Saturday, March 26, 2011

தங்கரின் "களவாடிய பொழுதுகள்" - சினிமா பார்வை


கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

களவாடிய பொழுதுகள் - தங்கரின் அடுத்த படம்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா, இன்பநிலா இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ்.

இதில் இன்பநிலா, கேரளா இறக்குமதி நடிகைகளுக்கு இடையே நம்ம தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒன்பது ருபாய் நோட்டு மூலம் கவனம் பெற்றவர்.

தங்கர்பச்சான் முன்பு எழுதிய கதைதான் அதே பெய‌ரில் சினிமாவாகிறது. இதுவொரு கம்யூனிஸ்டின் கதை. பிரபுதேவா கம்யூனிஸ்டாக வருகிறார்.

மே தினம் அன்று பெ‌ரியார் கொடியேற்றும் நிகழ்ச்சி படத்தில் இடம் பெறுகிறது. பெ‌ரியாராக சத்யரா‌ஜ் நடிக்கிறார். இந்த‌க் காட்சியில் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார் தங்கர்பச்சான். பரத்வா‌ஜ் இசையில் உருவாகியிருக்கும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்.

'யதார்த்த சினிமாவின் இன்னொரு ப‌ரிமாணமாக களவாடிய பொழுதுகள் இருக்கும்' என்று கூறிஇருந்தார் தங்கர்.

பிரபுதேவா, நயன்தாராவே தனது மோஸ்ட் 'wanted' என்று போனதுதான் 'களவாடிய பொழுதுகள்' தற்காலிகமாக நிறுத்தபட்டு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறுகிறார்கள். பிரகாஷ்ராஜ் கொடுத்த தேதிகள் வேறு முடிந்துவிட்டதாம்.

இப்பொழுது அங்காடிதெரு படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில், லண்டன் நிறுவனம் மீண்டும், இப்படத்தை வெளியிடும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

சினிமாவில் ஒரு நல்ல படைப்பாளியாக இருக்க ஒரு கலைஞன் அனுபவிக்கும் வேதனைகளை அவர் வெளிப்படையாக தனது சமிபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் திரு.தங்கர் பச்சான்.

"நம் சினிமா குப்பையாக இருக்கிறது. பெரிய பெரிய மாற்றங்களையெல்லாம் செய்த வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஆனால் நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது. ஒரே ஒரு சினிமாவில் ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருந்தால், நம் மக்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள். நான் வைத்திருக்கிறேன் ஒரு கதை. யார் செய்ய முன் வந்தார்கள்'' என்று ஒரு பொதுமேடையில் பேசிய தங்கர், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி : யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே?

தங்கர் : சிற்பம், இசை, சினிமா என எல்லாமே வாழ்வின் பாதிப்புதான். ஆனால் நம் சினிமாக்களில் எந்த மக்களின் வலி, வாழ்வு இருக்கிறது.

ஒரே கதைதான். அது என்னவாக இருந்தாலும் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் நம் சினிமாக்களின் பாடுபொருள். விதை நெல்லை விற்று வயிறு நிரப்பும் விவசாயி. கஞ்சி தொட்டி திறக்கப்படாதா? என காத்திருக்கும் நெசவாளி என யாருடைய பதிவு இங்கு இருக்கிறது? குப்பை சினிமாக்களுக்கே இங்கு முதலிடம். நல்ல சினிமாக்களுக்கு தியேட்டர் இல்லை. விவசாயி போல, நெசவாளி போல நல்ல படைப்பாளியும் திணறுகிறான்.

52 ஆண்டுகளாக ஈழத்தில் ஒரு போராட்டம் நடக்கிறது. அது சார்ந்த ஒரு பதிவு நம்மிடம் இருக்கிறதா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் யூத இனத்தின் அழிவை "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற பெயரில் படமாக எடுத்தார். அப்போதுதான் மீதம் இருந்த யூதர்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பின் பெரிய மாற்றமே அங்கு வந்தது. ஆனால் இங்கு போராட்ட குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் நம் உறவுகள் பஞ்சம் பிழைப்பது பற்றி யாருக்கு கவலை இருக்கிறது. ஆனால் காசு வைத்திருக்கும் உலகத் தமிழனை தேடி வாரத்துக்கு ஒரு சினிமா வெளியாகிறது. ஈழத்தமிழனின் வாழ்க்கையை ஒரு சினிமாவில் பதிவு செய்திருந்தால் நம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனால் நாம் என்ன செய்தோம் வெறும் பொழுதுபோக்கு குப்பைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறந்த நடிகர்களை வைத்து நாம் என்ன செய்வது? ""எம் இனத்தின் அழிப்பை பற்றி ஒரு சினிமா இருக்கா'' என கேட்க வரும் தலைமுறைக்கு என்ன பதில் இருக்கிறது?

கேள்வி : மனதில் உள்ளதை பளிச்சென போட்டு உடைப்பதால் பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகின்றீர்களே?

தங்கர் : நல்லவர், வல்லவர் என ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிக் கொள்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படி பேசினாலும், உண்மை என்னவென்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். பந்தி வைக்கிற இடத்தில் நான் எதையும் பதுக்கி வைக்க கூடாது என நினைக்கிறேன்.

கேள்வி : தமிழ் சினிமாவின் சமீபத்திய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தங்கர் : பயமாக இருக்கிறது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கற்பனைகளை மட்டுமே மனசு முழுவதும் நிரப்பி, கோடம்பாக்கத்தில் அலைகிறவர்களை நினைத்து பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கிற மாதிரியான நிலை இனி தமிழ் சினிமாவில் இல்லை. தமிழ் சினிமாவை நிறைய பேர் ஆக்கிரமித்து விட்டார்கள். கற்பனைகளுக்கு இனி இடம் இல்லை. காசு இருந்தால் பார்க்கலாம் என சொல்லும் நிலை வந்திருக்கிறது. அத்தனை படைப்பாளிகளும் அவசரமாக கூடி பேச வேண்டிய தருணம் இது.

நம் தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தொடர்ந்து தந்துகொண்டு இருக்கும், இயக்குனர் திரு.தங்கர்பச்சானின் ஆதங்கமும், கோபமும் மிகவும் நியாயமானதே.

யதார்த்த சினிமா மீது நம்பிக்கை கொண்ட, நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதை தனது கொள்கையாக வைத்து இருக்கும் தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம். 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru