Thursday, June 23, 2011

தள்ளாமை,இயலாமை,முடியாமை


சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள்.

என் நண்பர்கள் அறைக்கு சென்று இருந்தேன். அவர்கள் ரூம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சித்த வைத்திய டாக்டர் என்று ஒருவர் இவ்வாறு பேசினார்.

"என்னுடைய முப்பாட்டானர் சத்யராஜ் இமயமலையில் தவம் செய்தவர். பின்னர் சேலம் வந்து, பல வருடங்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த வைத்திய சாலையை தொடங்கினார். பின்னர் எனது பாட்டனார் ராமராஜ் அவரது ஓலைச்சுவடிகளை (!?) கொண்டு, ஆராய்ச்சியை தொடர்ந்து நவீன படுத்தினார். பின்னர் எனது தந்தையாரும், நானும் மக்கள் சேவையே பெரிது என மருத்துவ சேவையை செய்து வருகிறோம்" என்கிற ரீதியில் பேசினார்.

ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகள், மக்கள் சேவை...முடியலடா சாமி.

வரிசையாக முப்பாட்டனார்,பாட்டனார்,தந்தையார் என படங்களை காட்டினார்கள். இந்த டாக்டரே வெவ்வேறு கெட்டப்புகளில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.

இவர் பேசப்பேச,கஜுரஹோ காமகோவில் சிற்பங்கள் 'கிராபிக்ஸ்' மூலம் பின்னணியில் நகர்வதாக செட்டப் வேறு.

இவர்களுக்கு ஏற்றதுபோல சித்த வைத்திய சாலைகளுக்கு,மலையடிவார பகுதிகளை எப்படித்தான் வளைத்துபோட்டார்களோ?.

அதற்க்கு பின்னர் அழாதகுறையாக அவர் "தமிழ்நாட்டில் உள்ள என் குழந்தைகள் எல்லாம் என்னிடம் வந்து அழுகிறார்கள். மகன்களே, என்னிடம் வாங்க. உங்க குறையை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.

"ஒண்ணும் புரியலையே. என்ன சொல்றார்?" என்றேன் என் நண்பனிடம்.

அவன் சிரித்தபடி சொன்னான்.

"குழந்தைகள் என்று இவர் சொன்னது திருமணமான பெண்களை. குறைபாடு உள்ள மகன்கள் என்று குறிப்பட்டது திருமணமான ஆண்களை. இப்போது புரிகிறதா?".

"டாக்டரின் விஜயம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும், ஏதாவது ஒரு லாட்ஜில் மக்களை சந்திப்பதாக விளம்பரங்கள் வேறு.

விட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எங்கள் சித்த வைத்திய சாலைகளுக்கு கிளைகள் இருக்கிறது என்று சொல்வார்கள் போல.
(என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு வேலை. நாமும்தான் வாழறோம்!)

நிகழ்ச்சியின் முடிவில்,ஒரு தம்பதி நம் டாக்டருக்கு அருகே அமர்ந்து கொண்டு, தங்களின் "சாதனை(?)" கதையை ஒப்பித்துகொண்டு இருந்தார்கள்.

டிவி தொடர்களுக்கு இணையாக, எல்லா சேனல்களிலும் குறிப்பிட்ட நேரங்களில், இவரை போன்று ஏதாவது ஒருவர், தான் ஒரு சித்த வைத்திய நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, என்னமோ ஒரு 'சின்ன வாத்சயனார்' என்று தன்னையே நினைத்துகொண்டு ஆண்மைகுறைபாடுகளுக்குக்கும், தாம்பத்திய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

போதாகுறைக்கு, பத்திரிக்கைகளிலும் ஒரு பக்க விளம்பரம்....திருக்குறள் போன்று, தள்ளாமை,இயலாமை,முடியாமை என்ற தலைப்பில்.

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளில்தான் இது போன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. பெரும்பாலும் அவற்றை ஆண்கள் படிப்பதாலா, இல்லை, அரசியல்வாதிகள் எல்லாருமே ஆண்மையை(?) அடிக்கடி பயன்படுத்துவதாலா?
-என்று ஆராய வேண்டும். (அட, நானும் ஒரு ஆராய்ச்சியாளன்).

இந்த டாக்டர் அடிக்கடி குறிப்பிட்டு, பார்ப்பவர்களை(ஹி ஹி என்னையும்தாங்க!) பயமுறித்திய வார்த்தைகள், அதாவது இதுபோன்று சித்தா டாக்டர்களின் பிசினஸ் டெக்னிகல் வார்த்தைகள்...

'சொப்பன ஸ்கலிதம்', 'கைபழக்கம்', 'சுயஇன்பம்' போன்றவை.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்"

-இதைபோல இவர்கள் பேசுவதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம்??

இது பற்றிய கேள்விகளுக்கு, முறைப்படி படித்து டாக்டர் பட்டம் பெற்று, செக்ஸ்சாலாஜிஸ்ட் ஆக பணிபுரியும் ஒரு மருத்துவர் சொன்ன விளக்கங்கள் இங்கே..

முதலில் சுயஇன்பம்,

சுய இன்பம் என்பது ஒரு வியாதி அல்லது குறைபாடு இல்லை. அதற்க்கு அடிமையாக இருக்க கூடாது. அவ்வளவே என்கிறார் இவர்.

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்? "

அடுத்ததாக சொப்பன ஸ்கலிதம்...அதாவது தூக்கத்தில் விந்து வெளியாதல்.

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை".

அவர் குறிப்பிட்ட மருத்துவ விளக்கங்களை பின்வரும் சுட்டிகளில்(links) காணலாம்.

http://www.ayurvediccure.com/over_masturbation.htm
http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

அறிவியல் உண்மைகள் இப்படி இருக்க, நம் ராஜ் வகையாறக்கள் அனாவசியாமான பயங்களை மக்களிடம் வளர்த்துவிட்டு, 'துட்டு' பார்க்கிறார்கள். டிவி சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு இவர்களது டுபாக்கூர் நிகழ்சிகளை சமூக பொறுப்போ, அக்கறையோ துளியும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறார்கள்.

"செக்ஸ் என்பது 90 சதம் மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி. மீதம் உள்ள வெறும் 10 சதம் மட்டுமே உடலின் பங்கு இருக்கிறது" என்கின்றன அறிவியலும் மனோத்தத்துவமும்.

புற்றீசல் போல ஆண்மை குறைபாடுகளை தீர்த்துவைக்கிறோம் என்று புறப்பட்டு இருக்கும் சித்தவைத்திய 'ராஜ்'கள் தொல்லையிடம் இருந்து பரமஹம்ச ரஞ்சிதானந்தா(!) சுவாமிகள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

சித்த வைத்தியத்தை பற்றி தவறாக கூறவில்லை. சிறப்பான முறைகள் கண்டிப்பாக சித்தவைத்தியத்தில் இருக்கின்றன. சித்தவைத்தியம் என்ற பெயரில் நம் சமுகத்தில்,டிவியில் உலா வரும் டுபாக்கூர் டாக்டர்களை பற்றியே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

சீரியசாக விவாதிப்போம்.

உலக அளவில் இன்று நடைபெறும் குற்றங்கள் 75 சதவீதம் செக்ஸ் சம்பந்தப்பட்டவை என்கிறது ஒரு சர்வே.

இன்னொரு சர்வே இதை விட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பதே. குறிப்பாக, நம் இந்தியாவில்.

சில நாட்களுக்கு முன்னால் கூட, குமரி மாவட்டத்தில் ஒரு சிறுமியை அதிகாரிகள் சிலர் கூடி கற்பழித்துவிட்டனர் என்று செய்தி வெளியானது.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட, எது 'குட் டச் (good touch)' , எது 'பெட் டச் (bad touch)' என்று புரியவைக்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.

டிவி, இன்டர்நெட் என்று நம் வீட்டுக்குளேயே உலகம் வரதொடங்கிவிட்டதால், பள்ளிகுழந்தைகளுக்கு கூட செக்ஸ் சம்பந்தப்பட்ட எக்ஸ்போஷர்(exposure) மிக எளிதாக
கிடைத்துவிடுகிறது.

செக்ஸ் குற்றங்களை கட்டுப்படுத்த, செக்ஸ் பற்றிய பயங்களை போக்க நாம் என்ன செய்யவேண்டும்??

செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை,புரிதலை வளரும் பருவத்தினருக்கு ஏற்ப்படுத்துவது அவசியம் அல்லவா?

இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல தீர்வு....மாணவர்களுக்கு பாலியல் கல்வி என்பதே.

-இன்பா

1 comments:

TamilTechToday said...

A to Z latest online general knowledge Information Portal - www.bharathibtech.com

 
Follow @kadaitheru