Tuesday, August 6, 2013

காதலன் - இறந்தும் இருக்கிறான்


இங்கே
காதல் நாடகத்தின்
இறுதிக்காட்சி
ஒரு
இறுதி ஊர்வலத்தில்
முடிந்துவிட்டது,

இதோ
தலை சிதைந்து
வீழ்ந்துவிட்டது
காதல்.

சாதியின்
முரட்டு 'பூட்ஸ்" கால்களில்
மிதிபட்டு நசுங்கிவிட்டது
தருமபுரியில் பூத்த
ஒரு காதல்மலர்.

காதலன்
இறந்தும் இருக்கிறான்.
காதலியோ
இருந்தும் இறந்துவிட்டாள்.

மொத்ததில் இங்கே
மரித்துவிட்டது காதல்.
பிழைத்துவிட்டது சாதி.

காதல் இளவரசனே!

உனக்காக கட்டப்பட்டுவிட்டன
எத்தனையோ உள்ளங்களில்
தாஜ்மகால்கள்.

காதல் போயின்
சாதல் என்று
மகாகவியின் வாக்குக்கு
வாழவளித்தவன் நீ.

இனி தமிழுக்கு
உன் காதல்
ஆறாம் பெருங்காப்பியம்.

பிறப்பு தொடக்கம்.
இறப்பு முடிவு.

வாழ்வெனும் நாடகத்தில்
காதல்
இடையே வந்துபோகும்
காட்சிதான்.

காட்சிகள் மாறலாம்.
உன் மரணம் உட்பட
எந்த சோகத்தையும்
காலம் ஆற்றலாம்.

இரண்டு நூறு வீடுகளை
எரித்ததும்
இரண்டு உயிர்களை
குடித்தும்
இன்னமும் அடங்காவெறியுடன்
அலைகிறதடா சாதி.

இனி உருவாகும்
இளவரசன்களும்,திவ்யாக்களும்
சாதி அரக்கனுக்கு
சமாதி கட்டட்டும்.
சமூகத்தின் முன்
கைகோர்த்து வாழ்ந்துகாட்டி.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru