Saturday, September 11, 2010

தமிழக அரசியலில் ராஜராஜ சோழன்


தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்று பள்ளியில் படித்ததோடு மாணவர்களுக்கு வேறு எதுவும் கற்பிக்க படவில்லை.அதன் பின்னர், எல்லாரும் அறிய விரும்புவது அந்த கோவிலின் அருமை,பெருமைகளை மட்டுமே. ராஜராஜ சோழனை பற்றி அல்ல.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், நான் அந்த கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீச்வரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு. நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும். ஆனால்,அதற்க்கு பதில், சர்ச்சைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன.

சர்ச்சைகள் கோவிலை பற்றி அல்ல. அதை கட்டிய ராஜராஜ சோழன் பற்றி.

முதல் சர்ச்சை:

இதை ஆரம்பித்து வைத்தவர் இடதுசாரி கவிஞர் திரு.இன்குலாப் அவர்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்னால், ராஜராஜ சோழன் சிலையை கோவிலின் முகப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தபோது அவர் பின்வரும் ஒரு கவிதையை எழுதினார்.

ராஜராஜன் சிலைக்காக வருந்துகிறார்.
ராஜராஜன் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகும் முன்னர் ஜிவித்திருந்த இம்மன்னன்
எதை செய்து கிழித்து விட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானம்...

காலனி ஆதிக்க தொழுநோயின் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்.

பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்...

என்று காட்டமாக எழுதினார் இன்குலாப்.

கோவில் கட்டுவதற்கு மக்களை, ஏழைகளை அடிமைகளாக பயன்படுத்தியவர் ராஜராஜ சோழன்.அவருக்கு சிலை மற்றும் மரியாதையை எதற்கு என்பதுதான் கவிஞர் இன்குலாப் மற்றும் அவர் சார்ந்த இடது சாரிகளின் வாதம்.

"இன்று ராஜராஜ சோழனை முன்வைத்து விழா நடத்துவது தேவை இல்லாத ஒன்று. மன்னர் கால பெருமைகளை ஏற்க வைப்பதன் மூலம் 'ராஜராஜன் - கலைஞர்','ராஜேந்திரன் - மு.க.அழகிரி' , 'இளவரசர் - ஸ்டாலின்' என்று வாரிசுகள் ஆட்சி தொடர இந்த சிலை திறப்பை கலைஞர் பயன்படுத்தி கொள்கிறார்" என்றும் விமர்சிக்கிறார் இன்குலாப்.

இரண்டாம் சர்ச்சை:

இன்குலாபின் வாதத்தையாவது ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம் போலிருக்கிறது. தென் மாவட்டங்களில் இருக்கும் இரு பெரும் சாதிக்காரர்கள் ராஜராஜன் தங்களின் சாதியை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி அவ்வபோது போராட்டங்கள் வேறு நடத்தி வருகிறார்கள். முக்குலத்து அமைப்புகள் ராஜராஜன் தேவர் சமுகத்தை சேர்ந்தவர் என்றும், தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜன் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்றும் மோதி வருகிறார்கள்.

நம் தமிழர்களின் வரலாற்று உணர்வு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டி 1000 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அதை கட்டிய ராஜராஜ சோழனுக்கு நம் தமிழக அரசு விழா எடுத்தது சரியா? ராஜராஜனுக்கும், பெரிய கோவிலுக்கும் உள்ளே தொடர்புகள் என்ன?

பின்வரும் தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1,000 வருடங்கள் ஆகின்றன. ஒப்பற்ற இக்கோவிலுக்கு மன்னனும், அவனுடைய தேவியர்களும், உறவினர்களும், அதிகாரிகளும், மற்றவர்களும் தானம் அளித்து மகிழ்ந்தனர்.

இக்கோவில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டதையும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகளின் விவரங்கள் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. திருக்கோவிலில் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்ட செப்புத் திருமேனிகள், நகைகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றின் உயரம், எடை போன்ற விவரங்கள் மிகவும் துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.

இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.


இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.


தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இவ்வேளையில், இக்கோவிலில் இருந்ததாக குறிப்பிடப்படும் ராஜராஜ சோழன் பிரதிமத்தை தமிழகம் பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் கலை வரலாற்றில் சிறப்பான இடம் பெற்று விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னனை விரைவில் கண்டு மகிழ்ந்து போற்றுவோம்! என்று வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறார் திரு.ஸ்ரீதரன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் நம் தமிழனின் கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக இன்று விளங்கிறது.

ஒரு இரவு வேளையில், விளக்குகள் மின்னும் தருணத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை சற்று தொலைவில் நின்றுகொண்டு உற்று நோக்குங்கள்.அப்போது உங்கள் மனதுக்குள் நிகழும், ஆத்மார்த்தமாக தோன்றும் உணர்வு உங்களுக்கு என்ன சொல்லித்தருகிறது??





-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru