Wednesday, July 14, 2010

சொல்லக்கூசுதடா நண்பா!


காவேரி
முல்லை பெரியாறு
நெய்வேலி மின்சாரத்துக்கு
மாற்றாய்...
தமிழகதிற்கு கிடைப்பது
'அல்வா'.

மணல் அள்ளி
மணல் அள்ளி
நூலாராய் போன
பாலாற்றுக்கும்
வந்ததடா சோதனை
ஆந்திர அணை.

தேர்தல் நேரத்தில் மட்டுமேவரும்
வேட்ப்பாளர்களை விட
அடிக்கடி வரும்
நக்சலைட்டுகளை
நம்ப தொடங்கிவிட்டனர்
தருமபுரிக்காரர்கள்.

வெடித்திரிகளே விரல்களென
வாழும்
சிவகாசி மக்கள்.

காசு கொடுத்தாலும்
கிடைக்காத குடிநீருக்காய்..
கிலோ மீட்டர்களை
சைக்கிளில் கடக்கும்
விருதுநகர்வாசிகள்

பசியடக்க
இடுப்பு துணிக்கு கூட
ஈரம் இல்லாமல்
வறண்டுபோன
தென்கோடி தமிழர்கள்.

சொல்லக்கூசுதடா
நண்பா!

சோறுடைத்த சோழநாட்டில்
இன்று
வேற்று மண்ணில் இருந்து
அரிசி இறக்குமதி.

ஈழத்தமிழனின்
குருதிச்சுவை கண்ட
சிங்கள நாய்களுக்கு
இந்தியத்தமிழனின் ரத்தமும் வேண்டுமாம்.

செத்தமீனுக்கு
கிடைக்கும் மரியாதை கூட
கிடைக்க பெறாமல்
சிங்கள துப்பாக்கிகளுக்கு
இரையாகும்
எங்கள்
மீனவ செல்லப்பன்கள்.

இலங்கை கூடாரத்தில்
கொத்தடிமைகளாய்...
கேட்பாரற்று வாழும்(?)
ஒரு தமிழ் கூட்டம்.

காசுக்கு நடிக்கும் நடிகர்களை
'நாளைய முதல்வர்களாய்'..
நினைத்து கொண்டாடும்
இங்கொரு வெட்டிக்கூட்டம்.

டாஸ்மாக்கில் குடித்து
ஒரு ரூபாயில்
புழுத்த அரிசி தின்று
இலவச டிவிக்குள்
தொலைந்து போன இனம்
தமிழ் இனம்.

சொல்வதற்கே வெட்ககேடு.
இங்கே
நானூறு கோடியில்
மொழிக்கு ஒரு மாநாடு.
சுயநல அரசியல்வாதிகள்
காலம்காலமாய்
தமிழனின் சாபக்கேடு.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru