Monday, October 12, 2015

கவி'விளம்பர'பேரரசு வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

"திராவிட இயக்கத்தின் இலக்கிய வெளியில் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் படைத்துக் காட்டியவற்றுள் சிறந்த சிறுகதைகளையும், புறந்தள்ளுவதை விமர்சன மோசடியென்றே கண்டிக்கிறேன்" என்று இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் வைரமுத்து.

"திருமணம் என்பதே வெறும் ஆடம்பரம்" என்று கவிதை எழுதிவிட்டு, திருமண மண்டபம் கட்டிய வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழா என்னும் விளம்பர திருவிழாவில், அவர் மறைந்த எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களுக்கு இழைத்த துரோகம் வெளிவராமல் போய்விட்டது.

இந்த சிறுகதை நூலுக்கு  ஒரு பாராட்டு கடிதம் வாங்குவதற்க்காக ஜெயகாந்தன் அவர்கள் படுத்தபடுக்கையில் இருந்தபோது,வைரமுத்து ஆடிய நாடகத்தை அமரர் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி, தனது வலைதளத்தில் எழுதி இருக்கிறார்.

"சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

 அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது"

.- என்று கடிந்து இருக்கிறார் தீபலட்சுமி.

அடையாளம் அற்று, அங்கீகாரம் அற்று எவ்வளவோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வறுமையில் வாடும் கூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள்.

வசதி இருந்தால், எதை எழுதினாலும் அங்கீகாரமும், விளம்பரமும் தேடி வரும் என்பதற்க்கு வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழா
ஒரு உதாரணம்.

வைரமுத்து - கவி'விளம்பர'பேரரசு

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru