Thursday, January 13, 2011

இன்று..இந்த நிமிடம்...இலங்கையில் தமிழர்கள்??

இலங்கையில் என்ன அதிரடி அரசியல் செய்தாலும் மகிந்த ராஜபக்ச என்ற குடும்பத்தை தாண்டி ஒரு துரும்பைக்கூட எவராலும் எடுத்து போட முடியாத படிக்குதான் எல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் ஒன்றுமில்லை ஒன்று மகிந்த ராஸபக்சவுக்கு சார்பானவர்கள் அல்லது மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக போகிறவர்கள். எதிரானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிரானவர்களுக்காக என்று எப்பொழுதோ கட்டப்பட்ட சிறைச்சாலைகள் இன்னும் கதவை அகலமாக திறந்தே வைத்திருக்கின்றன. அது பெரிய ராணுவ தளபதி என்று சர்வதேச புகழ் பெற்றிருந்தாலும் அவர் சிறைக்குள்ளேதான் இருக்க வேண்டும்.

அண்மையில் மகிந்த ராஜபக்ச தன்னை மரபு வழி இராஜ பரம்பரைக்காரர் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி வருகிறார். தானும் இலங்கையை முன்பு ஆட்சி செய்த இராஜசிங்க மன்னனை போன்று குரக்கன் மா பண்டங்களைதான் விரும்பி சாப்பிடுவதாக குறிப்பிட்டு தன்னையும் ஒரு அரசனாக நாட்டு மக்கள் கருத வேண்டும் என்று சாடை காட்டியிருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசர் காலத்தில் மரக்கன்றுகளை இலங்கையில் நட்ட் பாரம்பரியம் அரச பாரம்பரியம் என்றும் அதனை தானும் அரசர்களைப்போல செய்வதாகவும் சொல்லி பெருமைப்பட்டார். மகிந்த ராஜபக்ச தனக்கு ஒவ்வாதவர்களை அரசர்மார் செய்வது போல சிறையில்தள்ளுவதும் அவர்களை சித்திரவதை செய்வதையும் அவரது ஆட்சியில் தொடர்ந்து கண்;டு வருகிறோம்.

இலவச கல்விக்கெதிரான மாணவர் கிளர்ச்சி கடந்தமாதம் இலங்கையில் பெரும் போராட்டமாக வெடித்து கிட்டத்தட்ட கொழும்பையே ஸ்தம்பிக்க செய்திரந்தது. இதனை மகிந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கிறது.

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் 176 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புகளில் பங்கு பற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 27 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இனிமேல் போராட்டங்களில் பங்குபெற மாட்டோம் என்று கைப்பட கடிதம் எழுதி பாதுகாப்பு அமைச்சர் வாங்கியிருக்கிறார்.

இந்த போராட்டங்களின் போது பொலிசாரால் தாக்கப்பட்டு நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாணவர் போராட்டங்களை அடக்க வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் உயர் கல்வி அமைச்சும் அரசாங்கமும் அதற்கென அடக்குமுறை சட்டத்துக்கொப்பான பகிடிவதை மற்றும் வன்முறைத் தடுப்பு சட்டத்தின் கீழும், பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் இலகுவில் பிணையில் வெளிவர முடியாதபடியான சட்ட ஏற்பாடுகள் இருப்பதன் காரணமாக அதனைப் பயன்படுத்தி மாணவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும் மாணவர் போராட்டங்கள் தணிவதாக இல்லை. இப்பொழுது மாணவர் தலைவர் உதுல் பிரேமரட்ண கைதசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இப்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் கைதுக்கு பிறகு அவர் வாய் திறக்கிறார் இல்லை.

ஊவா-வெல்லஸ்ஸை பல்கலைக்கழகத்தில் எதுவிதமான தொழிற்சங்கங்களோ, மாணவர் அமைப்புக்களோ உருவாக்கப்படாதவாறு தடுப்பதிலும் மகிந்த அரசாங்கம் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றது. அதற்கென கலாசார உத்தியோகத்தர்கள் எனும் பெயரில் அரசாங்கத்தின் உளவாளிகள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.என்று மாணவர்கள் சொல்கின்றனர். இப்பொழுது மேலதிகமாக அரசை விமர்சிப்பவர்கள் எதிர்க்கட்சிகளை கண்காணிப்பதற்கென்றே புதிய உளவாளிகள் பிரிவு ஒன்றை அரசாங்கம் கட்டி அமைத்திருக்கிறது. அடக்குமுறைச் சட்டங்களின் பிரகாரம் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நின்று பேச முடியாது தடுக்கப்படுகின்றனர்.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைவதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

மாணவிகளை மட்டும் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள விடுதிகளில் தங்க வைத்து மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மாணவர் போராட்டங்களைத் தணிக்கும் வழி வகைகள் குறித்தும் மகிந்த அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

பொலிசாரை ஏவிவிட்டு தமக்கெதிரானவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறை வழியை அரசாங்கம் தீவிரமாக செய்யப் போகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கூட அந்த வழியிலேயே அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இப்பொழுது பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் 1989ம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக தமிழ் மாணவர்களின் உரிமைகள் குறித்து பகிரங்கமாக குரல் கொடுக்க முன்வந்துள்ளமை ஒர முக்கியமான விடயமாக பார்க்கபடுகிறது. இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். அனைத்துப் பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் உந்துல் பிரேமரத்ன அந்த வகையில் குறிப்பிடத்தக்க முன்மாதிரியொன்றை வெளிக்காட்டி வருகின்றார்.

அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் என்றாலும் கைது செய்து சிறையில் தள்ள அரசாங்கம் தயங்காது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அண்மையில் எச்சரித்திருந்தார். இது பெரும் அராஜகத்தின் வெளிப்பாடாகும்.

1994ம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கடைசி கட்டத்தில் கூட அரசாங்கத்துக்கெதிரான மாணவர்கள் போராட்டங்கள் இதே வடிவில் தான் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் அணி திரண்ட மாணவர்கள் இன்னும் பல அமைப்புகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் வெற்றி கண்டனர.;

இவ்வளவுகாலமும் புலிகளை காரணம் காட்டி நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எதனையும் செய்யாத அரசாங்கம் இப்பொழுது ஏழை மக்களின் நாளாந்த உணவாக உட்கொள்ளும் பாணை (பிறட்) கூட மலிவு விலைக்கு கொடுக்க தயாராக இல்லை. இலங்கையில் தேர்தல் காலங்கள் பாணுக்கு(பிரட்) முக்கிய பங்கு இருக்கிறது. பாணும்(பிரட்) மைசூர் பருப்பும் இலங்கையில் உழைப்பாளிகள் வறியவர்களின் பிரதான உணவு. பாணின் விலையை குறைப்போம் பருப்பின் விலையை குறைப்போம் என்றுதான் சிங்கள அரசாங்கங்கள் தேர்தல் வாக்குறுதியை கொடுத்து வாக்குகளை வாங்கும் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் பழையபடிக்கு பாணின் விலையை ஏற்றிவிடும் இம்முறையும் அப்படித்தான் மகிந்த அரசாங்கம் செய்திருக்கிறது. இதுவும் பாட்டாளி மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியாக மாறிக்கொண்டு வருகிறது. பொறுங்கள்; புலிகளை ஒழித்துவிட்டு இலங்கையை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று மகிந்த ராஜபக்ச மக்களை கேட்டிருந்தார். ஆனால் இப்பொழுது சிங்கப்பூர் வேண்டாம் நிம்மதியாக இருக்க விடுங்கள். என்று சிங்கள மக்கள் கேட்கும் நிலமைக்கு நாடு போய்க்கொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச இன்னொன்றையும் வலுவான திட்டத்துடன் செய்துவருகிறார.; அதுதான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மத்தியில் சிங்கள மக்களை கலப்பது. அதற்காக முதலில் இடிபாடடைந்த யாழ் புகையிரத நிலையத்திற்கு சிங்கள குடும்பங்களை தெற்குப்பகுதியில் இருந்து அனுப்பிவைத்தார்கள். அவர்கள் சொன்னார்கள் தாங்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்த சிங்களவர்கள் என்று. அத்துடன் அவர்கள் நன்றாக தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள.; அங்கு ஒரு மாதமாக தங்க வைத்த விட்டு சிங்களக் குடும்பங்களில் 32 குடும்பங்கள் நவம்பர்மாதம் செவ்வாய்கிழமை இரவு 9.30 அளவில் இராணுவப் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தில் நாவற்குழி பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியேற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபருக்கோ யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகங்களுக்கு எதுவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லையென அதிகாரிகள் சொல்கின்றனர்.

சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு புத்திஜீவிகள்வரை பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த சிங்கள குடியேற்றம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்கள் இப் பகுதியில் வீடுகள் கட்டுகிறார்கள்; இனி புத்த விகாரை ஒன்று வரும் சிங்கள மயப்படுத்தலின் ஆரம்பம்தான் இந்த விடயம். யாழ்ப்பாணம் இனி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற எண்ணம் தமிழர்களிடம் வர வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்.

இனி தட்டிக்கேட்க தமிழர் தரப்பில் யாருமில்லை என்பது அரசுக்கு ஆறுதலான விசயம் தானே.


(இலங்கை தமிழர் திரு.இளைய அப்துல்லா எழுதி, உயிர்மையில் வெளியான ஒரு கட்டுரை).

0 comments:

 
Follow @kadaitheru