று, 1904ம் ஆண்டு ஜூலை மாதம் தனிமை இரக்கம் என்ற தலைப்பில் மதுரையில் மு.ரா.கந்தசாமி கவிராயர் நடத்தி வந்த விவேகபாநு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இதுவே அச்சேரிய பாரதியின் முதல் பாடலாகும். இதன் பிரதிதான் இங்கே கொடுத்து இருக்கிறோம்.


புதுக்கவிதை என்ற வடிவம் தோன்றி 50 வருடம் ஆகி விட்டது.

பாரதிக்கு பின்பு புதுக்கவிதைகள்,அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

காலச்சுவடு இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் தருகிறார் இன்றைய தலைமுறை கவிஞர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்து இருக்கும் கவிஞர் திரு. ஞானக்கூத்தன்.

கேள்வி: புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க?

பதில்:தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது.

அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம் பண்ணாங்க. அவங்களோட நோக்கம் நம்மோட இலக்கியங்களை அவமானப்படுத்தறது. நம்மோட இலக்கிய மதிப்பை இழக்கச் செய்வது அவங்களுக்கு முக்கியமான நோக்கமா இருந்தது. அவங்க அத வெற்றிகரமா செஞ்சாங்க. தேசிய இயக்கம் வந்தபோது நம்ம இலக்கியத்துக்கு மறுபடியும் மதிப்பு வந்தது. தேசிய அரசியல் இயக்கமா கலை இலக்கியம் மாறி நம்பிக்கை தரக்கூடிய மறுமலர்ச்சி இயக்கமா ஆவதைப் பாரதியார் கிட்ட நாம பாக்குறோம். ஆனா அதுவும் ஒரு கட்டத்தோட நின்னு போச்சு.

பாரதியார் ஒரு கவிஞரா இந்தப் புதிய கருத்துகளச் சொல்ல முடிஞ்சுதே தவிர, ஒரு இயக்கமா மற்ற மொழி இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய முயற்சிகளத் தூண்டக்கூடியதா அந்தப் போக்கு வரல. தன்மானத்த மீட்டுக்கொடுத்ததோட புதிய இலக்கியத்தைப் படைக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யுறதுதான் தமிழ் நவீன இலக்கியத்தோட தொடக்கம். அது சிறுகதையானாலும் நாடகமானாலும் கவிதையானாலும்.
கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது. அப்ப அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டது.

படைப்பிலக்கியம்னு ஒண்ணு கவிதையில் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்குத் தடையா இருந்த விஷயம் இலக்கணம். யாப்பிலக்கணம். அது பாரதியார் காலத்திலேயே நவீனத்துவம் ஆகிட்டுது. நமக்கு வால்ட் வில்ட்மன் தெரிஞ்சுட்டுது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிஞ்சுது. கவிதைங்கிறது யாப்பில்லாமயும் படைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுது. எலியட்டோட கருத்துகள் நமக்கு வந்தன. இதை உணர்ந்தது முதல்ல பாரதியார் பிறகு பிச்சமூர்த்தி, ராஜகோபாலன். அந்தக் கட்டத்துல வசன கவிதைன்னு ஒண்ணு இந்தியா முழுவதும் வர ஆரம்பிச்சிட்டுது. அந்த வசன கவிதையைப் பிச்சமூர்த்தியும் கு. ப. ராவும் 1939ல எழுத ஆரம்பிச்சாங்க. இப்போ எழுபது வருஷம் ஆயிருச்சு. இடையில அவங்க வசன கவிதை எழுதுறத விட்டுட்டாங்க. அப்புறம் மேற்கத்திய இலக்கியத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் நம்மிடையே இல்லாமல் போயிருச்சு.

புதுக்கவிதைங்கிற பேர்ல நம்முடைய கவிதைகள் இனிமே இப்படி இப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு அறிக்கையைத் தயாரிச்சாங்க. முதல் தடவையா தமிழிலக்கியத்துல ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம் தோன்றியது அதிசயமான ஒரு நிகழ்வு. 1958இல் க.நா.சு அதைச் செஞ்சாரு. புதுக்கவிதைங்கிற பேரே உலக இலக்கியம் தொடர்பானது. புதுசுங்குற சொல் டபிள்யூ.ஹெச். ஆர்வெல் கொண்டு வந்தது. நியூ சிக்னேச்சர். இடதுசாரி தொடர்பான நியூங்கிறது அதையொட்டிப் புதுக்கவிதைன்னு க.நா.சு செஞ்சாரு. வசனம் வேற கவிதை வேற என்ற விமர்சனங்களை அது ஏற்படுத்தியது.
1958ல புதுக்கவிதை அறிக்கையோட இடதுசாரி சார்புடைய சரஸ்வதில க. நா. சு அந்த இயக்கத்த ஆரம்பிச்சு வச்சாரு. 59ல எழுத்து மூலமா அது பரவ ஆரம்பிச்சுது.

தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் புதுக்கவிதை செய்ததால் அதை நாம் கொண்டாட வேண்டிய கடமை இருக்குது. பெருமைப்பட வேண்டிய அவசியம் இருக்குது. அதுக்குக் காரணம் சிற்றிதழ்கள்தான் புதுக்கவிதையைக் கண்டு பிடிச்சது, உருவாக்கியது. அரசியல் சார்பற்ற மத, சமய சார்பற்ற ஒரு இலக்கியத்தை, வெளியை உருவாக்கி கலை இலக்கியக் கருத்துகளைப் புதுமைப்படுத்தியது. அந்த மாறுதலோட சின்னம்தான் புதுக்கவிதை.

கேள்வி:தமிழுக்குப் புதுக்கவிதை என்ன பண்ணியிருக்கு?

பதில்:புதுக்கவிதை சம காலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு. அரசியல் கட்சிகள்லகூடப் புதுக்கவிதை எழுதுற குழுவும் மரபுக்கவிதை எழுதுற குழுவுமா இருக்கு. ஒரு புதிய உணர்வைப் புதுக்கவிதை உருவாக்கியிருக்கு. நாடகம், சிறுகதை எல்லாத்துக்கும் சேர்த்ததான ஒரு பொது அடையாளம் புதுக்கவிதை. அந்தந்தக் காலத்துல எது புதுசோ அது புதுக்கவிதைன்னு க.நா.சு. சொல்லியிருக்காரு.

கேள்வி:இன்னிக்கு எழுதப்படுற கவிதைகளை, எல்லாச் சிறுபத்திரிகைகளிலும் வர்ற கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க?

பதில்:ஆழம் அதிகமா இருக்கு. எடுத்துரைப்புச் செய்து சொல்லக்கூடிய துறை வளரல. சின்னச் சின்ன மதிப்புரைகள்தான் வருதே தவிர அதையும் கவிஞர்களே பண்ணிக்கிடறாங்க. அது பெரிய துரதிர்ஷ்டம். மற்றபடி கவிதைகள் ரொம்ப ஆழமுள்ள கவிதைகள்தாம் வந்துட்டிருக்கு.

கேள்வி: இந்த ஐம்பது வருஷத்த வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?

பதில் :அசுர வளர்ச்சி. அது தமிழ் மொழியின் சக்தின்னு சொல்லணும். தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை. திருநாவுக்கினியர் சொன்ன மாதிரி அந்தந்தக் காலத்துச் சொற்கள் தான் கவிதைக்குக் கொடுக்குற சத் துணவு. பெரிய ஆன்மீக மொழியா இருக்க அது முயன்றதே கிடையாது. 1500 வருஷ ஆன்மீகப் பாரம்பரியம் இருந்தும் இராமானுஜர், சங்கரர் போன்ற தமிழ் பேசிய சிந்தனையாளர்கள் இருந்தும் ஆன்மிக எல்லைக்குள் போகாம பூமியிலேயே இருக்கும் மொழி தமிழ்.

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

(கவிஞர். ஞானக்கூத்தன் எழுதிய "அம்மாவின் பொய்கள்" என்ற கவிதையில் இருந்து)

கடைக்காரர் கமெண்ட்:
தமிழ்ல புதுக்கவிதை வந்து 50 வருடம் ஆகிவிட்டது. இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்குற முக்கால்வாசி பேரு தனக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லிக்கிற அளவுக்கு கவிதை எளிமையா ஆனதுன்னா அதுக்கு காரணம் பாரதியார்தான். அந்த முண்டாசு கவிஞனுக்கு நாம மனசார நன்றி சொல்வோம்ங்க.






பதிவு : இன்பா

2 comments:

Loganathan - Web developer said...

தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் புதுக்கவிதைகளை வரவேற்போம்!

chinathambi said...

நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com

 
Follow @kadaitheru