Tuesday, September 14, 2010

திரைகடல் ஓடியவர்கள்..


ஷார்ஜாவில் ஒரு தொழிற்ச்சாலையில் நான் பணியாற்றிய சமயத்தில்,அங்கு புதிதாக வேலைக்கு வந்த ஒரு தொழிலாளி, வேலைக்கு வாராமல் தீடிரென்று நின்று விட்டார். அவரை அழைத்து விசாரித்ததில், தனது இரண்டு வயது குழந்தையின் நினைவு வந்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

இப்படி, வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கானோர் பிரிவுதுயரிலும்,ஏக்கங்களிலும் தங்களின் வாழ்வை தொலைத்துவருகின்றனர்.அதுவும், லேபர் வேலையில் இருப்பவர்களின் வாழ்வு மிகவும் கொடுமை.நாள்தோறும் பன்னிரண்டு மணி நேர வேலை மற்றும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு செல்லமுடியும்.

சரி.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் நிலை எப்படி இருக்கிறது. இது தொடர்பாக நான் படித்த ஒரு சர்வே இங்கே தந்து இருக்கிறேன்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்று சொன்னாலும், தமிழ்நாட்டில் இருந்து போய்,வட மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்களும் அல்லது வட மாநில நகரங்களில் செட்டில் ஆகிவிட்டவர்களுமே மன திருப்தியுடன் இல்லை என்கிறார் எனது நண்பர்.

வெளிநாடுகளில்,எந்த வேலையில் இருந்தாலும் குடும்பத்தோடு இருந்தாலும் அவர்கள் மன நிம்மதியோடு இல்லை.வருமானம் குறைந்து இருந்தாலும், கிடைத்த வருவாயில், உறவுகளும் நட்பும் சூழ,சொந்த ஊரில் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை என்று நிரூபிக்கிறது இந்த கருத்துகணிப்பு.

திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும், சொந்த மண்ணுக்கு வந்து சேர்வதே அயல்நாடு வாழ்மக்களின் அன்றாட பிராத்தனை.

- இன்பா

0 comments:

 
Follow @kadaitheru