Tuesday, November 10, 2009

தங்கத்தோடு மோதும் பூக்கள்


"வியாபாரிகளே...வியாபாரிகளே. ரோஜாக்களை விற்று வேறு என்ன வங்கிவிடப்போகிறீர்கள் அதை விட பெரியதாய்" என்கிறது ஒரு பாரசிக கவிதை.

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்

- கவிஞர் வைரமுத்து.

பக்தி,காதல் ஆகியவற்றை சொல்வதற்கு பூக்களை விட வேறு எதுவும் சிறந்தது உலகத்திலேயே இல்லை.ஆனால், இன்று கூந்தல் நிறைய பூக்கள் சூடும் பெண்களை ஏனோ பார்க்கமுடிவதில்லை?

தங்கத்தின் விலை போலவே, பூக்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டு வருகிறது. சமிபகாலமாக பெய்துவரும் தொடர்மழையை ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும், வாசம் தூக்கும் மல்லிகையும்தான். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நிலக்கோட்டை, திருமங்கலம், நத்தம் மற்றும் மேலூர் பகுதிகளில் மல்லிகை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக, மார்ச்சில் துவங்கி ஜூன் வரை மல்லிகை பூத்துக் குலுங்கும்.

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மல்லிகையை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மற்றும் வில்லாபுரம் பூ மார்க்கெட் கமிஷன் ஏஜெண்டுகள் வாங்கி விற்கின்றனர். மதுரை மல்லிகை, உதிரி பூவாக அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில், மல்லிகை கிலோ ரூ.25க்கு விற்கப்படும். ,ஆனால் மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்கள் தமிழகம், கர்நாடகா மற்றும் மும்பை வரை நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பத்து டன் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. கிலோ ஒன்று 350 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ கடந்த இரண்டு நாட்களாக கிலோ 23 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்மழை பெய்து வருவதால் மல்லிகை பூ பறிக்க முடியாமல் வயல்வெளியிலேயே உதிர்ந்துபோகிறது.

சத்தியமங்கலம் பகுதியில் செண்டுமல்லி பூக்களும் அதிகம் பயிரிட்டுள்ளனர். கனகாம்பரம், சம்பங்கி ஆகிய பூக்கள் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பூக்கள் பறிக்க வயலுக்குள் இறங்க முடிவதில்லை. இதன் காரணமாக வயல்களிலேயே பூக்கள் அழுகிவிடுகிறது. பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் மூன்று நாட்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூக்கள் அழுகி நாசமாகியுள்ளதாக பூ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் தெரிவித்தார்

"மல்லிகை விளைநிலங்கள் எல்லாம் வீடு கட்டும் இடங்களாக மாறி வருகின்றன. மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 30 டன் மல்லிகை வரும். தற்போது அது 10 முதல் 20 டன்னாக குறைந்து விட்டது. மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. முகூர்த்த சீசன் என்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கிலோ ரூ600 ஆக இருந்து கிலோ ரூ.1000 ஆக உயர்ந்தது. இதற்கு முன், 2000 மற்றும் 2006ம் ஆண்டில் இதே போல் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது" என்கிறார் மதுரை மாவட்ட பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் .

பூக்கள் மூகூர்த்த காலங்களில் மட்டும் அல்ல, சுவாமிக்கு அர்ச்சினை செய்யும் பூக்கள் ஒவவொன்றும் ஒரு குணத்தை கொண்டிருக்கின்றன.

தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.
ரோஜா -சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.

அருகம்புல் -கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.

எருக்கம் பூ -பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.

செம்பருத்தி, அரளி -தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.

முல்லை, மல்லிகை -புனிதத்தன்மை தரும்.

துளசிப்பூவும் இலையும் -பக்தி தரும்.

மருக்கொழுந்து -வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.

பவளமல்லி -சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.

நந்தியாவட்டம் -பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட பூக்களை சாமானிய மக்கள் வாங்கமுடியாத விலை சொல்கிறார்கள் பூ வியாபாரிகள்.

ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் பூக்களின் விளைச்சல் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பூக்களை நம்பி உள்ள விவசாயிகளின், ஏழை வியாபாரிகளின் நிலை மோசமடைந்துவருவதாகவும் தெரிவிக்கிறார்கள். பூக்களின் விலைஏற்றத்திற்கு நமது வேளாண் முறைகளும் ஒரு காரணமாக தெரிகிறது.


கடைக்காரர் கமெண்ட்:
அட போங்கப்பா...காய்கறி,பருப்பு விலையையே கண்டுக்காத நம்ம அரசியல்வாதிங்க பூவோட விலையையா கண்டுக்கபோறாங்க? பேசாம நம்ம கடையில பிளாஸ்டிக் பூவையெல்லாம் சரக்கோட சரக்கா போடலாம்ன்னு பாக்குறேன்..










பதிவு : இன்பா

1 comments:

TAMIL said...

uk malli price 10,cm £1.00pound

 
Follow @kadaitheru