Friday, April 29, 2011

'தல' அஜித் & அமரர்.சுஜாதா - "பிறந்த நாள்" சிறப்பு பதிவுகள்



நடிகர் அஜித்குமார் (பிறந்த தேதி : 1-05-1971 )

"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல " என்கிறார் அஜித்.

அவரது 50 வது படமான "மங்காத்தா" பற்றி இப்படி பேசுகிறார் அஜித்.

சினிமா என்கிற முகம் கடந்து நிஜ வாழ்விலும் ஒரு "ஹீரோ" வாக வாழ்பவர் அஜித்.

அவரது சில சில "அசல்" பக்கங்கள்..

பைக் மெக்கானிக்: சென்னை அசன் மெமோரியல் பள்ளியில் படிக்கும்போதே, பைக்குகள் என்றால் தீராத காதல். பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'பகுதி நேர' பைக் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார் அஜித்.

பைக் ரேஸ்:1990 இல 110 சி.சி மோட்டார் பைக் பிரிவுக்கான "இந்தியன் நேஷனல் சாம்பியன் ஷிப்" போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அவரது வயது 19.

கார்மெண்ட்ஸ் தொழில்: அதன் பின்னர், ஈரோட்டில் துணிகள் ஏற்றுமதி செய்தார் அஜித். இதற்க்காக தனியாக ஒரு ஏஜென்சி ஒன்றை நடத்திவந்தார்.

மாடலிங்: ஏற்றுமதி தொழிலில் இருந்த அஜித், தனது நண்பர்களின் ஆலோசனைபடி கூடுதல் வருமானத்திற்கு, மாடலிங் செய்ய தொடங்கினார்.

சினிமா: இத்தனையும் அவர் செய்தது அவரது 21 வயதுக்குள். மாடலிங் அவரது சினிமா பிரவேசத்திற்கு அடிக்கல் ஆனது. பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படம்தான் அவரது முதல் சினிமா. இரண்டாவது படம்தான் தமிழில் வந்த அமராவதி. ஆசை, காதல் கோட்டை போன்ற பெரும் வெற்றி படங்கள் மூலமாக ஒரு காதல் நாயகனாக உருவான அஜித், வாலி மூலமாக தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். 'தீனா' - அஜித்தை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி நடிகர் ஆக்கியது.

ஏற்ற,இறக்கங்கள் நிறைந்தது அஜித்தின் சினிமா பயணம். இடையே ஒரு விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்',
அசல் என்று ஒரு சிறு சறுக்கல்.

அஜித் தற்சமயம் நடித்து வரும் 50 வது படமான "மங்காத்தா" ' அதிக எதிர்பார்ப்புக்கள் உள்ள படமாக பேசப்பட்டு வருகிறது.

கார் ரேஸ்: 2003 இல ஆசிய அளவிலான 'பி.எம்.டபிள்யு சாம்பியன்ஷிப்' என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு, நான்காம் இடத்தை பிடித்தார் அஜித்.

2004 இல 'பிரிட்டிஷ் பார்முலா - 3 ' ரேசில் கலந்துகொண்டு, இரண்டு சுற்றுகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இந்த ரேசில் முதல் இடம் வந்த நெல்சன் பிக்வெட், இன்றைய பார்முலா பந்தயங்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஏரோநாட்டிக்ஸ் : நமது இந்திய சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டதெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

தற்சமயம் 'ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியஷன்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் ஒரு 'ஹெலிகாப்டரை' உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

ஜேப்பியார் கல்லூரி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு சமிபத்தில் விமானம் ஓட்டும் பைலட் லைசென்ஸ் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த லைசென்ஸ் பெற்ற நடிகர் இவர் ஒருவரே.

சமையல் கலை: அஜித்துக்கு சகல சமையலும் அத்துப்படி. 'பில்லா' படபிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, யூனிட்க்காரர்களுக்கு ஒரு நாள் இவரே சமைத்து, பரிமாறியும் இருக்கிறார்.

ஆன்மிகம்: "இதுவே என் கடைசி பிறவியாக இருக்கவேண்டும்" என்று தத்துவார்த்தமாக கூறும் அஜித் தீவிர சாய்பாபா பக்தர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் செல்லும் வழக்கம் உடையவர். புனே போன்ற வட மாநிலங்களில் இருக்கும் ஆஷ்ரமங்களுக்கு செல்லும் வழக்கமும் உடையவர். அதேசமயம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தர்காவுக்கும் செல்கிறார் அஜித்.

"அஜித்தான் எனது ரோல் மாடல்" என்று சொல்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல "பைக் ரேசர்" சரத்குமார். "அஜித் என்னுடைய பைக்கைதான் "ரேசில்" கலந்துகொள்ள பயன்படுத்தினார்" என்று சொல்கிறார் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பெண் பைக் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

"பணக்கார,ஏழை விளையாட்டுன்னு தரம் பிரிக்காதிங்க. எந்த விளையாட்டுக்கும் பணம் மூலதனமா இருக்கமுடியாது. கடின உழைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். அது என்கிட்ட இருக்குன்னு பெருமையா சொல்லிக்கிறேன்" என்று பேசும் அஜித், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாய் சுட்டிகாட்ட வேண்டியவர்தானே?

"எல்லாரும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதில் முட்டி முன்னேறி வெற்றிபெறனும்.சாதிக்கணும். இதுதான் என் ஒவ்வொரு நாள் கனவா இருந்தது. இருந்துகிட்டு இருக்கு" என்று கூறும் அஜித் நிஜமாகவே ஒரு அல்டிமேட் ஸ்டார்தான்.

மே 1 - அவரது பிறந்த நாளன்று, 'தல' ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக "மங்காத்தா" வெளிவருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்சமயம் ஜூன் அல்லது ஜூலைக்கு படத்தின் ரீலீஸ் தள்ளிபோயிருக்கிறது.

"எனது படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இதற்க்கு நான் தகுதியானவன்தானா என நானே யோசிக்கறேன்" என்கிறார் அஜித்.
அந்த தன்னடக்கம்தான் "தல".

"நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் "

ஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்களை திறந்து, அப்படியே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அன்று வந்த நடிகர்கள் முதல் இன்று வந்த நடிகர்களின் "லட்சியமாக" இருக்கிறது.

ஆனால், இப்படிப்பட்ட சினிமா நடிகர்களுக்கு மத்தியில்,"ரசிகர் மன்றங்கள் கலைப்பு" என்று எந்த ஒரு நடிகரும் யோசிக்க கூட தங்குகிற ஒரு விஷயத்தை, தனது பிறந்த நாள் அன்று அறிவித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு ரசிகராக இருப்பதே பெருமை.'தல' தலதான்.



எழுத்தாளர் அமரர்.சுஜாதா (பிறந்த தேதி : 3 - 5 - 1935 )



விண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.

நான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "என் இனிய இயந்தரா" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா??

சைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.

என்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது?

கமலுடன் விக்ரம், மணிரத்னத்துடன் ரோஜா, உயிரே,கன்னத்தில் முத்தமிட்டால் என்று சுஜாதாவின் பங்களிப்பை சொன்னாலும், இயக்குனர் ஷங்கரின் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்கை வகித்து இருக்கிறார் சுஜாதா.

"மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது" என்று "எந்திரன்" உருவான விதம் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.

இந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.

"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, "புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".

மிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.

"என் இனிய இயந்திரா" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது "ஜீன்ஸ்" படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே "எந்திரன்" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

"முதல்வன்" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, "பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.

"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா" என்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த "ஹே ராம்" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.

அதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான "எந்திரன்" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்து இயக்குனர் ஷங்கருக்கு, சுஜாதா வாசகர்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினேன்.

ஆனால், தமிழர் பிரச்சினை குறித்து கருணாநிதி டெல்லிக்கு எழுதிய கடிதம் போல ஆகிவிட்டது இக்கடிதமும்.

முடிந்தவரை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறிவதானே சினிமாக்காரர்களின் வழக்கமான பாணி?.

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் வெளிவந்த சிறந்த புத்தகங்களை நமக்கு அறிமுகம் செய்வார் சுஜாதா.

அந்த மிக சிறந்த பணியை, அமரர் சுஜாதாவின் பெயரால், தற்போது செய்துவருகிறார் 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன்.

ஆனால், உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து வருடம்தோறும் "சுஜாதா விருதுகள்" என்று வழங்கி வருகிறார்கள்.

தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் சிறந்த சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, சிறந்த சிறு பத்திரிக்கை இவற்றோடு..இந்த வருடம் முதல் "சிறந்த வலைப்பதிவு" என்று அவரது பிறந்த நாளான மே 3 அன்று விருது வழங்கபோகிறார்கள்.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தேர்வுகுழுவை அமைத்து உள்ளார்கள்.

2011 வருடம் சுஜாதா விருதுகள் - தேர்வு முடிவுகள்




சிறுகதை பிரிவு :
விருது பெறுபவர் : வண்ணதாசன்.
நூல் : ஒளியிலே தெரிவது.
தேர்வு குழு : இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்

நாவல் பிரிவு:
விருது பெறுபவர் : ஜோ டி குருஸ்
நூல் : கொற்கை
தேர்வு குழு : சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்

கட்டுரை பிரிவு:
விருது பெறுபவர் : அழகிய பெரியவன்
நூல் : பெருகும் வேட்கை
தேர்வு குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணா

கவிதை பிரிவு:
விருது பெறுபவர் : ஸ்ரீநேசன்.
நூல் : ஏரிக்கரையில் வசிப்பவன்
தேர்வு குழு : ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்

சிற்றிதழ் பிரிவு:
விருது பெறுபவர் : மு.அரிகிருஷ்ணன்
நூல் : மணல் வீடு.
தேர்வு குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரான்

இணைய பிரிவு :
விருது பெறுபவர் : யுவகிருஷ்ணா.
இணையம் : www.luckylookonline.com
தேர்வு குழு : சாரு நிவேதிதா,ஷாஜி,தமிழ்மகன்.

இந்த சேவையை தொடர்ந்து கொண்டு, அமரர் சுஜாதாவின் நினைவுகளை பேணிக்காத்து வரும் "உயிர்மை" மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகள் பல. சுஜாதா விருது பெற்ற அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru