Thursday, November 26, 2015

ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (25.11.2015)

இந்த வார ஆனந்த விகடனில்(25.11.2015)  பிரசுரமான எனது பத்து செகண்ட் கதை(10 second story)


Friday, November 13, 2015

வேதாளம் vs. தூங்காவனம் - வெற்றி யாருக்கு?


கத்தி,லிங்கா படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து ஒட்டுமொத்த திரை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அஜித்.

கொட்டும் மழை. போட்டிக்கு கமல் படம் என்னும் தடைகளை கடந்த இந்த சாதனை ரஜினிக்கு அப்புறம் அஜித்துக்குதான் தமிழகத்தில் "மாஸ்"  என நிருபித்து இருக்கிறது வேதாளம்.

"ஒரே வார்த்தையில் சொல்வதானால் " திருப்தி " .....படம் பார்க்கும் அனைவருக்குமே அல்லது அதிக சதவிகித ரசிகர்களுக்கு ....... திருப்தி அளிக்கக் கூடிய படம்தான் வேதாளம்" என்று எழுதி இருக்கிறார் நீண்ட வருடங்களாக திரை உலகில் பணியாற்றி வரும் திரு.வெங்கட் சுபா அவர்கள்.

"சிலர்.... இப்படம் சுமார் ... மொக்க ... ரொம்ப பழசு ... செயற்கைத்தனம் அதிகம் ... அஜீத் மிகவும் வயதானவராக தோன்றுகிறார். சுருதி ஹாசன் வழக்கம் போல பொம்மை போல உடை அணிந்து ஆபாசத்தை தொடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ... முக்கியம் இல்லாத கதாபாத்திரத்தில் முந்தி முந்தி வந்து நிற்கிறார். சூரி ஒரு அளவுக்கு மேலே போர் அடிக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஆதிக்கம் செலுத்த அஜீத் வசனக்களில் போடும் சண்டையே அதிகம் என தோன்றுகிறது..... பழைய சரத்குமார் ஏ வெங்கதேஷ் படக் கதைதான் புதிய முலாம் பூசப் பட்டிருக்கிறது... வில்லன்கள் பின்னணியை ஏத்தி வைத்த அளவுக்கு காட்சிகள் அமைக்கப் படவில்லை ... இடைவேளைக்காட்சியில் இருந்த விறுவிறுப்பு உச்சக் கட்ட காட்சியில் இல்லை .... இப்படியும் இன்னமும் கூட ஆயிரம் கருத்துகளை முன் வைக்கலாம்...

ஆனால் இப்படத்தில் அஜீத் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..... ஒரு வணிக ரீதியில் வெற்றி பெற இப்படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்த்திருக்கிறார். இன்றைய இளைஞர்களின் இசைக்கலைஞன் அனிரூத் இசைக்கு செம குத்து ஆட்டம் ஆடி இருக்கிறார். ஏ எம் ரத்னம் பின்னணியில் இருந்து தயாரிக்கப் பட்ட இப்படத்திற்கு பிரும்மாண்டமான காட்சிகள் பலம்.... இயக்குனர் சிறுத்தை சிவா ... உடன் கதை எழுதி இருக்கும் ஆதி நாராயணா இருவரும் சில பல தெலுங்கு படங்களில் இருக்கும் வேகம் தங்கை செண்டிமெண்ட் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மசாலா அம்சங்கள் அனைத்தையும் இந்த தமிழ் படத்தில் கொண்டு வர நினைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தாண்டி இந்த தீபாவளி நாளில் மட்டும் சுமார் 15 கோடி வசூலை எட்டி இருக்கிறது வேதாளம் சென்ற தீபாவளிக்கு வந்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சி விட்டது ... தூங்காவனத்தை விட பல மடங்கு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது"

என்றும் திரு.வெங்கட் சுபா தெரிவிக்கிறார்.

அவரின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் வேதாளம் ஒடும் திரை அரங்குகளில் குடும்ப சகிதமாக கூட்டத்தை காணமுடிகிறது.

வேதாளம் எல்லா தரப்பையும் சென்றடைந்து இருக்கிறது.

ஆனால் தூங்காவனம் 'எ' சென்டர்களில் எடுபட்ட அளவுக்கு, மற்ற பி சென்டர்களில் எடுபடவில்லை.

தூங்காவனம் சுமாராக ஓடினாலும் லாபம் நிச்சயம் காரணம் குறைந்த விலை.

வெறும் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சன் டிவி உரிமை, அமெரிக்க வசூல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது......தூங்காவனம், முதலுக்கு மோசமில்லாமல் ஒரளவுக்கு லாபம் இருக்கும்.

வேதாளம் சூப்பராக ஓடினாலும் சுமார் லாபம்தான் சாத்தியம், காரணம் மிக அதிக விலை.

தற்போதைய நிலவரப்படி படம் சந்தேகமில்லாமல் வேதாளம்
'ஹிட்'தான்,  ஆனால் 'மெகா ஹிட்டா' என அறிய, நாம் இன்னும் ஒரு வாரமாகவாவது காத்திருக்க வேண்டும்.

படத்துக்கு பெரும் போட்டியாக வந்த தூங்காவனம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வேதாளத்துக்கு முன் பெரிதாக தாக்குபிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு படங்களுக்குமே பெரும் போட்டியாக இருக்கிறது....விடாது பெய்யும் மழை.

-இன்பா

Thursday, November 5, 2015

மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள்

“உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம்.

தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன.


பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும்,அதிலும் முன்னணில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில்.

பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.

சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது,உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.

"ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம்.

டிவி சேனல்கள்,இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும்,தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும்,வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.

அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள்.

சமூகத்தில் மாற்றங்களும்,இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்,

தவறான வழிகளில் செல்வதாகவும்.சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுற்றத்தோடும்,உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும்,இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிடஅதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர்.

இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.

உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.

இன்று நடனம் என்ற பெயரில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாச கூத்துக்கள் அரங்கற்ற பட்டு வருகின்றன. குடிப்பதும், கள்ள உறவுகளும் இன்று வரும் மெகா தொடர்களில் சகஜம். தங்கள் வீட்டு குழந்தைகளும் டிவி பார்க்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த டிவி சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு இல்லாதது ஏன்?

கீழ்த்தரமான உறவுகள்,சதி திட்டம் தீட்டும் வில்லிகள் என சொல்லிவைத்தாற் போல எல்லா சீரியல்களும் கிட்டத்தட்ட ஒரே விதமான கதையம்சத்தோடுதான் இருக்கின்றன.

நடிகர்,நடிகைகளும்,டைட்டிலும்தான் மாறுபடுகின்றன.

டிவி தொடர்களுக்கு, குறிப்பாக சன் டிவியில் வரும் மெகா தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள், உடனடியாக எதாவது ஒரு மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆவது, அவர்கள் தமிழ் நாட்டிற்க்கு செய்யும் சிறந்த நல்ல காரியமாகும்.

சினிமாவை போலவே, சின்ன திரைக்கு எப்போது, எந்த அரசு தணிக்கை கொண்டு வர போகிறது?

-இன்பா

 
Follow @kadaitheru