Thursday, March 3, 2011

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்காதது ஏன்? - கபில் தேவ்.


அன்று முதல் இன்று வரை, நமது இந்திய கிரிக்கெட் அணியின், தீராத குறையாக இருப்பது, ஒரு சிறந்த முழுமையான வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருப்பதே.

மீண்டும்,மீண்டும், ஜாகிர்கான்,நெஹரா என்று கடந்த இரண்டு தொடர்களில் இருந்த அதே பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வரும் சூழலே நிலவி வருகிறது.

நமது அண்டை நாடான, பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம், வாகார் யூனுஸ், இன்று தன்வீர்,ஷோயப் அக்தர் என்று தொடர்ந்து கிடைப்பது போல, நமக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஏன் கிடைக்கவில்லை?

இத்தனைக்கும், ஐ.பி.எல் தொடர்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், புதிய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஏன் உருவாகவில்லை??

இது பற்றிய கேள்விக்கு விளக்கம் தருகிறார் இந்திய அணியில் இருந்த ஒரு முழுமையான வேகபந்து வீச்சாளரான கபில்தேவ்.

"பெற்றோர் தங்களது குழந்தைகள் கும்ளே போல் அல்லாமல் சச்சின் மாதிரி வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்திய அணியின் வெற்றி நாயகர்களில் கும்ளேவும் ஒருவர் என்பதை மறந்து விடுகின்றனர்." என்கிறார் கபில்.

"இந்திய அணியின் பவுலிங் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனை நான் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.

பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 338 ரன்களை எடுத்த போதும், போட்டி "டை' ஆனது இது மிகுந்த மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இதற்காக பவுலர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இவர்களால் சிறப்பாக பந்துவீச முடியாது என்று கூற இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். என்னை பொறுத்தவரை அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றதாக குறிப்பிடுவேன்.

தற்போது, கிரிக்கெட் அரங்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 434 ரன்கள் எடுத்தும், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை காண முடிந்தது. எனவே, நல்ல விஷயங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலக கோப்பை தொடர் நடக்கும் இந்த நேரத்தில், இந்திய அணியில் அதிவேகப்பந்துவீச்சாளர் இல்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. சச்சின், சேவக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்ரிக்க அணிகளில் காண முடியவில்லை. எனவே, நம்மிடம் இருப்பது, மற்றவர்களிடம் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. எதிர்காலத்தில் "சூப்பர் பாஸ்ட்' பவுலர்கள் இரண்டு பேர் தேவை என்றால், அதற்காக திட்டம் வகுக்க வேண்டும்".

-இவ்வாறு, பதில் தருகிறார் கபில்.

"ஒவ்வொருவரும் சச்சின், சேவக் அல்லது தோனியாக வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சிலராவது வேகப்பந்துவீச்சாளராக ஆர்வம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் கும்ளே போல் அல்லாமல் சச்சின் மாதிரி வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்திய அணியின் வெற்றி நாயகர்களில் கும்ளேவும் ஒருவர் என்பதை மறந்து விடுகின்றனர்". - என்ற கபில்தேவின் குரல் எங்கும் எதிரொலிக்க வேண்டும்.

இலங்கையின் சமந்த வாஸ் உட்பட பல பந்துவீச்சாளர்கள் நமது சென்னையில் உள்ள ஐ.சி.எப். வந்து பயிற்சி எடுத்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால்,ஐ.சி.எப்பை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து எந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகவில்லை.

அடுத்த உலக கோப்பை தொடரில், கனடா, அயர்லாந்து போன்ற சிறிய அணிகள், "டெஸ்ட்" அந்தஸ்த்து இல்லாத அணிகள் நீக்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்து இருக்கிறது.

இதற்கும், கபில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

"அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக் குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி., முடிவு தவறானது. இது, கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சிக்கு தடையாக அமையும். அனுபவம் இல்லாத அணிகளோடு மோதும் போட்டிகள், முன்னணி அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகின்றன. என்னை பொறுத்தவரை கத்துக்குட்டி அணிகள் மற்றும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் "பி' அணிகள் பங்கேற்கும் இன்னொரு உலக கோப்பை தொடரை நடத்த வேண்டும்".

தற்சமயம் நடைபெற்று வரும் தொடரில், அயர்லாந்து, இங்கிலாந்து அணியை தோற்கடித்து உள்ளது. பாகிஸ்தானை, கனடா 184 ரன்னில் சுருட்டி இருக்கிறது.

இந்த அறிவிப்பு வளர்ந்து வரும் புதிய அணிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும். கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக அமையும்.
இனி நாம் அயர்லாந்து போன்ற அணிகளின் உத்வேகத்தையும், ஆட்டங்களையும் இனி வரும் உலககோப்பை தொடரில் காண முடியாது.

கிரிக்கெட் அமைப்புகளுக்கு, விளையாட்டின் வளர்ச்சியை விட, பணம் எந்த நாடுகளில் இருந்து வருகிறதோ அந்த நாடுகளே முக்கியம் என்பது உலகபோட்டியில் இருந்து சிறிய அணிகள் நீக்கப்படும் என்ற முடிவு தெள்ள தெளிவாக காட்டுகிறது.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru