Wednesday, November 18, 2009

இந்தியா - தேசிய மொழி இல்லாத நாடு?


"யாமறிந்த மொழிகளில் தமிழ் போல இனிதாவது எங்கும் காணோம் " என்று பாரதியார் பாடியதன் அர்த்தம் தமிழ் மட்டும் அல்லாமல் அவர் சமஸ்கிரிதம் முதலிய பிற மொழிகளை அவர் அறிந்து இருக்கிறார் என்பதே.

ஒரு பயிற்சிக்காக புணே சென்றபோது, இந்தி மொழி தெரியாததால் நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் அல்ல. நம் தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களுக்கு படிக்கவோ,பணியாற்றவோ செல்பவர்களுக்கு இந்தி மொழி அவசியம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.

வேலை நிமித்தமாக அரபு நாட்டில் இருந்த நான், சந்தித்த பெரும்பாலான அரபிகள் மிக நன்றாக இந்தி பேசுவதை கேட்டுஇருக்கிறேன். ஒரு அரபி இவ்வாறு கேட்டார். "பாகிஸ்தானிகளும், பங்காளதேஷ்,நேபாளி மக்களும் நன்றாக இந்தி பேசும் போது, இந்தியர்களாகிய நீங்கள் ஏன் அந்த மொழியை பேச முடிவதில்லை. ஒரு பொதுவான தேசிய மொழி இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய நாட்டில் வசிக்க, பயணிக்க முடியும்" .

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் பொதுவான தேசிய மொழி இல்லாதது அவருக்கு மிக பெரிய ஆச்சரியமான விஷயமாய் இருந்தது. அவரை போல பல வெளி நாட்டவர்க்கும்.

மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது. ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் தொடங்கி உள்ளது

இது தொடர்பாக நான் படித்த ஒரு செய்தியறிக்கை..

அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது. அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது.

பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன. இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.

அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது. ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.

மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது என்கிறது அந்த அறிக்கை.

தமிழ்,தமிழ் என்று வாய்க்கு வாய் முழங்கும் எந்த ஒரு அரசியல்வாதியும் தனது மகனையோ,மகளையோ தமிழ் வழி கல்வியில் படிக்கவைக்கவில்லை என்பதே நிதர்சனம். முதல்வர் கருணாநிதி கூட தனது பேரன் தயாநிதி மாறனை முதல் முறையாக அமைச்சர் ஆக்கும் போது சொன்ன ஒரு காரணம் அவர்க்கு இந்தி பேச தெரியும் என்பதுதான். அழகிரியை அவர் அமைச்சர் ஆக்கி இருப்பதர்க்கு காரணம் அவர் தனது மகன் என்பதால்தான்.
அவருக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் இல்லை.

வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை எப்படி ஏற்று கொள்கிறோமோ அதுபோலவே இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதும்,கற்பதும் தவறு இல்லை.

கடைக்காரர் கமெண்ட் :
இந்தி மட்டும் இல்ல எந்த மொழியையும் கத்துகிறது தப்பில்ல. ஆனா, உணர்வால மட்டும் எப்பவும் தமிழனா இருங்க. அதுவே போதும்.




பதிவு : இன்பா

3 comments:

Unknown said...

கடைக்காரர் கமண்ட் நச்!!

R.Gopi said...

Good post INBA...

Loganathan - Web developer said...

உணர்வாக இருந்தாலும் கூட , நாமெல்லாம் இந்தி கற்க வேண்டும்.

 
Follow @kadaitheru