Monday, February 28, 2011

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கு,

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கு,

இந்தியாவுக்கு ஒரு உள்துறை அமைச்சர் இருப்பதும், அது நீங்கள்தான் என்பதும் பல தருணங்களில் எங்களுக்கு நினைவே வருவதில்லை. அந்த அளவுக்கு இருக்கின்றன உங்கள் 'செயல்பாடுகள்'.

"யார் டம்மி பீஸ்" -நீங்களா, மன்மோகன் சிங்கா என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால், நிச்சியமாக வெற்றிமாலை உங்களுக்கே.

"தமிழகத்தை தொழில் துறையில் முதலிடம் பிடிக்க செய்வோம்" என்று அறிவுஜீவியாய், புள்ளிவிவரங்களை அடுக்கி கொண்டே பேசினீர்கள்.

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது " - இந்த பழமொழிக்கு உங்களைவிட சிறந்த உதாரணம் இந்த உலகத்தில் இல்லை, திரு. சிதம்பரம்.

தமிழகத்தில், அடுத்தடுத்து இரண்டு மீனவர்கள், இலங்கை படையினரால் சுட்டிகொல்லப்பட்ட செய்தியாவது உங்களை எட்டியதா?

அப்போது "தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனபோக்கை கடைபிடிக்கிறது" இப்படி சொன்னவர் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைவர் நிதின் கட்க்காரி. இந்திய கம்யூனிஸ்ட் பிரகாஷ் காரட் கூட இதுபற்றி கருத்து தெரிவித்தார்.

ஆனால், தமிழரான, அதுவும் உள்துறை அமைச்சரான நீங்கள் கண்டன அறிக்கையை விடுங்கள்,இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே??

நமக்கு சம்மந்தமே இல்லாத சுஷ்மா சுவராஜ் அவர்கள் பாதிக்கபட்ட மீனவ குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதாக அறிவித்தார்.

நீங்கள் ராமேஸ்வரம், நாகை பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பேசினார்களா?

ஆனால், கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், இப்போது தமிழ்நாட்டு மண்ணை மிதித்து இருக்கீர்கள். உங்கள் 'திருவாய்' இப்போது திறந்து இருக்கிறது.

எதற்கு தெரியுமா? காங்கிரஸ்சுக்கு 81 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கருணாநிதியிடம் பேரம் பேசுவதற்காக மட்டும்.

இப்படி நீங்கள் பேரம் பேசிகொண்டிருந்த அதே நாளில் கூட, கச்சதீவில் மீன் பிடித்து கொண்டிருந்த நமது மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மிரட்டி, விரட்டி அடித்து இருக்கிறார்கள்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நக்சலைட்டுகள், காஷ்மீரில் ஓயாத தீவிரவாதம், கடுமையான விலைவாசி உயர்வு, சீனாவின் அத்துமீறல்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்க வேண்டி காத்துகொண்டு இருக்கிறது.

உள்துறை அமைச்சரான நீங்கள், இங்கே சென்னையில்,அண்ணா அறிவாலயத்தில் "சீட்டுக்கு" கருணாநிதி அண்ட் கோவின் கால்களை விடிய விடிய பிடித்துகொண்டு "பேரம்" பேசிக்கொண்டு இருப்பது கேவலம் என்றால், உங்களை இப்படி "மாடு பிடிக்க" அனுப்பிய உங்கள் காங்கிரஸ் தலைமை அதைவிட கேவலம்.

மீனவர் மீதான தாக்குதல் குறித்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை சென்ற நிருபமா, ஏன் சென்னைக்கு வந்து பின் கொழும்பு செல்லவேண்டும்?? டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல நேரடிவிமானம் இல்லையா? எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்று வடஇந்திய மீடியா ஏன் பிரதமர் மன்மோகன் சிங் கூட பேசுகிறார். ஏன் இந்திய மீனவர்கள் என்று அங்கே யாரும் சொல்வதில்லை. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம்தான் என்று தெரியவில்லை போலும்.

தமிழரான உங்களுக்கும், மற்ற தமிழக எம்.பிக்களுக்கும் எந்த அக்கறையும், பொறுப்பும் இல்லாதபோது, வட இந்தியர்களை குறை சொல்லி என்ன பயன்?

இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறதே, இது பற்றி இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன, அது பற்றிய விவரங்கள் என்னென்ன, இது விஷயமாக இலங்கை அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

-இப்படி எல்லாம் தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பி இருப்பவர்கள் யார் தெரியுமா? ராஜஸ்தானைச் சேர்ந்த பரத்ராம் மெஹ்வால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஏக்நாத் கெய்க்வாட் என்ற பா.ஜ., எம்.பி.,க்கள்.

தயவுசெய்து இனிமேல் நீங்கள் டெல்லியில் வேட்டிகட்டி கொண்டு, தமிழராக வலம் வரவேண்டாம் மிஸ்டர் சிதம்பரம்.

அது, எங்கள் தமிழ்நாட்டு மீனவ சமுதாயத்துக்கு வெட்ககேடு.

சிவகங்கையில் உள்ள உங்கள் வீட்டில், மீனவ பெண்கள் எல்லாம் புடவைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்தார்களாமே.வேண்டுமானால், அதில் இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து உடுத்திகொள்ளுங்கள்.

இந்த கோரிக்கை உங்களுக்கு மட்டுமல்ல. உங்களை போலவே ஊழல் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத அனைத்து தமிழக எம்.பி க்களுக்கும் பொதுவானது.

இது,ஒட்டுமொத்த தமிழக மீனவமக்களின் சார்பான கோரிக்கை.

-இன்பா

1 comments:

R.Gopi said...

இன்பா...

ப.சிதம்பரத்தை மற்றும் இந்த விஷயத்தில் குறை கூறி பயனில்லை..

“தல” காலை டிஃபன் முடிச்சுட்டு ரெண்டு பக்கமும் ஏர்கூலர் வச்சு படுத்து, 3 மணி நேரம் கழிச்சு சாப்பாட்டு நேரத்துக்கு எழுந்து வீட்டுக்கு போயிட்டாரு... என்னய்யான்னு கேட்டா, இலங்கையில அமைதி திரும்பிடிச்சுன்னு சொன்னாரு..

அப்புறம் ஒரு நாள் மழை பெய்யறப்போ, எல்லாரையும் கூப்பிட்டு மனித சங்கிலி போராட்டம் நடத்த சொல்லி, அதை காருக்குள்ள உட்கார்ந்து பார்த்தபடியே எல்லாரையும் பார்த்து ஆட்டிட்டு (கைய தான்) போனாரு...

இலங்கை தமிழர் பிரச்சனை மத்திய அரசுக்கு நன்கு விளங்கும் வகையில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பிரதமர் அலுவலகத்திற்கு தந்தி அனுப்புங்கள், நானும் லெட்டர் போடுகிறேன் என்றார்... பின், கனிமொழி, அழகிரி ஆகியோருக்கு பதவி வாங்க வேண்டும் என்றவுடன் விமானம் ஏறி டெல்லி சென்றார்..

இது போல், தமிழன காவலர் என்று சொல்லிக்கொண்டு அயோக்கியத்தனம் செய்து கொண்டு திரியும் “திருக்குவளை தீயசக்தி” (பெயர் உபயம் : ஜெ.ஜெயலலிதா) பற்றி காறி துப்பி எழுதுங்க... கூடவே ப.சிதம்பரத்தையும் இழுத்து கேள்வி கேளுங்க இன்பா...

 
Follow @kadaitheru