Sunday, May 8, 2011

தண்ணீர் வியாபாரம்



உயிர்மை பதிப்பில், திரு.கிருஷ்ணன் ரஞ்சனா எழுதிய ஒரு சிறந்த கட்டுரை இங்கே..

ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளுக்கு அவசரமாக ஒருர சுற்றறிக்கை விட்டுள்ளது. அதில் பழைய, தூர்ந்துபோன, பண்டையகால நீராதாரங்களை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்து , புதுப்பித்துக் கொள்ளுமாறும் ,அதற்கு ஆகும் செலவினத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஐ. நா. நிதியகம் மூலம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. எத்தனை நாடுகள் இவ்வறிக்கையைப் படித்து விட்டு கசக்கிப் போட்டனவோ தெரியவில்லை. இந்தியாவில் பல மாநிலங்கள், தெளிவாகக் கசக்கிப் போட்டுவிட்டன.

தமிழக அரசு ,அரைகுறை மனதுடன் செயற்பாட்டில் களமிறங்கி உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் மனது வைத்து செயல்படவேண்டும்! "மேலேயிருந்து " மிகப் பெரிய அழுத்தங்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. ஆனால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ,சிரமேற்கொண்டு ,இப்பணிகளை தனது மாவட்டத்தில் துவங்கியுள்ளார். செயற்கைக்கோள் உதவியுடன் 10 நீராதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதைப் புதுப்பிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பண உற்பத்திக் களஞ்சியமாகத் தண்ணீர் வியாபாரம் தலை தூக்கி உள்ளது. இதை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் அதற்கு " நீலத் தங்கம் " எனப் பெயரும் சூட்டியுள்ளன.

உண்மையில் நீர் வியாபாரம் கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே ஏற்றுமதி -இறக்குமதி தளத்தில் துவங்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்காவிற்கும் ,கனடாவிற்கும் இடையே முதன் முதலில் துவங்கியது. வேறு சில நாடுகளும் தங்களது ராஜ்ஜியத்தில் ,உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடு " தண்ணீர் பரிவர்த்தனையில் " கை குலுக்கிக் கொண்டன. உதாரணமாக, சிங்கப்பூர் , மலேசியாவிடமிருந்து தண்ணீர் பெறுகிறது. ஒரு நாடு ,தண்ணீரில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே இவ்வாறான செயலில் இறங்க முடியும். ஆனால் தற்போது இத்தகைய கருத்துகள் உடைக்கப்பட்டு ,சொந்த நாட்டு மக்களை வஞ்சித்து ,அயல் நாடுகளுக்கு " தண்ணீர் ஏற்றுமதி" செய்ய ராணுவ அரசுகள் வந்து விட்டன.

உலகின் எந்த மூலையில் யார் வாழ்ந்தாலும் ,தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வும், கவனமும் தேவைப்படுகிறது. உண்மையில் அதற்காக நேரத்தை நாம் ஒதுக்குவதே இல்லை. அப்படி ஒரு விஷயம் இருப்பதையே மறந்து விடுகிறோம். தண்ணீரை நம் உண்மையான தேவையை விட ஆடம்பரத்திற்கும் ,கழிவு நீராக்குவதிலும் அதிகம் செலவிடுகிறோம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

தண்ணீர் பஞ்சமாகிப் போய் ,உலகளாவிய பிரச்சினையாக உருமாறத் துவங்கிவிட்ட நேரத்தில் , தூந்திரப் பிரதேசப் பனிக் கட்டிகளைக் கை வைக்க யோசனை தோன்றத் துவங்கி உள்ளது. அதே போல் எங்கெல்லாம் ஊற்றுகளும் ,அருவிகளும் இருக்கின்றனவோ ,அவையும் இப்போது ஆக்கிரமிப்புக்கு ஆளாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தாங்கள் அலெஸ்காவில் உள்ள ஐஸ்கட்டிகளை உடைத்து தண்ணீராக்கி குழாய் மூலம் தரைப் பிரதேசத்திற்குக் கடத்தி ,அவைகளை இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. அதற்கு இசைவது போல, அலெஸ்காவின் தென் பகுதி மக்கள், தங்கள் இயற்கை வளத்தை விற்கவும் சம்மதித்துள்ளனர்.

(S2C) குளோபல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ,தனது தண்ணீரை வாங்குவோருக்கு 50 சதவீதம் தள்ளுபடி தருவதாகக் கூறியுள்ளது. அலெஸ்கா ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் தனது கப்பலில் பில்லியன் கேலன் நன்னீரை அங்குள்ள நீல ஏரியிலிருந்து உறிஞ்சி, இந்தியாவிற்கு அனுப்பும். இங்கிருந்து அரேபியா போன்ற நாடுகளுக்கும், நம் நாட்டின் வறண்ட பகுதிகளிலும் இந்நீர் விற்கப்படும். இந்தியாவில் ராட்சசத் தொட்டிகள் கட்டி ,அதில் தண்ணீர் சேமிக்கப்பட்டு ,தண்ணீரின் தரம் பாதுகாக்கப்படும். உப்பு நீரை நன்னீராக்குவதற்குப் பதிலாக இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என்கின்றனர் "கம்பெனி முதலாளிகள்".

தூந்திரப் பிரதேசத்தில் ஐஸ் கட்டிகளை உடைத்து எடுக்கும்போது ,அங்கு புதைந்துள்ள பிற படிமங்கள் ,கனிமங்களின் மூலக்கூறுகளும் விற்கப்படும். கனிம ,கரிம வளமும் குன்றும் என்பது எதிர்ப்பாளர்கள் கருத்து. மூலாதாரத்திலேயே கைவைப்பது பெரும் விபத்தை ,அழிவை ஏற்படுத்தும். நாளைய தினத்தை நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் ரோஜர் சாசர். இவர் எதிர்ப்புக் குழுவின் தலைவராவார். கப்பல்களும் ,தங்கள் போக்குவரத்தால் ஐஸ் பாலங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. அதே சமயத்தில் ,தங்கள் இயற்கை வளம் சுரண்டப்படுவதை அறியாத அலெஸ்கா மக்கள், தங்களுக்குக் கூடுதலாக விலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவாறு உள்ளனர். "கொடுத்தால் போச்சு" என்று சமாளிக்கின்றனர் நிறுவனத்தார்.

பீடபூமி, சமதளம், பள்ளத்தாக்கு போன்றவை தூர்ந்துவிட்டன. தூந்திரப் பிரதேசத்தில் மட்டுமே தற்போது நன்னீர் உள்ளது. மக்களின் எண்ணிக்கையும் தினம்தினம் கூடி வரும் நிலையில் ,இன்னும் 50 வருடத்தில் பூமிக் கோளத்தில் தண்ணீரே இல்லாமல் போகலாம். இப்போதும் இப்பூவுலகில் 1 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட தண்ணீரே இல்லாமல் உள்ளனர். 6ல் 1மனிதர் ஒரு குவளை தண்ணீர் கூட இல்லாமல் இறந்தவாறு உள்ளனர். நிமிடத்திற்கு 4000 குழந்தைகள் அசுத்தமான தண்ணீரை அருந்துவதால் வியாதிகளுக்கு உள்ளாகி, நிமிடத்திற்கு 6 குழந்தைகள் வீதம் இறந்துவிடுகின்றன.பருவம் தப்பிய மழையும், பருவகால மாறுபாடுகளும் ,ஆசிய நாடுகளைத் தண்ணீர் பற்றாக்குறைக்குத் தள்ளி கவலை கொள்ளச் செய்து வருகிறது.

இண்டர்நேஷனல் வாட்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட் (IWMI) பெரிய அணைகளில் தேக்கப்பட்டுள்ள தண்ணீர் ,தேக்கங்கள் அமைத்து பாதுகாக்கப்படும் தண்ணீரைத் தூய்மைப்படுத்தி ,மிகக் கவனத்துடன் குடிநீராகப் பராமரித்து விநியோகிக்க பரிந்துரை கூறுகிறது. ஆனால் விவசாயத்திற்கான நீர் தேவை குறித்து அது கவலைப்படவில்லை. உலகம் முழுவதும் 50,000 பெரும் அணைகள் உள்ளன.

1950லிருந்து இன்று வரை கணக்கிட்டால் இதுவரை 80 மில்லியன் மக்கள் இதனால் தங்கள் நிலத்தை ,வீட்டை இழந்து அனாதையாகி தெருவில் அலைகின்றனர். 470 மில்லியன் மக்கள் அணையின் தேக்கப்பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர். அவர்களின் "முங்கிப் போகும்" நிலையை அறிந்த (IWMI) அவர்களைச் சமாதானப்படுத்தி, கிராமங்களில் வாழ்வாதார மையங்களை அமைத்து, வாழ்வதற்கு உதவுமாறு நாடுகளை வேண்டுகிறது.

குறிப்பாக, கிராமத்து மக்கள் தங்கள் நீர்தேவையைப் பூர்த்தி செய்ய "மழைநீர் அறுவடை" செய்ய சிறிய ,பெரிய திட்டங்களையும், தொட்டி ,ஏரி, குளம் போன்ற ஆதாரங்களை அமைக்கவும் உதவ முடிவு செய்துள்ளது. இவ்வாறான செயல்பாடுகளை முனைப்புடன் எந்த அரசியல் கலாச்சாரக் கலப்பின்றி செயல்படுத்துவதன் மூலமே ,நிச்சயமற்ற தன்மையில் வாடும் விவசாயத்தை நாம் காப்பாற்ற முடியும் என்கிறார் மேத்யூ மெக்கார்த்தி. சிறந்த நீரியல் மற்றும் புவியியல் வல்லுனரான இவர் IWMI யின் ஆலோசகர். இவர் மேலும் கூறுகையில் ,மில்லியன் மக்கள் ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களில் பயன் பெறுவர். மழைநீர் சேகரிப்பை உள்ளூர் நகராட்சி ,பஞ்சாயத்து மூலமும், மிகச் சிறிய இலகுவாக கிடைக்கக் கூடிய உபகரணங்கள் பயன்படுத்தி ,நீர் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்கிறார்.

பிரம்மாண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து ,பல அடி தொலைவிற்குக் கீழே உள்ள நீரை உறிஞ்சுவதன் மூலம் கனிம ,கரிம வளம் இழந்த நிலையில் பூமியும் ,அதைச் சார்ந்த மனிதன் தொலைத்த வாழ்வும் இன்றும் கல்வியாளர்களிடையே நீரைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டாதது யாருடைய தவறோ தெரியவில்லை.

இதைத்தான் எங்கள் ஊர் பெரியவர் பெரியசாமி "நிலத்திற்குக் கீழே உள்ள தண்ணீரை ஓட்ட போட்டு உறிஞ்சி மேலே கொண்டாந்தா ,விவசாயமும் அடியாகும், நாமளும் அடியாவோம்" என்பார். தீர்க்க தரிசனமாய் அன்று அவர் கூறிய வரிகள் ஏளனமாய் ,நகைத்து விட்டுப் புறந்தள்ளப்பட்டன.

"குடிநீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை " என தற்போது ஐ.நா. அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பும் பல போராட்டத்திற்குப் பிறகே கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் நீரின் முக்கியத்துவம் பற்றி இன்றைய தலைமுறைக்கு கல்வியின் மூலமும், தினப்படி செயல்பாடுகள் மூலமும் புரிய வைப்பதிலேயே அவர்களின் "தலைவிதி" தீர்மானிக்கப்படும்.

அதற்கு மேல் இயற்கையின் கருணை மிகமிக அவசியம்!!


(கட்டுரை : கிருஷ்ணன் ரஞ்சனா)

0 comments:

 
Follow @kadaitheru