Sunday, September 12, 2010

எந்திரன் - அமரர் சுஜாதாவின் திருவடிகளில்...


விண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.

நான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "என் இனிய இயந்தரா" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா??

சைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.

எந்திரன் - ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழின் முதல் சயின்ஸ் பிக்க்ஷன் படமாக வருவதில், சுஜாதாவின் பங்கு நாம் அறிந்ததே. "மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது" என்று ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.

இந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.

"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, "புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".

மிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.

"என் இனிய இயந்திரா" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது "ஜீன்ஸ்" படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே "எந்திரன்" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

"முதல்வன்" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, "பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.

"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா" என்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த "ஹே ராம்" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.

அதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான "எந்திரன்" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்பதே என்னை போன்ற சுஜாதா வாசகர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

என்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது?

"எந்திரன்" படைப்பை அமரர் சுஜாதாவுக்கு சமர்பிப்பாரா இயக்குனர் ஷங்கர்??

-இன்பா

3 comments:

Manikantan said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது

R.Gopi said...

இன்பா...

நம் எழுத்துலக ஆசான் சுஜாதா அவர்களை பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள்....

சுஜாதா அவர்களின் பங்களிப்பு சங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் பளிச்சிடும்....

நீங்கள் சொன்னது போல், ஏற்கனவே எந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது, டைரக்டர் ஷங்கர் சுஜாதா அவர்களை நினைவு கூர்ந்தார்....

Senthilprabu Ponnusamy said...

அருமையான பதிவு.

 
Follow @kadaitheru