Friday, June 10, 2011

டாக்டர் அப்துல்கலாமின் "இளைஞர் இயக்கம்"


சமுக மாற்றத்திற்கான எந்தவொரு நல்ல முயற்சியையும் நம் குழந்தைகளிடம் இருந்து துவங்கவேண்டும்.

"இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள்" ,அதைப்போலவே நாளைய சமுகம் சிறப்பாக இருக்க,இன்றைய குழந்தைகளே அஸ்திவாரம்.

உதாரணதிற்கு, மரம் வளர்ப்பு,மழை நீர் சேகரிப்பு, காடுகள் ஆகியவற்றின் அவசியங்களை பள்ளி குழந்தைகளுக்கு எளிய முறையில் பாடமாக்கினால், வளரும் போதே, அவர்கள் 'பசுமை காதலர்களாக' வளர்வார்கள் என்பது சரிதானே?

"ஓடி விளையாடு பாப்பா" என்று மகாகவி பாரதி, தனது அறிவுரையை குழந்தைகளிடம் இருந்து துவங்கினான்.

அதுபோலவே, டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள், எப்போதும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீதே தனது கவனத்தை, அக்கறையை செலுத்திவருகிறார்.

இளைஞர் இயக்கம் - இதுதான் டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள் துவங்கி இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு புதிய இயக்கம்.

இதன் முதன்மை நோக்கம்...இன்று நாட்டில் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதே.

இளைஞர் இயக்கம் மற்றும் அதன் செயல்திட்டங்கள் என்ன? அது எவ்வாறு செயல்படபோகிறது?

இக்கேள்விகள் குறித்து திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் சமிபத்தில் ஆற்றிய உரை...



"மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான்.

எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர்.

லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும்.

ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது.

நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். "

- என்று விளக்கம் தரும் திரு.கலாம், அவருடைய இயக்கத்தில் சேருமாறு நமது இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

"இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்." என்கிறார் கலாம்.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்னும் பாடல்வரிகள்தான் எத்தனை உண்மை. நல்ல பெற்றோர்களிடம் இருந்து வரும் குழந்தைகள் எப்படி ஊழல் அரசியல்வாதிகளாக, அயோக்கியர்களாக,திருடர்களாக உருவாக முடியும்??

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால், மெழுகுவர்த்திகள் ஏற்றிக்கொண்டே மெளனமாக அமர்வதால், ஊழலை ஒழித்துவிடுவது எப்படி சாத்தியம்?

அன்ன ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களின் நோக்கம் சிறப்பானதே என்றாலும், அவர்களின் போராட்டமுறைகள் அந்த நோக்கத்தை திசைதிருப்புவதர்க்கே
வாய்ப்புகள் அதிகம்.


நாம் ஏற்ற வேண்டியது மெழுகுவர்த்திகள் இல்லை. தீப்பந்தங்கள். அதற்க்கு தேவை...ஓவ்வொரு இளைஞன் மனதிலும் எழும் ஊழலுக்கு எதிரான தீப்பொறி.

"நாடு மாறவேண்டுமானால் வீடு மாறவேண்டும்" என்னும் திரு.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையே உன்னதமானது. குறிப்பாக ஆக்கப்பூர்வமானது.

அப்துல்கலாம் அவர்களின் "இளைஞர் இயக்கம்" வெற்றிபெற வாழ்த்துவோம். நாமும்,நம்மால் முடிந்த பங்களிப்பை தருவோம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru