Thursday, March 27, 2014

பச்சமுத்து, SRM பாரிவேந்தர் - கண்ணை கட்டும் காட்டாங்கொளத்தூர் கதை



யார் இந்த பாரிவேந்தர் என்கிற S.R.M பச்சைமுத்து !! கிழியும் முகத்திரை!

சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். 

கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி விசாரணை நடத்தவோ, தேடுதல் நடவடிக்கை எடுக்கவோ வருமான வரித்துறையின் ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோன்றவில்லை.

காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம்.

சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

Nightingale Matriculation Higher Secondary School,
Valliammai Polytechnic Institute,
SRM Engineering College,
SRM College of Nursing and SRM College of Pharmacy,
SRM School of Nursing and SRM College of Physiotherapy,
SRM Institute of Hotel Management,
SRM Arts & Science,
SRM Polytechnic Institute,
Easwari Engineering College,
SRM College of Occupational Therapy,
SRM Institute of Management & Technology,
Valliammai Engineering College,
SRM Institute of Science and Technology,
SRM Dental College,
SRM Medical College Hospital and Research Centre,
SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
Chennai Medical College, Trichy
Inter Disciplinary School of Indian System of Medicine,
TRP Engineering College, Trichy,
Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து.

மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே ‘உருவாக்கும்’ தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
‘தர’ வரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு கட்டண பட்டியல் இருந்தாலும் எந்த படிப்புக்கு எவ்வளவு நன்கொடை என்று அதிகாரபூர்வ பட்டியல் இல்லை. மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நன்கொடை வாங்குவது சட்ட விரோதமானது. இருந்தாலும் ஒரு பொறியியல் சீட்டுக்கு ரூ 20 லட்சம் வரை, மெடிக்கல் சீட்டுக்கு ரூ 80 லட்சம் வரை, எம்.பி.ஏ. சீட்டுக்கு ரூ 15 லட்சம் வரை என்று சீட்டுகள் ஏலம் விடப்படுகின்றன. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் ஏஜென்டுகள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.

நாடெங்கிலும் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை விற்று, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்து, பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு தமது குழந்தைகளை படிக்க சேர்க்கிறார்கள். நன்கொடைக்கு மே
ல் கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும் நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமும் மற்ற செலவுகளும் சேர்த்து ரூ 4 முதல் ரூ 6 லட்சம் முதலீடாக போட வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் சேர்த்துக் கொள்ளும் எஸ்ஆர்எம் குழுமம் சேர்க்கை காலங்களில் மட்டும் சராசரியாக குறைந்தது ரூ 200 கோடி கருப்பு பணத்தை கையாளுகிறது என்று மதிப்பிடலாம். இந்தப் பணத்தை திரட்டிக் கொண்டு வரும் பெற்றோர்களும் சரி, அதை வாங்கி பத்திரிகை, தொலைக்காட்சி, அரசியல் கட்சி, நில ஆக்கிரமிப்பு என்று திருப்பி விடும் பச்சமுத்துவும் சரி வருமான வரிச் சட்டங்களை கழிப்பறை காகிதம் போல வேண்டுமானால் மதித்திருப்பார்கள். அதனால்தான் வருமான வரித் துறை அதிகாரிகளும், பல டஜன் அரசுத் துறை கண்காணிப்பாளர்களும் இது வரை விழித்துக் கொள்ளவில்லை.

இதைத் தவிர ஆண்டு முழுவதும் 33,000 மாணவர்களின் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்குமிட கட்டணம் என்று ரூ 300 கோடிக்கு மேல் புழங்கும் இந்த நிறுவனத்தை தனி ஆளாக கட்டுப்படுத்துகிறார் பாரி வேந்தர் பச்சமுத்து.

கடந்த ஜனவரி மாதம் பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய பல் மருத்துவக் கழகத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்ட மேல்மருவத்தூர் அம்மா குடும்பம் போன்ற மிடில் லெவல் கிரிமினல்களுக்கும் சரி, இப்போது ரெய்டு நடத்தப்பட்ட பச்சமுத்து குடும்பம் போன்ற பெரிய லெவல் கிரிமினல்களுக்கும் சரி சட்டங்களால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் தெரியும்.
அதனால்தானோ என்னவோ, உண்மைகளை உடனக்குடன் தரும், முக்கிய நிகழ்வுகளை ஹெலிகாப்டர் அனுப்பி கவர் செய்யும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி அலுவலகம் உட்பட குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும், நன்கொடை என்ற பெயரில் பெற்ற கருப்பு பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பற்றிய விபரங்களை தனது கேமராக்களில் பதிவு செய்யவில்லை.
 
இனி இந்தத் தொழில்முறைத் திருடர்கள் ஆளும் கட்சிக்கான மாமூல்களையும், ஜால்ரா செய்திகளையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள்!


-எழுதியவர் முரளிகிருஷ்ணன்

1 comments:

Anonymous said...

Hats off bro for such a bravo writing

 
Follow @kadaitheru